Category: திரைப்படங்கள்

திரைப்படங்கள்

  • திரைத்துறை பிரபலங்கள் சரத்குமார், சீமான், ராதிகா சரத்குமார், நாசர் உள்ளிட்ட பலர் கொண்ட ‘நம்பிக்கை குளாபல் லான்ச்’ நிகழ்வு!

    திரைத்துறை பிரபலங்கள் சரத்குமார், சீமான், ராதிகா சரத்குமார், நாசர் உள்ளிட்ட பலர் கொண்ட ‘நம்பிக்கை குளாபல் லான்ச்’ நிகழ்வு!

    மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “கட்சி சார்புடைய அல்லது தலைவர்கள் கையில் இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையாக என் போன்றவர்கள் இந்த ‘நம்பிக்கை’யை தான் பார்க்கிறோம். நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல! சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ’நம்பிக்கை’ கிளை பரப்புகிறது என்றார்கள். அது ஆழமான வேர் பரப்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தேர்தல் வருகிற காலக்கட்டத்தில் நேர்மையும் உண்மையுமாக செய்திகளை ‘நம்பிக்கை’ கொண்டு போய் சேர்க்கும் என்பது என் நம்பிக்கை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நம்பிக்கையை இது நிச்சயம் பெறும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன்” என்றார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “நம்பிக்கை விதைக்கூடிய நாளாக இன்று இருக்கிறது. நம்முடைய செயல்பாடுகள் மூலம்தான் நம்பிக்கை பெற முடியும். சோஷியல் மீடியா யுகத்தில் யதார்த்த தன்மையை இழக்கும் சூழலில் உள்ளோம். அதனால், களத்தில் இருந்து உண்மைத்தன்மையுடன் செய்திகளை எந்தளவுக்கு நேர்மையாக கொடுக்கிறோம் என்பதில்தான் நம்பிக்கையை பெற முடியும். மலேசியாவை தொடர்ந்து இங்கும் ‘நம்பிக்கை’ வந்திருக்கிறது. சீமான் அண்ணன் சொன்னதை போல உள்ளது உள்ளபடி சொல்லுங்கள். மக்கள் எங்களை வழிநடத்துவாரகள். தனது பேச்சு, கவர்ச்சி மூலம் முதலில் ஊடகங்கள் முட்டாள்களைத்தான் முதலில் கவரும். பின்பு, புத்திசாலிகளை வாயடைக்க வைத்துவிடும். அப்படி இல்லாமல், தவறு யார் செய்திருந்தாலும் அதை தைரியமாக சுட்டிக்காட்டி சொல்லுங்கள். இன்று வந்திருக்கும் அனைத்து ஆளுமைகளோடு இணைந்து நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பாக ‘நம்பிக்கை’க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்”.

    நடிகர் சரத்குமார், “மலேசியாவில் தொடங்கி இன்று சென்னை நோக்கி அனைவரின் நம்பிக்கை பெற வந்திருக்கும் ’நம்பிக்கை’ குழுமத்திற்கும் இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்! என் பெரியப்பா ஆதித்தனார் மிகுந்த உழைப்பைக் கொடுத்து ஆரம்பித்த பத்திரிகைதான் தந்தி. அவருடன் என் அப்பாவும் சில காலம் பயணித்தார். நானும் சில காலம் பத்திரிகை உலகில் இருந்தேன். உண்மைகள் மட்டுமே பேச வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பத்திரிகை இயங்க வேண்டும். 27 ஆண்டுகளாக ’நம்பிக்கை’ இயங்கி வருகிறது. மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூர், இந்தியா, துபாய் செல்ல இருக்கிறார்கள். இன்னும் பல நாடுகளுக்கு சென்று பலரது நம்பிக்கையை இந்த ‘நம்பிக்கை’ பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

    நடிகை ராதிகா சரத்குமார், “’நம்பிக்கை’ டிஜிட்டல் லான்ச் இன் இந்தியா’ நிகழ்விற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு குரல், ஒரு பார்வை, ஒரு வாக்குறுதியோடு வந்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மீடியா என்பது பிரேக்கிங் செய்திகளை தருவது மட்டுமல்லாது, பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். நியாயம், துணிவு, நேர்மையான பார்வையோடு செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம். பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!” என்றார்.

    நடிகர் நாசர், “இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். பரபரப்பாக இருக்க வேண்டும் என்று பல செய்திகள் திரித்து கூறப்படுகிறது. குறிப்பாக, எங்கள் சினிமா துறையில் பல நல்ல படங்கள் திரித்து கூறி காணாமல் போய்விடுகிறது. இதனால் நான் செய்தி சேனல்களை பார்ப்பதையே தவிர்த்து விட்டேன். ஆனால், என்னை மீண்டும் செய்திகள் பார்க்க வைக்கிறது இந்த ‘நம்பிக்கை’. இன்று ஒரு கஷ்டம் வந்தாலும் நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த மனிதகுலம் இயங்கி வருகிறது. தெளிவான, உண்மையான செய்திகள் ‘நம்பிக்கை’யில் நமக்கு கிடைக்கும். சீமான் அவர்கள் சொன்னது போல நீங்கள் வேர் விட வேண்டும். உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

  • ஐ பி எல்  – திரை விமர்சனம்

    ஐ பி எல் – திரை விமர்சனம்

    மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் போஸ் வெங்கட் லஞ்சம் வாங்குவதை இளைஞன் ஒருவன் வீடியோ எடுத்து விட்டதாக தவறாக சந்தேகப்பட்டு அவனை காவல் நிலையம் கொண்டு சென்று தாக்குகிறார். இந்த தாக்குதலில் அந்த இளைஞன் இறந்து போக…
    கொல்லப்பட்டவனின் செல்போனை ஆராயும் போது அரசியல் பிரபலம் சம்பந்தப்பட்ட பரபரப்பான வீடியோ இருப்பதைப் பார்க்கிறார். இது விஷயம்
    சம்பந்தப்பட்ட அரசியல் புள்ளிக்குப் போக…இப்போது காட்சி மாறுகிறது.
    அந்த லாக்கப் மரணத்திற்கு வாடகை கார் ஓட்டும் அப்பாவி கிஷோர் மீது பழி போட்டு அவரைக் கைது செய்கிறார்கள். மேலிடத்து அழுத்தத்தால் அவரை அடித்து நொறுக்கி பொய் வாக்கு மூலம் வாங்கி நீதிமன்றம் கொண்டு செல்கிறார்கள்.

