திரை விமர்சனம்

பாசக்கார பய திரை விமர்சனம்

நாயகி காயத்ரி ரெமா மீது நாயகன் சக்தி காதல் வசப்படுகிறார். ஒருகட்டத்தில் காதலை சொல்லும்போது அதிர்ச்சி. எனக்காக ஜெயிலுக்குப் போன தாய்மாமன் தான் என் கணவராக வரப்போகிறார் என்கிறார்.

சிறையில் இருந்து வெளியே வரும் காயத்ரியின் மாமன் விக்னேஷ், அக்கா மகளிடம் பாசமாக நடந்து கொண்டாலும் திருமணம் செய்ய மறுக்கிறார். ஆனால், காயத்ரி ரெமாவோ மாமாவை திருமணம் செய்வதில் பிடிவாதமாக இருக்கிறார். இறுதியில் யாருடைய காதல் வெற்றி பெற்றது? தாய்மாமா தாலி கட்டினாரா? அல்லது ஒருதலைக் காதலன் மணாளன் ஆனானா என்பது கிளைமாக்ஸ்.
தாய் மானாக வரும் விக்னேஷ், கிராமத்து இளைஞராக பாசத்திலும், வீரத்திலும் தன்இருப்பை கம்பீரமாக வெளிப்படுத்துகிறார். அக்கா மகள் மீது பாசம் இருந்தாலும், அவரை மனைவியாக பார்க்க தடுமாறும் இடத்தில் நடிப்பில் கலங்க வைக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, தனது கரிய பெரிய கண்களாலேயே பாதி நடிப்பை நமக்குள் கடத்தி விடுகிறார். ஜெயிலில் இருக்கும் மாமனை பார்க்க முடியாமல் திரும்பி வரும் இடத்தில் அந்த சோகம் நம்மையும் தாக்குகிறது.

காயத்ரி ரெமாவை ஒருதலையாக காதலிக்கும் சக்தி, அந்த கேரக்டரோடு பொருந்திப் போகிறார்.

கஞ்சா கருப்பின் காமெடி காட்சிகள் சிரிப்பு ரகம்.

காயத்ரி ரெமாவின் அப்பாவாக படத்தின் இயக்குநர் விவேகபாரதி கெஸ்ட் ரோலில் வருகிறார். வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் ராஜசேதிக்கு இனி புதிய படங்களில் இருந்து சேதி வரும்.

செளந்தர்யனின் இசையில் பாடல்கள் அத்தனையும் ரசிக்கலாம்.

கே.வி.மணியின் கேமரா அந்த கிராமத்தின் மொத்த அழகையும் நம் கண் முன் கொட்டுகிறது.

எழுதி இயக்கியிருக்கும் விவேகபாரதி, கிராமத்து காதலை குடும்ப உணர்வுகளோடு கையாண்ட விதத்தில் வெற்றிக்கோட்டை தொட்டு விடுகிறார்.

‘பாசக்கார பய’ ஒட்டிக் கொள்கிறான், மனதில்.