Category: தரவரிசை

தரவரிசை

  • பயணிகள் கவனிக்கவும் பட விமர்சனம்

    பயணிகள் கவனிக்கவும் பட விமர்சனம்

    உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ளாமல் செல்போனில் படம் பிடித்து பெயர் வாங்க நினைக்கும் இளைஞனால் ஒரு குடும்பம் எப்படி பாதிப்புக்குள்ளாகிறது என்பதை நெஞ்சம் நெகிழ சொல்லியிருக்கும் படம். கமெண்டுகளும் மீம்ஸ்களும் அந்த குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்திலேயே சிறப்புக் கவனம் பெறுகிறார், இயக்குனர்.

    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகளுக்கு துணையாக இரண்டு நாட்கள் அங்கேயே தூங்காமல் கொள்ளாமல் இருக்கும் அப்பா விதார்த், ரெயிலில் வீடு வரும்போது அசந்து தூங்கி விடுகிறார். அதை தனது செல்போனில் படம் பிடிக்கும் ‘துபாய் ரிட்டர்ன்’ கருணாகரன், விதார்த்தை ரெயிலில் தன்னிலை மறந்து தூங்கும் குடிகாரனாக சித்தரித்து ஊரெங்கும் உலவ விட…

    இதனால் மாற்றுத்திறனாளியான விதாரத்தின் வேலை போகிறது. கால் பந்தில் சாதிக்கத் துடிக்கும் மகனின் எதிர்காலம் ்வீணாகிறது. குடும்பத்தில் நிம்மதியிழப்பு நிரந்தரமாகிறது. பொது இடங்களில் மற்றவர்களின் கேலிப்பார்வையை சகிக்க முடியாத விதார்த், ஒரு கட்டத்தில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை காவல் நிலையத்தில் புகாராகத் தர…

    இதற்குள் துபாயில் இருந்து ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்த கருணாகரனுக்கு இங்கே காதலியுடன் திருமணம் நடந்து முடிகிறது. இந்நிலையில், தன் மீதான போலீஸ் புகார் விஷயம் தெரிய வர, தண்டனைக்கு பயந்து திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் துபாய் பயணத்துக்கு தயாராகிறார். ஆனால் விமான நிலையத்தில் அவரை கைது செய்கிறது காவல்துறை. முடிவு, முற்றிலும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.

    நடுத்தர வர்க்ககுடும்பத் தலைவனாக நடிகர் விதார்த். ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் அதற்குரிய சிறப்பு நடிப்பை வழங்குபவர், இந்த படத்திலும் காது கேளாத வாய் பேச இயலாத அந்தப் பாத்திரத்தை அற்புதமான தனது நடிப்பில் வார்த்்தெடுத்து இருக்கிறார். தன் குடும்பத்தின் நிம்மதியை குலைத்தவனை சந்திக்கும் அந்த கிளைமாக்சில் நடிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்கி விடுகிறார். விருது நிச்சயம்.
    விதார்த்தின் மனைவியாக வரும் லட்சுமி பிரியா இன்னொரு நடிப்புப் பொக்கிஷம். ‘பேசாமல் பேசும்’ தன் இயல்பான நடிப்பினால் ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக மனம் உடைந்து கண்ணீர் விடும் கணவனைத் தேற்றும் இடத்தில் அடுத்த விருதாளர் ரெடி.
    விதார்த்தின் குழந்தைகளாக நடித்திருக்கும் இருவரும் அற்புதமான தேர்வு. ஆரம்பத்தில் அப்பாவைத் தவறாக புரிந்து கொள்ளும் மகன், பின்னர் உண்மை தெரிந்ததும் கதறும் இடத்தில் தனது கேரக்டர் தேர்வை நியாயமாக்குகிறார். விதார்த்தின் அப்பா கேரக்டரில் ‘கவிதாலயா’ கிருஷ்ணன் இன்னொரு நடிப்புக் கவிதை.
    விதார்த்துக்கு நிகராக இன்னொரு நாயகனாக வருகிறார் கருணாகரன். தன் சிறு வயது தோழியை பெண் கேட்டு அவள் அப்பாவை சந்திக்கும் இடம் கலகலப்பின் உச்சம். தனது செல்போன் படம் ஏற்படுத்திய விபரீதம் குறித்த உண்மை தெரிந்ததில் இருந்து குற்ற உணர்ச்சியின் தவிப்பை வெளிப்படுத்தும் இடங்களில் அத்தனை அழகு அந்த நடிப்பு.
    அவரது காதல் மனைவியாக வரும் மாசம் சங்கர் முதலிரவில் கூட தன்னை தீண்டாமல் தனித்திருக்கும் கணவனை எண்ணி மனதுக்குள் தவிக்கும் இடத்தில் நடிப்பின் எல்லையை தொட்டு விடுகிறார்.