    கிஷோரின் தங்கையை நாயகன் டிடிஎஃப் வாசன் காதலிக்கிறார். அந்த உரிமையில்
    கிஷோர் மீதான பொய் வழக்கை உடைத்து நீதியை நிலை நாட்ட அதற்கான ஆதா ரங்களை திரட்டும்
    முயற்சியில் தீவிரம் ஆகிறார். அதில் வெற்றி பெற்றாரா? கிஷோரைக் காப்பாற்றினாரா? அந்த வீடியோவில் என்ன இருந்தது?
    கேள்விகளுக்கு விடை பரபர கிளைமாக்ஸ்.

    காவல் நிலையங்களில்
    லாக்கப் மரணங்கள் சகஜமாகி விட்ட நிலையில் அதை பின்புலமாக எடுத்துக் கொண்டு, கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
    டி.டி.எஃப்.வாசன் தான் நாயகன் என்றாலும் கிஷோர் தான் கதை நாயகனாக படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். போலீஸ் விசாரணையில் அவர் கொடுமைப்படுத்தப்படும் காட்சிகளில் கண்களில்
    கண்ணீர்ப் பிரவாகம்.
    ரத்தம் சொட்டச் சொட்ட அத்தனை அடி உதைகளையும் வாங்கிக்கொண்டவர் தன் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தப்படுவதை கண்டு துடித்துப் போகிற இடம் இன்னும் ரணம்.

    ஃபுட் டெலிவரி பாயாக வருகிறார் டிடிஎஃப் வாசன். புதியவரானாலும் காதல் காட்சிகளிலும் பாடல்களுக்கான நடனக் காட்சிகளிலும் அசத்தி விடுகிறார்.
    ஒரு பைக் ரேஸ் சண்டைக் காட்சியிலும் மிரள வைக்கிறார்.

    கிஷோரின் மனைவியாக அபிராமி வருகிறார் போலீஸ் கொடுமைப்படுத்தும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களைப் பதற வைக்கிறார். போஸ் வெங்கட் கொடூர குணம் கொண்ட போலீசாக வருகிறார் .சில காட்சிகளில் வந்தாலும் சிங்கம்புலி தன் இருப்பை நிரூபிக்கிறார். எதிர்மறையான போலீஸ் எஸ்.பியாக ஹரிஷ் பெராடியும் நேர்மையான போலீஸ் எஸ்பியாக திலீபனும் காவல்துறையின் இருவேறு முகங்களை பிரதிபலிக்கிறார்கள்.
    முதல்வராக ஆடுகளம் நரேன் சில காட்சிகளே என்றாலும் அதிலும் தனது நடிப்பு
    தடத்தை ஆழமாக பதிக்கிறார்.
    அஸ்வின் விநாயகமூர்த்தி
    இசையும் எஸ் பிச்சுமணியின் ஒளிப்பதிவும் கதையோடு காட்சிகளின் வீரியத்தை அதிகப்படுத்தி விடுகிறது.
    எழுதி இயக்கிய கருணாநிதி சுயநல அரசியல்வாதிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதை காட்சிப்படுத்திய விதத்திலேயே ஜெயித்து விடுகிறார். காவல் நிலைய கொடுமைகள் மட்டும் ரொம்பவே ஓவர்டோஸ்.
    நீதி பிழைத்த அந்த கிளைமாக்ஸ் சூப்பர்.

  • குபேரா – திரை விமர்சனம்

    குபேரா – திரை விமர்சனம்

    வங்கக் கடலில் கண்டுபிடிக்கப்படும் கச்சா எண்ணெய் மூலம் லட்சம் கோடிகளை தனக்கு சொந்தமாக்கத் துடிக்கும் கோடீஸ்வர தொழிலதிபர் நீரஜ் குப்தா, அதற்காக அந்த துறை மந்திரியை சந்தித்து பேசுகிறார். அரசுக்கு சொந்தமான எண்ணெய் வளத்தை தனியார்க்கு தாரை வார்த்தால் அப்புறமாய் அவர் கோடிகளில் குளிப்பார் என்பது மந்திரிக்கு தெரியாதா என்ன… அதனால் பேரம் பேசுகிறார். ஒரு லட்சம் கோடி பணமாக கை மாறினால் இது சாத்தியம் என்கிறார். அதோடு இந்த பணத்தில் அந்த துறை சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களுக்கு பத்தாயிரம் கோடி என பிக்ஸ் செய்கிறார்.
    இதற்கு மந்திரி போடும் ஒரே கண்டிஷன், தரும் கோடிகள் கருப்பு பணமாக அல்லாமல் வெள்ளையாக தரப்பட வேண்டும்.

    இந்த டீலுக்கு சம்மதிக்கும் தொழிலதிபர், செய்யாத குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்கை இது விஷயமாய் சந்திக்கிறார். உன் விடுதலைக்கு நானாச்சி என்று உறுதி கொடுப்பவர், தனது செல்வாக்கால் வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்து அவரை வெளியே கொண்டு வருகிறார்.

    கருப்பு பணத்தை வெள்ளையாக்க வேண்டும். உரியவர்களுக்கு முறையாக போய் சேர வேண்டும் என்றால், முகவரியே இல்லாத நான்கு பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கோடீஸ்வர அடையாளம் கொடுத்து உரியவர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யலாம் என ஆலோசனை சொல்கிறார் முன்னாள் சிபிஐ அதிகாரி. இதற்காக திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இளைஞன் தேவா உள்பட நான்கு பேர் அழைத்து வரப்படுகிறார்கள். ஒவ்வொரு பிச்சைக்காரர் மூலமாக கோடிகளில் பண பரிமாற்றம் முடிந்ததும் அவர்களை காலி பண்ணி விட வேண்டும் என்பது கோடீஸ்வரர் விருப்பம்.

