சினி நிகழ்வுகள்திரை விமர்சனம்

புராஜக்ட் சி-சாப்டர் 2 திரை விமர்சனம்

சரியான வேலை கிடைக்காமல் வாழ்க்கைப் போராட்டம் நடத்தும் பட்டதாரி இளைஞன் ஸ்ரீக்கு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் பெரியவர் ஒருவரை கவனித்துக் கொள்ளும் வேலை கிடைக்கிறது. சில நாட்களில் அந்த பெரியவர், பிரபல விஞ்ஞானி என்றும், அவர் கண்டுபிடித்த அபூர்வ மருந்தை பல லட்சம் கொடுத்து வாங்க பலர் தயாராக இருப்பதையும் தெரிந்து கொள்பவர், அந்த மருந்துகளை விற்பனை செய்து லட்சங்களை குவிக்கிறார்.
இதை மோப்பம் பிடித்த அந்த வீட்டு வேலைக்காரி வசுதா கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீயிடம் இருக்கும் பணத்தை அபகரிக்க திட்டமிடுகிறார்.

இன்னொரு பக்கம் விஞ்ஞானியின் மருந்து பார்முலாவை கைப்பற்ற மருத்துவரான சாம்ஸ் திட்டமிடுகிறார். இவர்களிடம் மாட்டிக் கொள்ளும் ஸ்ரீ, உயிருக்கு பயந்து அனைத்தையும் அவர்களிடம் கொடுக்கும் நேரத்தில், யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது. அது என்ன? என்பது ட்விஸ்ட் கிளைமாக்ஸ்.
விஞ்ஞானியின் குடும்ப டாக்டராக வந்து வந்து தனது வழக்கமான டைமிங் ஜோக் மூலம் சிரிக்க வைக்கும் சாம்ஸ், அப்படியே வில்லனுக்கு மாறிய பிறகு நடிப்பில் அதிரடி மாற்றம் கொண்டு வந்து விடுகிறார்.
வசதியாக வாழ வாய்ப்பு வந்த நேரத்தில் ஒரு பேராசைக்கார இளைஞன் என்னவெல்லாம் செய்வான் என்பதை ஸ்ரீ தனது கேரக்டர் மூலம் நடிப்பில் அழகாக வெளிப்படுத்துகிறார்.

வீட்டு வேலை செய்யும் பஞ்சவர்ணமாக வசுதா கிருஷ்ணமூர்த்தி…தன்னை விட 30 வயது மூத்்த தாய் மாமாவை மணந்து, இல்லாமைக்கும் கணவரின் இயலாமைக்குமான தடுமாற்றத்தை நடிப்பில் இயல்பாக பிரதிபலிக்கிறார். பணம்கைக்க வந்தநேரத்தில் திடீர் நண்பனை சுத்தியலால் முடிக்கும் இடத்தில் பிரதான வில்லியாக மிரட்டி விடுகிறார்.
பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக இருக்கும் விஞ்ஞானி வேடத்தில் நடித்திருக்கும் ராம்ஜி, க்ளைமாக்ஸில் எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்து அரங்க அதிர கரகோஷம் வாங்குகிறார்.
இசையமைப்பாளர் சிபு சுகுமாரன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் திகில் கதைக்கான பிகில்.
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கதைக்குள் நம்மை அழைத்து செல்லும் இயக்குநர் வினோ, ஒரே இடத்தில் ஐந்து கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார்.