    கருணாகரனின் மாமா மூணாறு ரமேஷ், விதார்த்தின் நண்பர் ராம்ஸ், கருணாகரனின் அம்மா என அத்தனை கேரக்டர்களும் இயல்பான நடிப்பில் பளபளக்கிறார்கள்.

    வித்தியாசமான தண்டனை கொடுக்கும் இன்ஸ்பெக்டர் பிரேம், பிரேமுக்கு பிரேம் ரசிக்க வைக்கிற இன்னொரு நட்சத்திரம்.

    தெளிவான திரைக்கதை மூலம் இன்றைய சமூகத்திற்கு ஒரு செய்தியையும் சொல்லியிருக்கும் இயக்குனர் எஸ்.பி.சக்திவேலை கொண்டாடலாம்.
    பாடல்களும் பின்னணி இசையும் கேமராவோடு இணைந்த அழகியல் அம்சங்கள்.
    பயணிகள் கவனிக்கவும், ரசிகர்கள் ரசிக்கவும்… –

  • ஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து

    ஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து


    ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது. தினமும் புதுப்புது இசைக் கோர்ப்புகள், பாடல்கள் என யூடியூப் தளத்தில் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. ஏனென்றால், மக்களின் மனநிலையை அறிந்து எப்படிக் கொடுத்தால் ஈர்க்கலாம் என்பதை தெரிந்திருக்க வேண்டும்.
    அப்படி ஒரு ஹாலிவுட் பாடல் உருவாகி, மக்களை ஈர்த்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் தயாரித்துள்ள இந்த ஹாலிவுட் ஆல்பத்தின் பெயர் ‘கோல்ட் நைட்ஸ்’. இந்த ஆல்பத்திலிருந்து ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியானது. இதனை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இருவரும் வெளியிட்டார்கள்.
    துள்ளலான இசை, I Need to Know என்று ஈர்க்கும் வரிகள் என சமூக வலைதளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. யூடியூப் ட்ரெண்ட்டிங்கிலும் உடனடியாக இடம்பிடித்தது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அசுரன், சூரரைப் போற்று என இசையுலகில் கொடிகட்டிப் பறக்கும் ஜி.விக்கு இந்த ஹாலிவுட் ஆல்பம் என்பது அவருக்கு ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.
    ஏ.ஆர்.ரஹ்மான், அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் தாணு, சூர்யா, தனுஷ், ராதிகா சரத்குமார், இயக்குநர் கார்த்திக் நரேன், ரைசா வில்சன், அலிசா அப்துல்லா உள்ளிட்ட பலரும் இந்தப் பாடலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து ஜி.வி.யின் திரையுலக நண்பர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என வாட்ஸ்-அப் வாழ்த்தால் நெகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும், சக இசையமைப்பாளராக யுவன் மற்றும் இமான் ஆகியோரும் வாழ்த்தியிருப்பது கூடுதல் சிறப்பு.
    ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். ஹை அண்ட் ட்ரை, ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார்.
    ஹாலிவுட்டில் எடுத்து வைத்துள்ள முதல் அடியே ஜி.வி.பிரகாஷுக்கு வெற்றியடைந்துள்ளது. அடுத்து எடுத்து வைக்கவுள்ள அனைத்து அடிகளுமே வெற்றியடைய வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார். விரைவில் அடுத்த ஹாலிவுட் பாடல் குறித்த அறிவிப்பு வரும். அது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று தன் மகள் அன்வியுடன் இணைந்து கண் சிமிட்டி சிரிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