    அதுவும் நடந்தேறுகிறது. முன்னாள் சிபிஐ அதிகாரியின் பார்வைக்கு போகாமல், பண பரிமாற்றம் முடிந்த அதே நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு பிச்சைக்காரர்கள் கொல்லப்படுகிறார்கள்.

    இப்போது எஞ்சி இருப்பது திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த தேவாவும் இன்னொரு பெண்மணியும். அவள் தற்போது கர்ப்பிணியாகவும் இருக்கிறாள். தன்னோடு அவளையும் காப்பாற்றியாக வேண்டும் என்று முடிவெடுக்கும் தேவா,
    அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஸ்டெப்கள் தான் கதைக்களம்.

    கோவில் வாசலில் பிச்சைக்கார இளைஞர் தேவாவாக அறிமுகமா கும்போதே தோற்றத்திலும் உடல் மொழியிலும் முற்றிலும் புதிய தனுஷை பார்க்க முடிகிறது. தன் மூலம் கோடிகளில் பரிவர்த்தனை நடந்து முடிந்து விட்டால் தனது உயிரும் பறிக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்து கொண்ட நேரத்தில் அங்கிருந்து தப்பிப்பதும் அப்போதும் கூட முன்னாள் சிபிஐ அதிகாரியை நல்லவராக நம்புவதுமாய் புதிய வெகுளி மனுஷனை நமக்குள் கடத்தி விடுகிறார். ரஷ்மிகா மந்தனாவை வித்தியாசமான சூழலில் சந்திக்கும் இடத்தில் தொடங்கி அடுத்தடுத்து அவரை சந்திக்க வேண்டிய போதெல்லாம் நடிப்பில் பல பரிமாணங்கள். நாங்க எல்லாம் மனுசங்க இல்லையா சார் என்று கேட்கிற காட்சி தனுஷின் அந்த கேரக்டரை இன்னும் உயர்த்தி பிடிக்கிறது.
    குடும்பத்தின் எதிர்காலத்துக்காக வில்லனிடம் மாட்டிக்கொண்டு தடுமாறும் முன்னாள் சிபிஐ அதிகாரி கேரக்டரில் தனது அனுபவ நடிப்பையும் சேர்த்து பரிமாறி இருக்கிறார் நாகா ர்ஜுனா.காதலன் ஏமாற்றிய நிலையில் தன்னிடம் உதவி கேட்டு வரும் தனுஷை நாயகி ராஷ்மிகா மந்தனா விரட்டியடிக்கும் இடங்கள் தொடங்கி குழந்தைக்கு புட்டிப் பால் கொடுக்கும் இடம் வரை அந்த சமீரா கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.

    கோடீஸ்வர வில்லன் நீரஜ் குப்தாவாக ஜிம் சர்ப் நடிப்பில் அந்த கேரக்டர் நிமிர்ந்து நிற்கிறது.நேர்மையான போலீஸ் அதிகாரியாக சில காட்சிகளே வந்து போனாலும் சாயாஜி ஷிண்டே தன் இருப்பை நிரூபிக்கிறார்.

    தனுஷின் சீனியர் குருவாக பாக்யராஜ், மந்திரியாக ஹரிஷ் பெராடி, நாகார்ஜுனின் மனைவியாக சுனைனா, பிச்சைக்கார பெண்மணியாக வரும் திவ்யா தங்கள் கேரக்டரை உணர்ந்து திரை வலம் வருகிறார்கள்.

    நிகித் பொம்மியின் கேமரா கதையின் பிரமாண்டத்துக்கு ஒளிப்பதிவில் கூடுதல் பிரம்மாண்டம் தருகிறது.தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் போய் வா போய் வா பாடல் சுகராகம். இயக்கிய சேகர் கம்முலா எடுத்துக்கொண்ட கதைக் கள த்துக்காகவே கொண்டாடப்பட வேண்டியவர். கோடீஸ்வரனுக்கும் பிச்சைக்காரனுக்குமான இணைப்பை மையமாக வைத்து கதை சொன்னவர், நாம் எல்லாருமே பிச்சைக்காரர்கள் தான் என்று நாயகி மூலம் சொல்ல வைத்திருப்பது கதையின் கனத்தைக் கூட்டுகிறது.
    குபேரா,  குபேரன்.

  • கிளாஸ்மேட்ஸ் விமர்சனம்..

    கிளாஸ்மேட்ஸ் விமர்சனம்..

    குடி குடி குடி.. குடியால் சீரழிந்த குடும்பங்களின் கதைதான் இந்த கிளாஸ்மேட்ஸ்.

    நாயகன் அங்கையற்கண்ணனம் அவரது மாமா சரவணா சக்தியும் எப்போதும் குடி குடி என்றே இருக்கிறார்கள். இவர்கள் குடித்துவிட்டு குடும்பத்தை சீரழித்து அடுத்தவர்களையும் கெடுப்பது தான் இந்த படத்தின் மூலக்கதை.

    தயாரிப்பாளரே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.. அவர்தான் அங்கையற்கண்ணன். குடிப்பதற்காகவே படம் எடுத்து கடைசியில் அட்வைஸ் செய்கிறார் இந்த நாயகன்.

    இவரின் மாமாவாக இயக்குனர் சரவணசக்தி. அவருக்கும் ஏற்ற வேடம்தான். இருவரும் குடித்துவிட்டு குடும்பத்தை கவனிக்காமல் அலைவதும் இவர்களின் மனைவிகள் கட்டுக்கோப்பாக இருந்து வேலைக்கு செல்வதும் என நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.

    இப்படிப்பட்ட குடிகாரர்களின் மனைவிமார்கள் இவ்வளவு அன்பாக இருப்பார்கள் என்ன.? மாமா.. மாமா.. என்று பாச மழை பொழிகிறார்கள்..

    பெரும்பாலும் குடிகாரர்கள் வேடத்தில் நடிகர் மயில்சாமியை பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இதில் நல்லவராக இருக்கிறார்.

    கதைப்படி ஒரு காலத்தில் குடிகாரராக இருந்தாராம்.. திருந்திய பிறகு கொஞ்சம் அட்வைஸ் செய்கிறார். ஆனாலும் ஒரு கட்டத்தில் இவரே குடிகாரனாக மாறிவிடுகிறார்.

