‘கே ஜி எஃப்’- ‘மார்கோ’- ‘டாக்ஸிக்’ படங்களுக்கு பிறகு மீண்டும் இசையில் புயலை கிளப்பும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். அவருடைய இசையில் கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘ காட்டாளன் ‘விரைவில் வெளியாகிறது
‘கே ஜி எஃப்’, ‘மார்கோ’, மற்றும் ‘டாக்ஸிக்’ போன்ற படங்கள் மூலம் தென்னிந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரிப்பில் பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்டாளன்’ படத்திற்கு இசையமைக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் பி. அஜனீஸ் லோகநாத் இசையமைப்பார் என செய்திகள் வெளியாகி இருந்த நிலையில்… தற்போது ரவி பஸ்ரூர் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
பான் இந்திய வெளியீடாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம் மே மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாள திரை உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்குகிறார். பான் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற ‘மார்கோ’ படத்திற்குப் பிறகு கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ் கதாநாயகனாக நடிக்க அவருடன் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது.
‘கே ஜி எஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘சலார் ‘, ‘மார்கோ’ மற்றும் ‘டாக்ஸிக்’ போன்ற படங்களில் தனது அதிரடியான பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மூலம் புகழ்பெற்ற ரவி பஸ்ரூர் மலையாள திரை உலகிற்கு இப்படத்தின் மூலம் மீண்டும் திரும்புகிறார். இது ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்று உறுதி அளிக்கிறது . பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளும் தனித்துவமான இசை பாணியும் இணைந்து திரையரங்குகளை மின்சாரம் பாய்ந்தது போன்ற உற்சாகமிக்க தருணங்களாக மாற்றும் என்று ‘காட்டாளன்’ திரைப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரவி பஸ்ரூர் இப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பல மடங்கு உயர்த்தி உள்ளது.
சர்வதேச தரத்திலான காட்சி அமைப்புகள் -சண்டை காட்சிகள் மற்றும் இசையுடன் கூடிய ஒரு முழுமையான மாஸ் ஆக்சன் திரில்லர் படமாக ‘காட்டாளன்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் திரைக்கதையை ஜோபி வர்கீஸ் – பால் ஜார்ஜ் மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை உன்னி ஆர் எழுதியுள்ளார்.
இதற்கு முன் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. மலையாள திரை உலகில் இதுவரை இல்லாத வகையில் மிக தீவிரமான சண்டைக் காட்சிகள் இப்படத்தில் இடம்பெறும் என்பதை அந்த டீசர் உணர்த்துகிறது.
இப்படத்தின் மூலமாக நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக மலையாள திரை உலகில் அறிமுகமாகிறார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், கபீர் துஹான் சிங், ராஜ் திரண்டாசு , பாலிவுட் நடிகர் பார்த் திவாரி மற்றும் ஜெகதீஷ், சித்திக் ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் பாடகரான ஹனான்சா- ராப்பர் பேபி ஜீன் மற்றும் ஹிப்ஸ்டர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் சண்டைக் காட்சிகள் ‘ Ong-Bak’ பட வரிசை மூலம் உலக அளவில் புகழ்பெற்ற சண்டை பயிற்சியாளர் கெச்சா காம்பாக்டீ மற்றும் அவரது குழுவினர் தலைமையில் தாய்லாந்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் Ong-Bak பட வரிசையில் நடித்து பிரபலமான பாங்க் – Pong எனும் யானையும் இப்படத்தில் இடம் பிடித்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பாகவே இப்படம் மலையாள திரை உலகின் வெளியீட்டிற்கு முந்தைய பல சாதனைகளை முறியடித்துள்ளது என்றும், இத்துறையின் மிகப்பெரிய வெளிநாட்டு விநியோக ஒப்பந்தங்களில் ஒன்றை பெற்றுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் இசை உரிமைகளை டி சீரிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. டிஜிட்டல் மற்றும் செயற்கைக்கோள் விநியோக கூட்டாளியாக சிமேரூ (Shemaroo ) நிறுவனம் இணைந்துள்ளது . இப்படத்தின் பிரம்மாண்டமான வெளிநாட்டு வெளியீட்டு பணிகளை பார்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காட்டாளன் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