  • பொன்மகள் வந்தாள்- விமர்சனம்

    பொன்மகள் வந்தாள்- விமர்சனம்


    2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா ஒரு படத்தைத் தயாரிக்கிறார் என்றால் நிச்சயம் அப்படம் அறம் பேசும். இதோ இன்று அமேசானில் வெளியாகியுள்ள ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படமும் அறம் பேசியுள்ளது.

    போலீஸாரால் சைக்கோ கொலைகாரி என்ற முத்திரைக் குத்தி கொல்லப்பட்ட ஒரு பெண்ணிற்கு ஆதரவாக ஜோதிகா நிற்கிறார். அவருக்கு ஆறுதலாக பாக்கியராஜ் இருக்கிறார்.

    ஜோதிகாவை எதிர்க்கும் வழக்கறிஞராக பார்த்திபன், பணக்கார வில்லனாக தியாகராஜன், நீதிபதியாக பிரதாப் போத்தன் அவரின் நண்பர் மற்றும் உதவியாளராக பாண்டியராஜன்..இப்படி படம் நிறைய நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள். இதுவே படத்தை நாம் ரசிப்பதற்கான உத்திரவாதத்தைக் கொடுத்து விடுகிறது.

    ஜோதிகாவின் நடிப்பில் இப்படம் ஒரு மைல்கல். காரணம் மிகுந்த பொறுப்புணர்வோடு அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு அவ்வளவு நியாயம் சேர்த்துள்ளார். ஏனைய நடிகர்கள் யாருமே துளியும் குறை வைக்கவில்லை.

    படத்தின் சோகத்தை வேகத்தை என அனைத்திற்கும் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சப்போர்ட் செய்துள்ளன.

    பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் கோர்ட்லே தான் நடக்கிறது. இருந்தும் படத்தின் தாக்கம் எங்குமே தேக்கம் கொள்ளவில்லை. பெண் குழந்தைகள் படும் பாலியல் அவஸ்தைகளை அவர்கள் சொல்ல முன் வரவேண்டும். அதைப் பெற்றோர்களும் ஊக்குவிக்க வேண்டும் என்ற அறம் சார்ந்த குரலை பொன்மகள் வந்தாள் முழுக்குரலாகப் பேசி இருப்பதால் இப்படம் நிச்சயம் இந்த லாக்டவுன் நாளில் குடும்பத்தோடு காண வேண்டிய படம் என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை. மேலும் முதன்முதலில் தியேட்டரில் வெளிவரும் முன்பே அமேசான் நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட முதல் தமிழ்படம் இதுதான்!

  • கயிறு- விமர்சனம்

    கயிறு- விமர்சனம்


    சென்றவாரம் ஒரு ஜிப்ஸியின் காதல் கதையைக் கண்ட நமக்கு இந்தவாரம் ஒரு பூம் பூம் மாட்டுக்காரரின் காதல் கதை காணக்கிடைத்துள்ளது காதல் ஒன்றிற்குத் தானே பணம், தகுதி, தொழில் என்று என்றும் எதுவும் கிடையாது. அந்தவகையில் கயிறு படம் கதைக்களத்திலே பாதி வெற்றியை அடைந்துள்ளது.

    பூம் பூம் மாட்டை வைத்து அருள்வாக்குச் சொல்லி வாழுபவர் படத்தின் ஹீரோ எஸ்.ஆர் குணா. அவருக்கு பிழைக்க வந்த ஊரில் காவ்யா மாதவ் மேல் காதல் வருகிறது. ஹீரோவின் தொழில் அக்காதலுக்கு தடையாக நிற்கிறது..உயிர் காதல் என்றால் என் தொழில் அதற்கும் மேல் என்கிறார் ஹீரோ. முடிவின் என்னானது என்பதே கயிறின் கதை..