    ‘நல்லவன் குடிச்சா குழந்தை, கெட்டவன் குடிச்சா கொலைகாரன்’ என்ற தத்துவம் பேசி செல்கிறார்.

    டாக்டராக டி எம் கார்த்திக் நடித்திருக்கிறார். நல்ல மருத்துவராக இருந்த இவரையும் குடிகாரனாக மாற்றி விடுகிறார்கள் கதையின் நாயகர்கள்.. அதுபோலவே அமெரிக்க மாப்பிள்ளையாக சாம்ஸ்.. இவரும் ஒரு கட்டத்தில் குடிகாரனாக மாறிவிடுகிறார்.. இவர் வரும் நேரத்தில் சிரிப்பலையை தியேட்டரில் கேட்க முடிகிறது.

    அயலி அபிநட்சத்திர கொஞ்ச நேரம் என்றாலும் சிந்திக்கவும் ரசிக்கவும் வைக்கிறார்.. இவரின் கிளைமாக்ஸ் முடிவு எதிர்பாராத ஒன்று.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி.

    நாயகனுக்கு மனைவியாக பிரணா.. கணவன் குடித்துவிட்டு வந்தாலும் அடித்தாலும் எதையும் கேட்காத அப்பாவி மனைவியாக நடித்திருக்கிறார்..

    சரவணசக்திக்கு மனைவியாக நடித்தவரும் நல்ல இளமையுடன் வசீகரமாக வருகிறார்.

    வாடா மச்சி கட தொறந்தாச்சு’, ‘அடிக்கிற பொண்டாட்டி தெருவுல நிப்பாட்டி’ பாடல்கள் குடிகாரர்களுக்கு தேசிய கீதமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை..

    படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் பாராட்டுக்குரியவை.

    இயக்கம் ‘குட்டிப்புலி’ சரவண சக்தி.

    படம் முழுவதும் சரக்கு சரக்கு என்பதால் சரக்கு அடித்து விட்டு போட்ட ஆட்டங்கள் தாளங்கள் ஏராளம்.. அதற்கு ஏற்ப ஆட்டம் போட்டிருக்கிறார்கள் இயக்குனர் மற்றும் நாயகன்.

    தானும் சரக்கு அடித்து விட்டு தன் நண்பர்களையும் சரக்கடிக்க செய்துவிட்டு குடும்பத்தையும் ஊரையும் கெடுத்து சீரழிப்பது தான் இந்த கிளாஸ் மேட்ஸ்..

  • விருமன் பட விமர்சனம்

    விருமன் பட விமர்சனம்

    பிரகாஷ் ராஜ் – சரண்யா தம்பதிக்கு நான்கு மகன்கள். மூன்று பிள்ளைகள் அப்பா பேச்சை கேட்க, கடைக்குட்டி கார்த்திக்கு மட்டும் அம்மா என்றால் உயிர். கணவர் பிரகாஷ்ராஜின் முறையற்ற உறவை சரண்யா தட்டிக் கேட்டு பலனில்லாமல் போக, தற்கொலை செய்து கொள்கிறார். அம்மாவின் மரணத்தால் தனது அப்பாவை கார்த்தி எதிரியாக பார்க்க, அப்பா பிரகாஷ ராஜும் கார்த்தியை எதிரியாக பார்க்கிறார்.

    மாமா வீட்டில வளர்ந்து வாலிபனான நிலையில் மீண்டும் தனது ஊருக்கு வருகிறார் கார்த்தி. அம்மா ஆசைப்படி தனது அண்ணன்களை அம்மாவின் நினைவிடத்திற்கு அழைத்து வருவதற்காகவும், தனது அப்பாவை நல்வழிப் படுத்துவதற்காகவும் முயற்சி மேற்கொள்ளும் கார்த்தி அதில் வெற்றி பெற்றாரா? என்பதை அடிதடி களத்தில் சொல்வதே இந்த விருமன்.

    நாயகன் கார்த்திக்கு கிராமத்து சண்டியர் வேடம் சிறப்பாக பொருந்துகிறது. அப்பாவிடமும அண்ணன்களிடமும் அவமானப்படும் இ்டங்களில் இயல்பான நடிப்பில் கவர்கிறார். நாயகி அதிதியுடனான குறும்பு மிளிரும் காதல் காட்சியில் இளமைக்கொடி பற்க்கிறது. ஆக்‌ஷன் காட்சியில் அதகளம் ரணகளம். அம்மாவின் நினைவு நாளில் வீடு தேடிவந்து தந்தையை டென்ஷனாக்கும் இடத்திலும் நடிப்பில் கிராமத்து அத்தியாயம்.

    அறிமுக நாயகி அதிதி ஷங்கருக்்கு, முதல் படத்திலேயே அழுத்தமான கேரக்டர். கார்த்தியை மிரட்டும் காட்சியில் நடிப்பில் அதிரடி காட்டுபவர், காதல் காட்சிகளை முத்தத்தால் நிறைத்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்துகிறார். நடனத்திலும் பின்னி எடுக்கிறார்.

    கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ் தன் கதாப்பாத்திரத் திமிரை கண்முன் நிறுத்துகிறார். மகன் அடி வாங்குவதை செல்போனில் பார்தது பரவசப்படும் காட்சியில் அந்த கேரக்டர் மீதான நம் கோபம் தான் இவரின் நடிப்புச் சிறப்பு. கார்த்தியின் மாமாவாக ராஜ்கிரண் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார். உள்ளுக்குள் பகை, வெளியில் நட்பு என அந்த கிராமத்து பெரிய மனிதர் கேரக்டரில் ஓ.ஏ.கே.சுந்தர் சிறப்போ சிறப்பு.

    சூரி, சிங்கம் புலி அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.

    வடிவுக்கரசி, கருணாஸ், ஆர்.கே.சுரேஷ், ஜி.எம்.சுந்தர், இளவரசு, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார் கிராமத்து இயல்பு மனிதர்களாக வாழ்ந்து கதைக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

    ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் கேமரா கிராமத்து அழகை அள்ளி வர, ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடலில் யுவன் சங்கர்ராஜா தெரிகிறார்.

