‘லத்தி’ விமர்சனம்

விஷால், பிரபு, சுனைனா, ரமணா ,முனீஸ் காந்த் ,தலைவாசல் விஜய், வினோதினி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் லத்தி .இப்படத்தை ஏ.வினோத்குமார் இயக்கியுள்ளார்.பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.ராணா புரொடக்ஷன் சார்பில் நடிகர்கள் ரமணாவும் நந்தாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ஒரு பெரிய தாதாவை பகைத்துக் கொண்ட சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் அவனை எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறார் என்கிற ஒரு வரிக் கதை தான் படம்.
விஷால் முருகானந்தம் என்கிற போலீஸ்கான்ஸ்டபிள்.போலீஸ் என்றால் எப்படிக் கெத்தாக இருக்க வேண்டும் என்று அநியாயக்காரர்களை அடித்து துவைக்கும் ஒரு கான்ஸ்டபிளாக புகழ்பெற்றவர்.
அவரது மனைவி சுனைனா . இவர்களுக்கு ஒரு பள்ளி செல்லும் பிள்ளை.
துறை ரீதியான நடவடிக்கையால் சஸ்பெண்டில் இருக்கிறார் விஷால் .அவர் என்ன அப்படி தவறு செய்தார் என்றால் ஒரு கற்பழிப்பு வழக்கில் அப்பாவியை அடித்துத் துன்புறுத்தியதாக அவர் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
துறை ரீதியான நடவடிக்கைக்குப் பிறகு நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்கிறார். இந்த நிலையில் மீண்டும் வேலையில் சேர்வதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்.
ஒரு வழியாக தலைவாசல் விஜயின் சிபாரிசில் வேறு ஒரு மேல் அதிகாரி பிரபுவின் பரிந்துரையில் வேலையில் சேர்கிறார்.மீண்டும் சேரும் அவர், தனது பாணியை மாற்றிக் கொண்டு சாதுவாக இருக்கிறார்.
தான் வேலையில் சேர்வதற்கு பெரிதும் உதவிய பிரபுவின் பெண்ணிடம் ஒரு ரவுடி தவறாக நடந்து கொள்ளவே அவனைப் பிடித்து அடிக்க நேரிடுகிறது.அதுதான் அந்தப் பழி வளர்ந்து சுற்றிச்சுற்றி வருகிறது.
உண்மையான குற்றவாளி யார் என்று தெரியாத நிலையில் , மர்மம் தொடர்கிறது.ஒரு கட்டத்தில் அது பிறகு தெரிய வரும்போது ,ஒரு தாதா சுராவின் பிள்ளை வெள்ளை தான் அது என்று தெரிகிறது. தாதாவின் மகன் வெள்ளை எண்ணில் அடங்காத குற்ற செயல்கள் செய்து தப்பித்து வருகிறான்.அடிபட்டதால் அவனது பழிவாங்கல் உணர்வு பற்றிக் கொண்டு எறிகிறது.
கொலைவெறியோடு துடிக்கும் அவனிடமிருந்து விஷால் தப்பித்தாரா? சிக்கிக்கொண்டாரா? என்பதுதான் மீதிக் கதை.
ரத்தக்காயங்களோடு ஒரு கட்டுமானப் பணி நடக்கும் கட்டடத்தில் இருந்து விஷால் தொங்குவது போல் வரும் ஆரம்பக் காட்சியிலேயே பரபரப்பு நம்மைப் பற்றிக் கொள்கிறது.
அதன் முன் கதையாக காட்சிகள் விரிகின்றன.
இதில் முருகானந்தம் என்கிற போலீஸ்கான்ஸ்டபுளாக விஷால் புகுந்து விளையாடி இருக்கிறார்.
ஆக்சன் காட்சிகளிலும் மனைவியிடம் காதல் , பணியில் கடமை என்று வாழ்வதிலும் மகனிடம் பாசம் காட்டுவதிலும் என்று பல்வேறு குணச்சித்திரங்களை வெளிப்படுத்தி உள்ளார். இந்த விறுவிறுப்பான கதைக்குள்.
சுனைனா பாந்தமான மனைவியாக வருகிறார். அளவான வேடம் அளவான நடிப்பு.
தாதா சுராவின் பிள்ளை வெள்ளையாக வருகிற ரமணா வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் .அவர் பழிவாங்கத் துடிக்கும் அந்த துடிப்பும் தவிப்பும் பார்ப்பவரைக் கதிகலங்க வைக்கும்.
விஷாலின் மகனாக நடித்திருக்கும் அந்தப் பெயர் தெரியாத சிறுவன் நடிப்பில் பிரமாதப்படுத்தியுள்ளான்.
தாதா சுராவாக வரும் அந்த நடிகரும் மனதில் அச்சமூட்டி இருக்கிறார்.
ஆக்சன் காட்சிகளை பீட்டர் ஹெயின் தெறிக்கவிட்டுள்ளார். விறுவிறுப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் பாலசுப்பிரமணியெம்.பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. விதவிதமான கருவிகளின் ஓசைகளை மேம்பட்ட தரத்தில் பயன்படுத்தியுள்ளார்.அவரது பின்னணி இசை படத்திற்குப் பெரும் பலம்.
மொத்தத்தில் இந்தப் படம் ஒரு விறுவிறுப்பான ஆக்சன் திரில்லர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இறுதிக்காட்சிகளில் இவ்வளவு கூட்டத்தை வைத்துக்கொண்டு காட்சியை நகர்த்தி இருப்பது சற்று நீளமாகத் தெரிகிறது. மற்றபடி இது ஒரு சுவாரசியமான
இருக்கை நுனியில் இருத்தும் ஆக்சன் தில்லர் என்றே கூறலாம்.
விஷாலுக்கு பேசப்படும் இன்னொரு படம் இது.