    நடிகர்களின் நடிப்பில் எதார்த்தம் மின்னுகிறது. எஸ்.ஆர் குணா நாயகனாக ஒரு அப்பாவித்தனத்தோடு ஈர்க்கிறார். நாயகி நம்ம ஊர்ப்பொண்ணு போன்ற லுக்கில் கவர்கிறார். ஏனைய கேரக்டர்களில் நடித்தவர்களும் ஏதோ நடித்தோம் என்பதில்லாமல் கேரக்டர்களுக்கு தோதான நடிப்பையே வழங்கி இருக்கிறார்கள். படத்தில் இசைக்கு பெரிய வேலை இல்லை. இசையும் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. ஒளிப்பதிவு ரம்மியமாக இருக்கிறது. அந்த வகையில் கண்களுக்கு அது மகிழ்ச்சி.

    காமெடி என்கிற பெயரில் வரும் சில காட்சிகளை இன்னும் கத்தரித்து இருக்கலாம். காதல் காட்சிகளில் கூட இன்னும் ஆழமும் அழுத்தமும் இருந்திருக்கலாம். படத்தில் முடிவில் சொல்லப்படும் ஒரு விசயம் உணர்வுப் பூர்வமானது. நம் பூர்வ குடிகளில் இருந்து இன்றுவுள்ள ஜெனரேசன் வரை மாடுகளை நாம் கடவுளுக்கு நிகராகப் பார்ப்பவர்கள். அதனால் மாடுகளைப்.பாதுகாப்பது மிக முக்கியம் என்று முடிவில் சொல்லிருப்பது நல்ல டச். அந்த ஒன்றிற்காகவே கயிறு படத்தை நாம் பார்க்கலாம்!

  • College குமார்- விமர்சனம்

    College குமார்- விமர்சனம்


    படிப்பு என்ற ஒற்றைத் தகுதியை வைத்து தன் நண்பன் தன்னை அவமதிக்க, நண்பனுக்கு பாடம் புகட்டப் புயலெனப் புறப்படுகிறார் பிரபு. அவரின் சவால் என்னானது என்பதே காலேஜ் குமார்.

    எந்தச் சட்டைக் கொடுத்தாலும் அந்தச் சட்டைக்கு தகுந்தாற் போல் தன் உடம்பை மாற்றிக் கொள்வது தான் தேர்ந்த நடிகரின் அடையாளம். பிரபு அதை மிகச்சரியாகச் செய்ருக்கிறார். அவரது மகனாக வரும் ராகுல்விஜய் ஓரளவு நல்ல நடிப்பையே வழங்கியுள்ளார். பிரபு நண்பராக வரும் அவினாஷ், கல்லூரி முதல்வராக வரும் நாசர் உள்பட பலரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

    படத்தின் ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு தேவையான பலத்தை அளித்துள்ளன. கல்வி தான் முக்கியம் என்ற கருத்தை விட கல்வி இல்லை என்றால் இங்கு எதுவுமே இல்லை என்பதை நம் மக்கள் மனதில் பதிய வைத்துள்ளார்கள் என்பதை படம் சொல்கிறது. முன்பாதியில் சின்னதாக தெரியும் தொய்வு பின்பாதியில் சரி செய்யப்பட்டு அழகாக கவர்கிறது. காமெடியில் அதிக கமர்சியில் கலந்துள்ளதால் இந்தக் காலேஜ்குமார் கலக்கல் குமாராக வலம் வருவார்

  • ஜிப்ஸி – விமர்சனம்

    ஜிப்ஸி – விமர்சனம்


    இந்த உலகில் எல்லாவற்றையும் விட சிறந்த அம்சம் அன்பு ஒன்று தான். எப்போதும் ராஜுமுருகன் படங்கள் மனிதத்தை வலியுறுத்தி வருபவை . ஜிப்ஸியும் அந்தக் கேட்டகிரியிலே வந்துள்ளது. இந்தமுறை அன்பையும் அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று சற்று உக்கிரமாகப் பேசியுள்ளார். வழக்கம் போல படமெங்கும் அவரது வசனங்கள் தெறித்தனம்..