    கிராமத்து முரண்பாடான உறவுகளை கூட்டிச் சேர்த்து மேம்படுத்தும் கதையை அடிதடி கரம் மசாலாவில் தோய்த்து தந்திருக்கிறார், இயக்குனர் முத்தையா. கொம்பனில் மாமா-மருமகன் உறவை சொன்னவர், இதில் அப்பா-மகன் மோதலை கையாண்டிருக்கிறார். அப்பாவை திருத்தும் வேடம் என்பது மட்டுமே மகனின் நோக்கமாக இருக்க, அப்பாவை அடித்து அவமானப்படுத்திய ரவுடி கைக்கு மோதிரம் போடும் மகன் கேரக்டர் அந்த இடத்தில் மட்டும் சறுக்குகிறது. என்றாலும் கார்த்்தி நடிப்பில் இருக்கும் எனர்ஜி படத்தை காப்பாற்றி விடுகிறது.

  • விக்ரம் பட விமர்சனம்

    விக்ரம் பட விமர்சனம்

    தேசிய போதைப் பொருள் தடுப்புபிரிவைச் சேர்ந்த சில காவல் அதிகாரிகள், முகமூடி அணிந்தஒரு குழுவால் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இதில் கமல் மகன் காளிதாசும் அடக்கம். அக்கொலைகளின் பின்னிருப்பவர்களை புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் பொறுப்பை தன்னிச்சையாக செயல்படும் ஏஜெண்ட் பகத் பாசில் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கிறார் காவல் துறை தலைவர். . கொலைகளுக்கான காரணம், பின்னணி என்ன? கொலைகளை செய்தவர்களின் மூளையாக செயல்பட்டது யார்? என்பது எதிர்பார்ப்பும் பரபரப்பும் இணைந்த கதைக்களம்.

    தொடக்கம் முதல் முடிவு வரை வேகம், வேகம் வேகம்.

    மகனை பறி கொடுத்த தந்தை அதற்காக பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்வார் அல்லவா. அதுவும் முன்னள் போலீஸ்.அதிகாரி தந்தை என்னும் பட்சத்தில் சும்மாஇருப்பாரா?.அதற்காக அவரையும் குறி வைக்கிறது போதைக்கும்பல். ஒரு கட்டத்தில் அவரை பாம் வைத்து காலி செய்கிறது. இதன் பின்னர் மேலும் வெறியோடு கோடிக்கணக்கில் மதிப்புள்ள போதைப்பொருளை தேடி அலைகிறது.

    இப்போது திடீர் திருப்பமாக போதைக்கும்பலை முகமூடி அணிந்து காலி செய்யப் புறப்படுகிறார் அதிரடி ஆசான் ஒருவர். அவர் யாரென்று பார்த்தால் எதிரிகளால் கொல்லப்பட்ட கமல் தான். அவர் எப்படி உயிரோடு வந்தார்? மகனை கொன்ற கும்பலை களையெடுத்தாரா என்பது ஆக்ஷன் அதிரடி கிளைமாக்ஸ்.

    முன்னாள் காவல்துறை அதிகாரியாக கமல் ஆச்சரியம் பிளஸ் அட்டகாசம். தன் தோற்றத்திலோ, வயதிலோ எந்த பாசாங்கும் வைத்துக்கொள்ளாமல் வருகிறார். இந்த வயதிலும் நடனமாடுகிறார். பொறி பறக்க சண்டை போடுகிறார்.மகனைக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பதற்காக அவர் அப்படி நடந்து கொள்கிறார் என்று பார்த்தால் அதற்கு அவர் தரும் சமுதாய நலன் சார்ந்த விளக்கம் திரைக்கதையின் பலமும் கூட.. பேரக் குழந்தையை வில்லன்கள் கொல்லக்கூடும் என்று பகத் பாசில் தகவல் கொடுத்து அவரை எச்சரிக்கையாக இருக்கச் சொல்ல, ‘எனக்கு உதவி செய்யறீங்கன்னு தெரிஞ்சா நீங்க தான் எச்சரிக்கையா இருக்கணும்…’ என்று பதிலுக்கு சொல்வதை இன்றைய அரசியல் நையாண்டியாகவும் எடுத்துக் கொள்ள முடிகிறது. பேரக்குழந்தைக்கும் இவருக்குமான அந்த அன்யோன்யம் மகிழ்வும் நெகிழ்வுமானவை.படத்தில் கமலை அடுத்து நம்மை கவர்வது பகத் பாசில் தான். தனது டீமுடன் துப்பறியத் தொடங்குவதில் இருந்து துரோகம் செய்த மேலதிகாரியை போட்டுத் தள்ளுவது வரை இவர் எங்கும் நடித்ததாக தெரியவில்லை. கேரக்டராகவே வாழ்ந்திருக்கார் மனுஷன். இவருக்கும் காயத்ரிக்குமான அந்த காதல் எபிசோட் திரையில் இதுவரை சொல்லப்பட்டிராத புதுமை. மனைவியை வில்லனிடம் இருந்து காப்பாற்ற சாலையில் அவர் ஓடும் வேகம் இப்போது வரை நெஞ்சுக்குள் தடதடக்கிறது.
    கடத்தல் கும்பலின் தலைவனாக கொடூரமான வேடம் விஜய்சேதுபதிக்கு. அறிமுக காட்சியிலேயே நெஞ்சில் பயம் கூட்டி விடுகிறார். போதை மருந்து எடுத்துக் கொண்டு அவர் அடிக்கும் ஒவ்வொரு அடியும் இடியாக இறங்குகிறத. அதையே கமலுடனான கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியிலும் பிரதிபலிப்பது ரசனை.
    சிறிய வேடம் என்றாலும் பகத் பாசிலின் மனைவியாக காயத்ரி கச்சிதம். விசவாச டிரைவராக குமரவேல், கமலின் ஆப்த நண்பராக சந்தானபாரதி, கமல் வீடடு பணிப்பெண், அந்த சுட்டிக்குழந்தை உள்ளிட்ட அத்தனை பேரும் பாத்திரச் சிறப்பில் பிரகாசிக்கிறார்கள். ஒரு காட்சி என்றாலும் சூர்யா ‘பார்யா’ என்று ரசிக்க வைக்கிறார்.
    அனிருத் இசையில் சண்டைக்காட்சிகளில் இடி முழங்குகிறது. அடி ஒவ்வொன்றும் இடியாக ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் மாற்றிக் காட்டியிருக்கிறார்கள். கிரிஸ் கங்காதரனின் கேமரா இரவுக் காட்சிகளை துப்பாக்கி தோட்டா சகிதம் காட்சிப்படுத்தி மிரள வைக்கிறது. போதை மருந்து கதையை அதிரடி மசாலா தூவி முடிவு வரை பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொண்ட விதத்தில் இம்முறையும் வெற்றித்தளத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

