அந்தரன் (HUNTER) – விமர்சனம்
கதை…
நாயகி இவானா வருண்.. இவர் ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டே ஆட்டோ ஓட்டும் ஒரு இளைஞனை காதலிக்கிறார்… திருமணம் வரை அந்த காதல் சென்றாலும் திடீரென அந்த இளைஞன் கொல்லப்பட்டு கிடக்கிறார்..
இதனால் திருமணமே வேண்டாம் என்று வெறுத்து வாழ்கிறார் இவானா.. வருடங்கள் செல்ல செல்ல உனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என அப்பா வற்புறுத்தலின் பேரில் திருமணத்திற்கு ஓகே சொல்கிறார்… அப்போது பார்க்கும் ஒரு பையனும் திடீரென தற்கொலை செய்து கொள்கிறான்..
அடுத்ததாக வேறு ஒருவரை பார்க்கும் போதும் அவரும் யாரோ ஒருவரால் கொலை செய்யப்படுகிறார்.. அப்படியானால் நாயகிக்கு எதிராக செயல்படுபவர் யார்? நாயகியை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்து கொள்ள முன் வந்தாலோ அவரை கொல்லும் கொலையாளி யார்.? என்பது பற்றிய விசாரணையில் இறங்குகிறார் பிரஜின்..
அவருக்கு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது.. அதுதான் படத்தின் கிளைமாக்ஸ்..!
நடிகர்கள்…
அந்தரன்’ படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்..
அழகான நாயகி இவானா.. (இவர் லவ் டுடே மற்றும் நாச்சியார் படங்களில் நடித்த இவானா கிடையாது..)
அழகான கண்களாலும் உதடுகளாலும் ரசிகர்களை சுண்டி இழுத்து விடுகிறார் நாயகி இவானா.. கார்த்திகா என்ற கேரக்டரில் கலக்கி இருக்கிறார்.. ஆனால் வசனங்களை உச்சரிக்கும் போதும் ஏதோ மனப்பாடம் செய்து சொல்வது போலவே இருக்கிறது..
இப்போதெல்லாம் போலீஸ் கேரக்டராக இருந்தாலும் தாடி வைத்துக் கொண்டே ஹீரோக்கள் நடிக்கின்றனர்… ஆனால் இதில் முழுக்க ஷேவிங் செய்த முகத்துடன் ஸ்மார்டாக வருகிறார் நாயகன் பிரஜின்.. ஆக்சன் ரொமான்ஸ் இல்லை… ஆனால் விசாரணை என்ற பெயரில் விசாரித்துக் கொண்டே பேசிக்கொண்டே இருக்கிறார்..
டாக்டர் அனுபமா உள்ளிட்ட பல கேரக்டர்கள் இருந்தாலும் நாயகன் நாயகி தான் கதை…
தொழில்நுட்ப குழு…
கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார்..
படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா செய்துள்ளனர்.. கலை இயக்கத்தை சசிகுமார் கவனித்திருக்கிறார்..
குறைந்த பட்ஜெட்டில் தரமான பணியை செய்துள்ளனர் தொழில்நுட்பக் குழுவினர்..
பரபரப்பான கிரைம் திரில்லராக தயாரான இப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார்..
கிளைமாக்ஸ் காட்சியை சொன்னால் படத்தில் சுவாரசியம் இருக்காது.. அழகான ஒரு பெண்ணை காதலிக்க நினைத்தாலோ அல்லது அவளை திருமணம் செய்ய நினைத்தாலோ சம்பந்தப்பட்டவர்களை ஒருவர் கொல்கிறார்.. அப்படியானால் அவர் யாராக இருக்கக்கூடும்..?
நாயகியை காதலிப்பவரா அல்லது நாயகியின் பெற்றோரை எதிர்ப்பவரா.? அவரது அப்பாவுக்கு வில்லனா.? இப்படியாக பல கோணங்களில் நம்மை யூகிக்க முடியாத கற்பனையில் படம் முழுவதும் யோசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் இராவணன்..
இப்படியான ஒரு திருப்புமுனையை கொடுத்து அதற்கு ஒரு பிளாஷ்பேக்கும் கொடுத்து நம்பும் படியாக படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ்..
Andharan movie review