    தேசாந்திரியான ஜீவா தீவிர முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நடாஷாவை வீட்டாரின் சம்மதமின்றி காதல் திருமணம் முடிக்கிறார். அவர்கள் இல்லறம் சீராகப் பயணிக்கும் போது ஒரு மதக்கலவரத்தில் ஜீவா நடாஷா பிரிகிறார்கள். அதன்பின் எப்படி இணைகிறார்கள் என்பதை அரசியல் கலந்து சொல்லி இருக்கிறார் ராஜு முருகன்

    ஜீவா கொரில்லா சீறு என கமர்சியல் ரூட் பிடித்து சென்று கொண்டிருந்தாலும் ஜிப்ஸி மாதிரியான படங்கள் தான் அவரது அடையாளம். ஒவ்வொரு பிரேமிலும் தேசாந்திரியாக வாழ்ந்திருக்கிறார். நடாஷா அழகைப் போலவே நடிப்பிலும் வசீகரிக்கிறார். சோனுகுமார் என்ற பாத்திரத்தில் வரும் வில்லன் எலும்பை ஜில்லிட வைக்கும் அளவில் மிரட்டி இருக்கிறார்.

    படத்தின் ஆதர்சமான மேட்டர் ஒளிப்பதிவு தான். கலவரத்தின் போது காட்டப்படும் ஷாட்கள் எல்லாம் அவ்வளவு நேர்த்தி. பின்னணி இசை பாடல்களில் இன்னும் சந்தோஷ் நாராயணன் சந்தோஷத்தை கொடுத்திருக்கலாம்.

    படத்தின் நீளம் சற்று பிரச்சனையாக இருந்தாலும் படம் பேச வரும் விசயம் ரொம்ப ஆழமானது. அன்பாயுதம் தான் கலவரத்திற்கு எதிரான பேராயுதம் என்பதை உணர்த்திச் செல்லும் ஜிப்ஸி இந்தியச் சமூகம் வரவேற்க வேண்டிய சினிமா!

  • வெல்வெட் நகரம்- விமர்சனம்

    வெல்வெட் நகரம்- விமர்சனம்

    சமூக அக்கறையை கொஞ்சம் கமர்சியம் மற்றும் திரில்லர் கலந்து கொடுத்தால்..அதுதான் வெல்வெட் நகரம்.

    மலைவாழ் மக்களின் இடத்தை கார்ப்பரேட் கைப்பற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகையான கஸ்தூரி. அதனாலே அவர் ஒரு கும்பலால் கொல்லப்படுகிறார். அவரது தோழியான வரலெட்சுமி அதற்கு எப்படி தீர்வு காண்கிறார் என்பது தான் படத்தின் கதை.

    கஸ்தூரி மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் வருகிறார். வரலெட்சுமி தான் படத்தின் ஒன் ஆப் த ஹீரோ. பரபரப்பு காட்சிகளிலும் சரி பயந்து நடுங்கும் காட்சிகளிலும் சரி நன்றாக நடித்துள்ளார். ரமேஷ் திலக், அர்ஜாய்,சந்தோஷ் கிருஷ்ணா, மாளவிகா சுந்தர் உள்பட படத்தில் வரும் அனைவரும் நடிப்பில் பெரிதாக சோடைபோகவில்லை.