  • பீஸ்ட் படவிமர்சனம்

    பீஸ்ட் படவிமர்சனம்

    தீவிரவாதி ஒருவனை வேட்டையாடப்போகும் ராணுவ உளவுப்பிரிவு அதிகாரி வீரராகவன், தனது கவனக்குறைவால் சிறுமி ஒருத்தியின் மரணத்துக்கு காரணமாகி விடுகிறார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் வேலையை விடுகிறார். இந்நிலையில் தான் வேலை பார்க்கும் புதிய கம்பெனி பிரச்சினை தொடர்பாக, வணிக வளாகம் ஒன்றுக்கு செல்லும்போது அந்த வணிக வளாகத்தை ‘ஹைஜாக்’ செய்கிறார்கள், தீவிரவாதிகள்.
    அரசாங்கம் ஒருபக்கம் தீவிரவாதிகளுடன் பேசிக்கொண்டிருக்க, தீவிரவாதிகளோ வீரராகவனால் தற்போது சிறையில் இருக்கும் தங்கள் தலைவனை விடுதலை செய்ய டிமாண்ட் வைக்கிறார்கள். அரசும் வேறுவழியின்றி தீவிரவாதிகள் தலைவனை விடுதலை செய்கிறது. இதற்கிடையே அந்த வளாகத்துக்குள் இருக்கும் வீரராகவன் தீவிரவாதிகளை தனக்கே உரித்தான அதிரடி பாணியில் வேட்டையாடத் தொடங்குகிறார். தீவிரவாதிகளை மடக்கி வணிக வளாகத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை காப்பாற்றினாரா? விடுதலை செய்யப்பட்ட தீவிரவாதிகள் தலைவனை என்ன செய்தார் என்பது அதிரிபுதிரி திரைக்கதை.

    வீரராகவனாக விஜய். வழக்கமான அதிரடிக் காட்சிகளில் அதே வேகம். நடனத்தில் அசுர வேகம். பூஜா ஹெக்டேயை காதலில் கையாளும் உத்வேகம் என எல்லாவற்றிலும் ரசனை நம்பர் ஒன். தீவிரவாத தலைவனை வேட்டையாட கிளம்பும் இடத்தில் ‘ஜெட்’டை விடவும் வேகம்.

    நாயகியாக பூஜா ஹெக்டே அறிமுகமாகும் அந்த முதல் காட்சியிலேயே கவர்ந்து விடுகிறார். நடிப்புக்கான வாய்ப்பு அதிகம் இல்லையெனினும் அதை நடனத்தில் ஈடுகட்டி விடுகிறார்.

    கை கட்டப்பட்ட விஜய்க்கு உதவும் காட்சியில் அபர்ணா தாசின் முகபாவனைகள் அத்தனை அழகு.

    காமெடிக்கு யோகிபாபு, கிங்ஸ்லி இருந்தாலும் சிரிக்க வைப்பதெல்லாம் வி.டி.வி.கணேஷ் தான். மனிதர் வாயைத் திறந்தாலே தியேட்டர் வெடித்து சிர்க்கிறது.

    மத்திய மந்திரி ஷாஜியை அவ்வப்போது கலாய்க்கும் கேரக்டரில் டைரக்டர் செல்வராகவன். இனி நடிகர் செல்வராகவனும்.

    படத்தின் மிகப்பெரிய பலம் ஸ்டண்ட் காட்சிகள். பாடல்களிலும் பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார், அனிருத். மனோஜ் பரமஹம்சாவின் கேமரா கிளைமாக்ஸ் விமான பாய்ச்சல்களை கண்களுக்கு நெருக்கமாக்கி விடுகிறது.

    முதல்பாதியில் வேகம் பிடிக்கும் திரைக்கதை, மறுபாதியில் வேகத்தடை சாலையில் பயணிக்கும் வாகனம் போல் தடுமாறுகிறது. ஒருவழியாக கிளைமாக்சில் இழுத்துப் பிடித்து சரி செய்கிறார், இயக்குனர் நெல்சன். இருப்பினும் விஜய் என்ற மேஜிக்கால் ‘டேஸ்ட்’டாக மாறி விடுகிறது, இந்த பீஸ்ட்.

  • நடிகர் அஜீத் குமாரின்  “வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை

    நடிகர் அஜீத் குமாரின்  “வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை

    நடிகர் அஜீத் குமாரின் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் “வலிமை” 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்களை கடந்து, மிகப்பெரிய ஓடிடி ஓப்பனிங்கை பெற்று, சாதனை படைத்துள்ளது.

    2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய  பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு, ஆக்‌ஷன் திரைப்படமான ‘வலிமை’
    நேற்று ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான வேகத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் பார்வை நிமிடங்களை பெற்று, ஓடிடி உலகில் மிகப்பெரிய ஓபனிங் சாதனை படைத்துள்ளது.

    படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஜீ5 தளத்தில் தற்போது  காண கிடைக்கின்றன. “வலிமை” திரைப்படம், தமிழ், கன்னடம்,தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

    தமிழ்  ஓடிடி இயங்கு தளங்களின் மறுக்கமுடியாத வெற்றியாளரான ஜீ5, பல ஆண்டுகளாக அனைத்து வகையான கதைகள்  மற்றும் மொழிகளில் எப்போதும் அருமையான திரைப்படங்களையும், அசல் உள்ளடக்கங்களையும் வழங்கி வருகிறது.

