பேய காணோம் திரை விமர்சனம்

இயக்குநர் செல்வ அன்பரசன், நாயகன் கெளசிக், நாயகி சந்தியா ராமச்சந்திரன், இணை இயக்குநர் கோதண்டம் உள்ளிட்ட படக்குழுவினர் பேய்ப் படம் எடுப்பதற்காக காட்டுப்பகுதியில் இருக்கும் ஒரு பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு படப்பிடிப்பு நடக்கும் போது மீரா மிதுன் வருகிறார். அதன்பிறகு அங்கு நடக்கும் சில அமானுஷ்ய சம்பவங்களால் நாயகி பயந்து நடிக்க வரத்தயங்க, படக்குழுவினர் சாமியாரை அழைத்து வருகிறார்கள். அவர் வந்த பிறகு தான் மீரா மிதுன் பெண்ணல்ல, பேய் என்பது தெரிகிறது.
பேய்ப் படம் எடுக்க வந்து பேயிடம் சிக்கிக் கொள்ளும் படக்குழுவினர் அதன் பிறகும் படம் எடுத்தார்களா? ஓட்டம் பிடித்தார்களா? பேய் அவர்களை விட்டு வைத்ததா என்பது கலகல திரைக்கதை.
படத்தில் இயக்குனராகவே வருகிறார் செல்வ அன்பரசன். அறிமுக நாயகியின் அறைக்கதவை தட்டி பல்பு வாங்கும் காட்சியில் நடிப்பும் வருகிறது.
நாயகனாக வரும் கெளசிக், நடனம் சண்டைக்காட்சிகளில் காட்டும் அதிரடி வேகம் ரகளை பிளஸ் ரசனை.
நாயகியாக சந்தியா ராமச்சந்திரன். பேய்க்கு பயப்படும் காட்சிகளில் நம்மையும் பயமுறுத்தி விடுகிறார்..
இணை இயக்குனராக கோதண்டம் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்புக்கு உத்தரவாதம்.
ஜெயா டிவி ஜேக்கப், பத்திரிகையாளர் வி.கே.சுந்தர், செல்வகுமார், ஜெய்சங்கர், துரை ஆனந்த், ரவி, விக்கி கதை மாந்தர்களாக இயல்பு காட்டுகிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் செல்வ அன்பரசு, முதல் படம் இயக்குபவர்களின் வலிகளை நகைச்சுவை வழியே நமக்குள்ளும் கடத்தி விடுகிறார். நடிக்க வரும் பெண்களை வேட்டையாடத் துடிக்கும் அந்த ஜமீன்தார் கால பிளாஷ்பேக்கை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக வைத்திருக்கலாம்.
சிரிப்பு ஆவி.