    சிறிய பட்ஜெட் படம் என்பதைத் தெரியாதளவில் பரபர திரைக்கதை உருவாக்க முயன்றுள்ளார் இயக்குநர் மனோஜ் குமார் நடராஜன். ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சற்று வித்தியாச கோணத்தோடு அணுகப் பட்டிருப்பது புதிதாக இருக்கிறது. இடைவெளி இல்லா திரைக்கதையாக இருந்தாலும் படம் இடைவேளைக்குப் பிறகு தான் சூடு பிடிக்கிறது. படத்தின் பரபரப்பிற்கு சரண் ராகவனின் பின்னணி இசையும், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டாவின் எடிட்டிங்கும் நல்ல ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. பகத்குமார் இரவுக்காட்சிகளை மிக அழகாக படம் பிடித்துள்ளார். கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் ஒரு வீட்டிற்குள்ளே தான் நடக்கிறது. அந்த வீட்டை சிறப்பாக வடிவமைத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் கங்கப்பன்.

    படத்தின் பேசுபொருள் ரொம்ப முக்கியமானது என்பதால் படத்தின் கலையாக்கத்தில் இருக்கும் சிறு பிழைகள் பெரிதாக தெரியவில்லை

  • திரெளபதி- விமர்சனம்

    திரெளபதி- விமர்சனம்

    பேசியே ஆக வேண்டிய விசயத்தை எந்தச் சமரசமும் இல்லாமல் பேசி இருக்கிறது திரெளபதி படம். சாதி ஆணவக்கொலைகள் பற்றி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் நாடகக்காதல் மற்றும் போலித் திருமணச் சான்றிதழை வைத்து பாலியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெண்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் மிரட்டும் கும்பலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது படம்.

    படத்தில் எந்தக் காட்சியிலும் புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்ற விசயங்கள் காட்டப்படவே இல்லை. அந்த விசயத்தில் இயக்குநருக்கு தனிப்பாராட்டுக்கள். நடிகர்களில் ரிச்சர்ட் நாயகனாக மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். சிலம்பம் சுற்றும் போதும் சரி, சீறி அடிக்கும் போதும் சரி அழகாக நடித்துள்ளார். நாயகி ஷீலா குறையில்லாத நடிப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் தோன்றும் ஏனையக் கதாப்பாத்திரங்கள் அனைவருமே படத்திற்கு ஏணியாகத் தான் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் திரெளபதி காஸ்டிங்கிலே பாதி வெற்றியைப் பெற்றுள்ளது.

    ஒரு குத்துப்பாட்டில் மசாலாத் தனம் இருந்தாலும் ஒரு காதல் பாடல் எதார்த்தமாக ஈர்க்கிறது. பின்னணி இசையும் தன் பங்கைச் சரியாகச் செய்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கச்சிதம். படத்தில் தேவையில்லாத காட்சிகள் என்று ஒன்று கூட இல்லை. ஒரு நல்லபடத்திற்கு இது ஒரு நற்சான்று என்றே சொல்ல வேண்டும்.

    படத்தில் வேகம் சற்று குறைவாக இருந்தாலும் கலை நேர்த்தி அழகாக இருக்கிறது. எந்தச் சாதியையும் வெளிப்படையாக பேசா விட்டாலும் ஈசியாக நம்மால் உணர முடியும் அளவிற்கு படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மோகன். கலப்பு திருமணம் போலிக்காதல், போலிப்பதிவு திருமணம் ஆகியவற்றால் உயர்ஜாதி என்று சொல்லப்படுபவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் படம் உரைத்துக் கூறுகிறது. அதில் உண்மையும் இருக்கிறது என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். அதனாலே இப்படியான சமூக அவலங்களைத் தெரிந்துகொள்ள நாம் அவசியம் திரெளபதியைப் பார்க்க வேண்டும்!

  • மாஃபியா-விமர்சனம்

    மாஃபியா-விமர்சனம்

    அருண் விஜய்க்கு ஒரு ஆக்‌ஷன் மாஸ்டர் அந்தஸ்த்தை வழங்கும் படமாக உருவாகி இருக்கிறது மாஃபியா. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக அவர் பிரசன்னா கேங்கை வேட்டையாடுவது தான் படத்தின் ஒற்றை வரிக்கதை. நடிப்புப் பயணத்தில் 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அருண் விஜய் வெறித்தனமான நடிப்பை வழங்கி இருக்கிறார். பிரசன்னாவும் அவர் பிரசன்னமாகும் நேரத்தில் இருந்து படம் முடியும் வரை மாஸ் காட்டியுள்ளார். பிரியபவானி சங்கரின் கம்பீரம் அசரடிக்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் பிரியா பவானி சங்கர் குறிவைக்கும் கன் ஷாட்ஸ் எல்லாம் செம்ம எனர்ஜி.