    நடிகர் அஜித் குமார் அவர்களை கௌரவபடுத்தும் வகையில், ‘வலிமை’  திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஆனதை தொடர்ந்து, டிஜிட்டலில்  ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளதாக அறிவிக்கும் நிகழ்வை, 10,000 சதுர அடியில் மிகப்பெரிய போஸ்டரை வெளியிட்டு கொண்டாடியது.

    2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக கருதப்படும் வலிமை படத்தில் அஜித் குமார் ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூனாகவும்,  ஹுமா குரேஷி நாயகியாகவும் நடித்துள்ளனர். ஒரு அருமையான போலீஸ் கதையோடு, வலுவான ஆக்‌ஷன் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் இந்தப் படத்தை ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக மாற்றியுள்ளது. இப்படத்தில் நடிகர் அஜீத் குமாரின் அசத்தலான திரை ஆளுமை மற்றும் நடிகர் கார்த்திகேயாவின் சாத்தானிய அவதாரம் ஆகியவை ஒட்டுமொத்த திரையரங்குகளையும் அதிர வைத்தது.

    H.வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து பேவியூ ப்ராஜெக்ட் எல் எல் பி சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    12 மொழிகளில் 3,500 திரைப்படங்கள், 500+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 4,000+ இசை வீடியோக்கள், 35+ மேடை நாடகங்கள் மற்றும் 90+ லைவ் டிவி சேனல்கள், உடன் ஜீ5 தளமானது உலகம் முழுவதும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்கத்தை வழங்குகிறது. இப்போது, ஜீ5 ஆண்டு சந்தா ரூ. சிறப்பு விலையில் கிடைக்கிறது. 599/- மட்டுமே!

  • எதற்கும் துணிந்தவன் பட விமர்சனம்

    எதற்கும் துணிந்தவன் பட விமர்சனம்

    பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒரு வழக்கறிஞர் எந்த எல்லை வரை செல்கிறார் என்பதே இந்த ‘எதற்கும் துணிந்தவன்.’

    உறவினர்களாக பெண் கொடுத்து, பெண் எடுத்து வாழ்ந்து வரும் வடநாடு, தென்னாடு என இரண்டு ஊரிலும் இளம்பெண்களின் தற்கொலையும் கொலையும் அதிர்வை எற்படுத்த…அதன் பின்னணி குறித்து கண்டறியும் நாயகன் சூர்யா, அந்த குற்றங்களை செய்தவர்களை அதிரடியாய் களையெடுப்பது தான் படத்தின் கதை. இந்த போராட்டத்தில் சூர்யா குடும்பத்துக்கும் வில்லன் அவமானம் தேடித் தர, அதில் இருந்து தனது குடும்பத்தை மீட்டெடுக்கும் நாயகன் நம் நெஞ்சுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறான்.

    வழக்கறிஞர் கண்ணபிரானாக சூர்யா. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு பெரிய திரையில் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். காதல் காட்சிகளில் மெல்லிய ராகம். ஆவேச காட்சிகளில் ருத்ரதாண்டவம் இரண்டிலும் டிஸ்டிங்ஷன் வாங்குகிறார். காதலி ஊருக்கும் தனது ஊருக்கும் ஆகாத சூழலில் பலத்த பாதுகாப்பையும் மீறி கோவில் திருவிழாவில் காதலிக்கு அவர் தாலி கட்டுவது தனி அழகு.
    பெண்களுக்கான காவல்துறையின் ‘காவலன் செயலி’யை பற்றி சூர்யா எடுத்து கூறும் காட்சி, தன் குடும்பம் பாதிக்கப்பட்ட பின் மனைவிக்கு சூர்யா தைரியம் கூறும் காட்சியி என படம் நெடுக நடிப்பில் மனம் நிறைந்து நிற்கிறார், சூர்யா. கிளைமாக்சில் ‘புள்ள பெக்குறவன்லாம் அப்பா இல்ல, புள்ளைய சரியா வளக்கிறவன் தான் அப்பா’ என்று வசனச் சாட்டையை சுழற்றும் இடத்தில் சூர்யா, ‘நடிப்புச் சுடர்யா.’

    நாயகியாக பிரியங்கா மோகன். இவர் சூர்யாவுடன் காதலாகிற அந்த ஸ்கூட்டர் தொடர்பான முதல் காட்சியே காதல் ரசனையின் அடையாளம். கல்யாண விஷயத்தில் அப்பாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அப்பாவியாய் காட்சி தரும் இடத்தில் நடிப்பிலும் பொண்ணு ‘சூப்பர்’பா. இதே பிரியங்கா தனக்கு நேர்ந்த அவமானத்தை வீடியோவில் பேசும் இடத்தில் நம் கண்களின் ஒரம், ஈரம்.

    சூர்யாவின் பெற்றோராக சத்யராஜ்-சரண்யா, பிரியங்காவின் பெற்றோராக இளவரசு-தேவதர்ஷினி பல இடங்களில் சிரிக்க வும் ரசிக்கவும் வைக்கிறார்கள். பிரியங்காவை சூர்யாவுக்கு பெண் கேட்க வரும் இடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் தன் இருப்பை நிரூபிக்கிறார். சூரி, புகழ், தங்கதுரை சிரிப்ஸ் கூட்டணி.

    வில்லனாக வரும் வினய். சூர்யாவுடன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் கவர்கிறார்.

    இமானின் இசையில் ‘சும்மா சுர்ருங்குது’ பாட்டுல காது மடல் ஜிவ்வுங்குது. ரத்னவேலுவின் கேமரா கோவில் திருவிழா தொடர்பான காட்சிகளில் நம்மையும் அந்த கிராமத்துக்குள் கொண்டு போய் விடுகிறது.

    சமூக அக்கறையுடன் கூடிய ஒரு விழிப்புணர்வுக் கதையை அதிரடி மசாலா கலந்து திரைப்படுத்திய பாண்டிராஜூக்கு ஹாட்ஸ் ஆப். குறிப்பாக பெற்றோருக்கு பாடம் நடத்தும் அந்த கிளைமாக்சுக்கு கங்கிராட்ஸ்.

