என்ஜாய் திரை விமர்சனம்

முழுக்க முழுக்க இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். அதாவது இளைஞர்களுக்கான படம்.
ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், பணக்கார இளைஞன் ஹரிஷ்குமார் மூவரும் ஒரே ரூம் நண்பர்கள்.
இவர்கள் மாதிரியே நடுத்்தர குடும்பத்தில் இருந்து கல்லூரியில் படிக்க வரும் ஜீவி அபர்ணா, சாருமிஷா, நிரஞ்சனா மூவரும் தங்கள் சீனியர் ஹாசினுடன் ஒரே அறையில் தங்குகிறார்கள்.
காதலி இருந்தாலும், சின்னச் சின்ன சில்மிஷங்களுக்கு கூட தன்னை அனுமதிக்காத விரக்தி மதன் குமாருக்கு. காதலியோ தன் காதலன் ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்ற பிறகு அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்.
சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் விக்னேஷோ சரியான சபலிஸ்ட். இதனால் சில இடங்களில் அறையும் வாங்குகிறான்.
திருமணத்துக்கு முன்பே அந்தரங்க பிரச்சினை குறித்த குழப்பம் ஹரிஷ்குமாருக்கு.
இந்த நிலையில் கொடைக்கானலுக்கு நண்பர்கள் மூவரும் சுற்றுலா போகிறார்கள்.
மிடில்கிளாஸ் பெண்ணான ஹாசின் தனது ஆடம்பர தேவைக்காக வீக்-எண்ட் பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் மூன்று தோழிகளும் அவர் மூலமாக அதேபோன்ற ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்ப…அவர்களுக்கான முதல் பார்ட்டியை கொடைக்கானலில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஏற்பாடு செய்து தருகிறார் ஹாசின்.
எதிர்பார்த்து வந்தது கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் மூன்று நண்பர்களும், பார்ட்டியில் முதன்முறையாக என்ஜாய் பண்ண வந்த மூன்று தோழிகளும் ஒரு இக்கட்டான சூழலில் சந்திக்க நேர…
இந்நிலையில் தோழிகளுக்கு பார்ட்டியில் எதிர்பாராத பிரச்சினை. மூவரில் ஒருவர் ரவுடி ஒருவனின் பலாத்காரத்தில் மாட்டிக்கொள்ள.. அதிரடியாய் அவளை மீட்கிறார்கள் நண்பர்கள். அதன்பிறகு ஒரே அறையில் மூன்று இளைஞர்களும் இந்த மூன்று பெண்களும்.
அந்த இரவில் அவர்கள் அந்தரங்கம் எதிரியின் கேமராவில் சிக்க… இப்போது மானம் கப்பலேறும் அளவுக்கு சிக்கல்.
இந்த சிக்கலில் இருந்து அவர்கள் மீண்டார்களா? இதில் அவர்கள் கற்றுக் கொண்ட பாடம் என்ன? என்பதை தொடங்கியது முதல் முடிவு வரை விறுவிறுப்பு குறையாமல் சொல்லி முதல் படத்திலேயே கவனம் பெற்றிருக்கிறார், இயக்குனர் பெருமாள் சாமி.
இன்றைய பல இளைஞர்-இளைஞிகளின் மனோபாவமே, திருமணத்திற்கு முன்பே ஜாலியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பது தான். பணம் படைத்தவர்களின் ஆடம்பர வாழ்க்கையை பார்த்து பிரமிக்கும் நடுத்தர மற்றும் ஏழை இளைஞர்கள், என்ன விலை கொடுத்தேனும் அதுமாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க நினைத்தால் அதனால் நிகழும் விபரீதமே கதைக்களம்.
காதலியிடம் இருந்து அட்லீஸ்ட் ஒரு முத்தமாவது கிடைக்காதா என ஏங்கியபடியே தனது ஐ.ஏ.எஸ். படிப்பில் தடுமாறும் இளைஞராக மதன்குமார், பார்க்கும் பெண் எல்லாம் தன்னுடன் டேட்டிங் வர மாட்டாளா என தவிக்கும் விக்னேஷ், திருமணத்திற்கு முன்பே அந்தரங்க பிரச்சினையில் சிக்கும் ஹரிஷ்குமார் என மூன்று நாயகர்களுமே எடுத்த எடுப்பிலேயே கேரக்டர்களுடன் ஐக்கியமாகி விடுகிறார்கள். .
இதில் ஐ.டி. யில் வேலை பார்க்கும் டான்ஸர் விக்னேஷ் கூடுதலாக நகைச்சுவையிலும் அட்டகாசப்படுத்துகிறார். காதலில் விழும் இன்றைய இளைஞர்களின் மன ஓட்டத்தை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார், மதன்குமார்.
பணக்கார மாணவிகளின் படோடோபம் கண்டு தாங்களும் அவர்கள் மாதிரி மாறத்துடிக்கும் மிடில்கிளாஸ் பெண்களாக வரும் ஜீவி அபர்ணா, சாருமிஷா, நிரஞ்சனா பொருத்தமான பாத்திரத் தேர்வில் பளபளக்கிறார்கள்..
நல்ல சீனியர் மாணவியாக ஹாசின், மதன்குமாரின் சீரியஸ் காதலியாக சாய் தன்யா இன்றைய நிஜ பிரதிபலிப்புகள்.
அதிரடி போலீஸ் அதிகாரியாக வரும் பில்லி முரளி நடிப்பில் கில்லியடிக்கிறார். வீக்-என்ட் பார்ட்டி நடத்தும் ரிசார்ட் ஓணராக ‘காலாட்படை’ ஜெய், பெண்களை மூர்க்கமாக கசக்கி நுகரத் துடிக்கும் சைக்கோ வில்லனாக யோகிராம் வில்ல போர்ஷனில் மிரட்டுகிறார்கள்.
கே.என்.அக்பரின் ஒளிப்பதிவும் கே.எம்.ரயானின் இசையும் கதைக்களத்தை கூடுதலாக அலங்கரிக்கின்றன.
காலத்துக்கேற்ற கதையை எடுத்து அதற்கு தனது இயக்கத்தில் அழகு சேர்த்திருக்கிறார், பெருமாள் காசி. அவ்வப்போது தலைகாட்டும் இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்து இருக்கலாம்.
இளைஞர்களின் கொண்டாட்டம்.