    படத்தின் மேக்கிங் ஸ்டைலிஷாக இருக்கிறது. அந்த ஸ்டைலிஷை திரைக்கதைக்குள்ளும் புகுத்தி இருக்கலாம். பின்னணி இசை ஒரு மாஸ் படத்திற்கான மாஸை கூட்டியுள்ளது. ஒளிப்பதிவில் மேஜிக் காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர். சவுண்ட் எபெக்ட்ஸ் கலர்ஸ் இரண்டும் ஹாலிவுட் படத்திற்கு நிகரான தரம்.

    இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம் என்றாலும் முன்பாதியில் இன்னும் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம். முடிவில் சேப்டர் 2-வுக்கு கொடுக்கும் லீட் காட்சிகள் அதகளம். மாஃபியா ஆக்‌ஷன் ரசிகர்களை கவர்வார்

  • கன்னிமாடம்-விமர்சனம்

    கன்னிமாடம்-விமர்சனம்

    ஆணவக்கொலை சம்பந்தப்பட்ட கதை என்றால் பத்தடி தள்ளி நிற்கும் சினிமா ரசிகனை “இதையும் பார் நண்பா” என நட்போடு அழைக்கிறது கன்னிமாடம். இப்படம் பார்ப்பவர்களுக்கு சாதி வெறியர்கள் மேல் கோபம் வரும் என்பது முன் அறிவிப்பு.

    சென்னையில் தஞ்சம் புகும் காதல் ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக். அவர் கொடுக்கும் அடைக்கலத்தையும் மீறி அந்த ஜோடிகளுக்கு சில விபரீதங்கள் நடக்கின்றன. முடிவு என்ன என்பதே கன்னிமாடம்.

    இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்திலே ஆணவக்கொலை என்ற மேட்டரை கையில் எடுத்துள்ள போஸ் வெங்கட்டின் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள். சமூகக் கருத்துள்ள படத்தைத் தயாரிக்க முன்வந்த ஹசீருக்கும் வாழ்த்துகள்.

    அன்பு கேரக்டரில் வரும் ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் நல்ல தேர்வு. விஷ்ணு ராமசாமியின் நடிப்பிலும் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது. படத்தின் முக்கிய அம்சமே நாயகியின் கேரக்டர் தான். அதை அழகாக உணர்ந்து நடித்துள்ளார் சாயாதேவி. ஆடுகளம் முருகதாஸ் படம் நெடுக உற்சாகமூட்டி இருக்கிறார். சூப்பர் குட் லட்சுமணனுக்குள் ஒரு நல்ல நடிகர் இருக்கிறார் என்பதற்கு இப்படமும் ஒரு சாட்சி. ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா ரோபோ சங்கர் படத்தில் அதிரடியாக அறிமுகமாகி பின் அன்பால் கவர்கிறார்.

    படத்தின் கதையோட்டமும் அதற்குத் தகுந்தாற் போன்ற மேக்கிங்கும் போஸ் வெங்கட்டை மீண்டும் பாராட்ட வைக்கிறது. இசை ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். பாடல்களில் இருக்கும் இசையை விட வரிகள் மிகச்சிறப்பாக இருந்தன. எப்படிப் பார்த்தாலும் அந்தப் பெருமை இசை அமைப்பாளருக்குத் தான்.

    முன்பாதியில் வெகுசில இடங்களில் படம் தடுமாறி பயணித்தாலும் பின்பாதியில் யாராலும் மறக்க முடியாத அனுபவத்தை தருகிறது. சாதியில்லா சமூகம் தான் சந்தோஷம் காணும் எனச் சொல்லும் கன்னிமாடம் நல்ல பாடம்