  • வலிமை பட விமர்சனம்

    வலிமை பட விமர்சனம்

    கொலம்பியா நாட்டிலிருந்து சட்டவிரோதமாக புதுச்சேரிக்கு போதைப்பொருள் கடத்தும் கும்பல், சில கெட்ட போலீஸ் துணையுடன் சென்னையில் பல குற்றச் சம்பவங்களையும் அரங்கேற்றுகிறது. இந்தக் குற்றங்களை தடுக்க உதவி கமிஷனர் அஜித்தை சென்னை நகர காவல் ஆணையர் செல்வா நியமிக்கிறார்.

    நேர்மையான காவல்துறை அதிகாரியான அஜித், குற்றம் செய்பவர்களின் கையை உடைத்து விட்டு, அவர்கள் குடும்பத்திற்கு பண உதவி செய்யும் அளவுக்கு மனிதநேயம் மிக்கவர். ஆனால், குடும்பத்திலோ குடிகார அண்ணன், வேலையில்லாத தம்பி, வயதான அம்மா என்று கூடுதல் பொறுப்புக்கள். இந்தச் சூழலில் நகரில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள், போதைப் பொருள் தொடர்பான நிகழ்வுகள், கொலைகள் பெரும் எண்ணிக்கையில் நடந்து காவல் துறையை அதிர வைக்க…

    இந்தக் குற்றங்களைத் தடுக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படும் அஜித், மூன்று குற்றங்களையும் செய்வது ஒரே கும்பல் என்பதைக் கண்டுபிடிக்கிறார். கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருளை வில்லனிடம் இருந்து மீட்பவர், இந்த குற்றங்களின் மூளையாக செயல்படும் வில்லனை நெருங்கும் நேரத்தில் அந்த கொள்ளைக்கார கூட்டத்தில் வேலையில்லாத தனது தம்பியும் இருப்பது தெரிய வர அதிர்ச்சி.

    கைதான தம்பியையும் வில்லனையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த வேனில் அழைத்துச் செல்லும்போது தப்பும் வில்லன், அஜித்தின் தம்பி மூலம் அம்மா உள்ளிட்ட அஜித்தின் மொத்த குடும்பத்தையும் கடத்துகிறான். போதைப்பொருளை ஒப்படைத்தால் மட்டுமே உன் குடும்பம் உயிரோடு திரும்பும் என்கிறான்.

    வில்லனை துவம்சம் செய்து அஜித் குடும்பத்தை மீட்டாரா என்பது அதிரடி சாகசங்களுடன் கூடிய கிளைமாக்ஸ்.

    படத்தின் துவக்கமே பரபரப்பாக அமைந்திருக்கிறது. பைக்குகளை வைத்து நடக்கும் குற்றங்களை முதல் காட்சியிலேயே காட்சிப்படுத்தும் இயக்குனர், அதை கண்டு பிடிக்கும் காவல் துறை அதிகாரியாக அஜித்தை அறிமுகப்படுத்தும்போது கதையின் ஆரம்பமே அசுரப் பாய்ச்சல்.
    அஜித் அட்டகாசமாக இருக்கிறார். யூனிபார்ம் போடாமலே காவல்துறை அதிகாரியின் அந்த கம்பீரம் ரசிக்க முடிகிறது. பைக் சேசிங் காட்சிகளில் ‘இது பைக்கா அல்லது மேஜிக்கா’ என்கிற அளவுக்கு பிரமிப்பு எட்டிப் பார்க்கிறது. அம்மா சென்டிமென்ட்டில் கவலை அப்பிய முகம், வில்லன் கூட்டத்தில் தம்பியை பார்க்கையில் அதிரும் முகம் என நடிப்பில் காட்டும் வேறுபாடு அவர் நடிப்புக்கான இடங்கள்.
    நாயகியாக வரும் ஹீமா குரேஷிக்கு இன்னொரு காவல்துறை அதிகாரியாக வந்து அஜித்துக்கு உதவும் பாத்திரம். அதை சிறப்பாக செய்திருக்கிறார். (இவர்கள் முன்ளாள் அல்லது இந்நாள் காதலர்களா? என்பதை கடைசி வரை சஸ்பென்சிலேயே விட்டதற்காக இயக்குனர் வினோத் மீது நமக்கு செல்லக் கோபம்.)

    வில்லனாக வரும் கார்த்திகேயா காவல்துறைக்கு சவால் விடும் இடங்களில் ‘அக் மார்க்’ அசுரன். அஜித்தின் தம்பியை மனமாற்றம் செய்யும் இடத்தில் ‘வாய்யா, கார்த்திகேயா’ என்று வரவேற்கத் தோன்றுகிறது. (இத்தனைக்கும் தெலுங்கில் இவர் இளம் ஹீரோ.)
    படத்தில் சண்டைக் காட்சிகளும், பைக் துரத்தல் காட்சிகளும் வேற வேற வேற லெவல். இதை பறந்து பறந்து படம் பிடித்த ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா உச்சி முகரப்பட வேண்டியவர்.
    யுவன் இசையில் ‘நாங்க வேற மாறி பாடல் ரசனை. அதற்கு அஜித் ஆடும் ஆட்டம் ரகளை.
    ஹாலிவுட்டுக்கு இணையான அல்லது அதையும் தாண்டி படத்தில் மிரட்டும் பைக் சேசிங் காட்சிகள் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனை ஹாலிவுட் வரை அழைத்துச் செல்லக்கூடும்.

    அஜித்தின் அம்மாவாக வரும் சுமித்ரா, உருப்படாத தன் இளைய மகனுக்காக கலங்கும் இடத்தில் கண்கள் நனைந்து போகிறது. அண்ணன்-தம்பியாக அஜ்யுத் கமார்்-ராஜ் அய்யப்பா, கெட்டபோலீசாக சுந்தர் கச்சிதம்.

    மேமிலி சென்டிமென்ட்டில் ஒரு அதிரடி கதையை எடுத்துக் கொண்டு அதை வேகம் குறையாமல் சொன்ன விதத்துக்காக இயக்குனருக்கு ஹாட்ஸ் அப்.