‘‘நான் புரட்சி தளபதியும் அல்ல… தளபதியும் அல்ல… என் பெயர் விஷால்… அவ்வளவு தான்…’ லத்தி பட விழாவில் வாழ்க கோஷம் போட்ட ரசிகர்களுக்கு –நடிகர் விஷால் பதில்

விஷால் நடிப்பில் ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் படம் லத்தி. வரும் 22-ந் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தை ஆர்.வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
நான்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லத்தி படத்தின் டிரைலரை வெளியிட்டார்.
விழாவில் படத்தின் நாயகன் விஷால் பேசத் தொடங்கும்போதே ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ‘புரட்சித்தளபதி வாழ்க’ என்று சொல்ல…
விஷாலோ, ‘‘வேண்டாம்.. நான் தளபதி அல்ல, புரட்சி தளபதியும் அல்ல. என் பெயர் விஷால். அவ்வளவு தான்.. என்று பேச்சை ஆரம்பித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது. ‘‘லத்தி திரைப்படம் நான்கு மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது. முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதிரி விழாக்களில் சால்வையும், மலர்க்கொத்தும் சிறிது நேரம் மட்டும் முக்கியத்துவம் அளிக்கும். அது வீண் விரய செலவு. அந்த பணத்தில் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுப்பது வழக்கம். இன்றும் அதைத்தான் செய்திருக்கிறேன். ஜாங்கித் சாருக்கு கான்ஸ்டபிள் சல்யூட் செய்கிறேன். பல நூறு குற்றங்களை உங்களுடைய அனுபவத்தில் சந்தித்திருக்கிறீர்கள்.
லோகேஷ் கனகராஜ் விஜயை இயக்குவதைக் கண்டு பொறாமையாக இருக்கிறது. நானும் விரைவில் விஜய்யிடம் கதை சொல்லி இயக்குவேன்.
வினோத் இந்த படத்தின்கதையை சொல்லி 8 நாட்களில் சம்மதம் வாங்கி விட்டார். முதலில், கதை கூறும் முன்பு உங்களிடம் ஒன்று கூற வேண்டும் என்றார். சொல்லுங்கள் என்றேன், நீங்கள் 8 வயது பையனுக்கு அப்பா என்றார். அதெல்லாம் சரி நீங்கள் முதலில் கதையைக் கூறுங்கள் என்றேன். கதை கேட்டு முடித்ததும் நான் என்ன உணர்ந்தேனோ அதை பார்ப்பவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
படப்பிடிப்பில் வேண்டுமென்றே அடி வாங்கவில்லை. சரியாக கட்டி முடிக்காத கட்டிடத்தில் நடக்கக் கூடிய சண்டைக் காட்சிகள் மிரட்டலாக இருக்கும். 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அடி படுவதை தவிர்க்க முடியவில்லை. ஸ்டண்ட் மாஸ்டர்பீட்டர் ஹெயினின் பணியைக் கண்டு வியந்தேன்.
இப்படத்தில் இரண்டு பேர் பேசப்படுவார்கள். ஒருவர் இசைமைத்த யுவன் சங்கர் ராஜா, இரண்டாமவர் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர். கேட்ட விஷயங்களை செய்து தர முடியுமா? என்று சந்தேகப்பட்ட விஷயங்களை சுலபமாக செய்து கொடுத்த கலை இயக்குர் கணேஷுக்கு முக்கியமாக நன்றி கூற வேண்டும்.
45 வயதில் இது என் 32-வது படம் சண்டைக் காட்சிகளில் நடிப்பது சாதாரண விஷயம். ஆனால், சிறுவன் ராகவ் 100 அடி உயரத்தில் கம்பியில் பிடித்து தொங்க வேண்டும். 4வது மாடியில் இருந்து நெட்டில் இருவரும் குதித்தோம். முன்பே ராகவ் பெற்றோருக்கு நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று சொல்லக் கூடாது என்று படக்குழுவிடம் சொல்லி வைத்திருந்தேன்.. ஆனால், நிஜமாக சொல்கிறேன், எந்த குழந்தையாலும் நடிக்க முடியாது. அவனுக்கும், அவனுடைய பெற்றோருக்கும் நன்றி.
ஒரு தயாரிப்பாளர் இறங்கி வேலை செய்தால் அதைவிட சௌகரியமான விஷயம் நடிகருக்கு அமையாது. அப்படி ஒரு தயாரிப்பாளர்களாக ரமணாவும், நந்தாவும் இருந்தார்கள். ஒரு படத்திற்கு இந்தளவிற்கு தான் பட்ஜெட் என்று ஒதுக்கப்படும். ஆனால், இந்த விஷயங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று செலவை அதிகப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்களே கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியொரு தயாரிப்பாளர்கள் இருந்தால், 4-வது மாடியில் இல்லை, 8-வது மாடியில் இருந்தும் கூட குதிக்கலாம்.
நான் சாதாரணமாகவே திருட்டு வீடியோ இருந்தால் இறங்கி கேள்வி கேட்பேன். இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது. ஆகையால், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தை பாருங்கள், நன்றி’’ என்றார்.
முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாங்கித் பேசும்போது, ‘‘இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. பொதுவாக சினிமாவில் கதாநாயகர்கள் பெரிய பதவியில் இருக்கும் கதாபாத்திரத்தைத் தான் விரும்புவார்கள். ஆனால், காவல்துறைக்கு நல்ல பெயரோ கெட்டப் பெயரோ ஒரு கான்ஸ்டபிள் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதத்தில் தான் கிடைக்கும். நிஜத்தில் ஒரு கான்ஸ்டபிளாக இருப்பது எளிதல்ல அவருக்கு பல சவால்கள் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை முதன்முறையாக ஹீரோவாக தேர்ந்தெடுத்து நடித்த விஷாலுக்கு நன்றி’’ என்றார்.
தயாரிப்பாளர் ரமணா பேசும்போது, ‘‘ஜாங்கித் சாரை டீஸருக்கே உங்களை அழைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருக்கிறோம். முதலில் நாங்கள் கதை கேட்டு பிடித்திருந்தால் தான் விஷாலுக்கு கூறுவோம். இல்லையென்றால், விஷால் அடிப்பார். லத்தி கதையை கேட்டதும் பிடித்தது. விஷாலிடம் கூறினோம். அவர் கதை கேட்டுவிட்டு ஒரு நாள் கழித்து தான் ஒப்புக் கொண்டார்.
சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெயினுக்கு மிகப் பெரிய நன்றி. இரண்டாவது பாதியில் 45 நிமிடங்கள் சண்டைக் காட்சிகள் இருக்கும். எங்களிடம் அவர் ‘புலிமுருகனுக்கு தேசிய விருது வாங்கினேன். அதன்பிறகு இப்படத்திற்கு வாங்கப் போகிறேன்’ என்று கூறினார். 5 மாதங்கள் விடாமுயற்சியாக உழைத்து சண்டைக் காட்சிகளை இயக்கிக் கொடுத்தார்.
என்னை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. என்னையும் நந்தாவையும் தயாரிப்பாளர்களாக உருவாக்கிய என் நண்பன் விஷாலுக்கு நன்றி’’ என்றார்.
பீட்டர் ஹெய்ன் பேசுகையில், ‘‘நான் இந்த படத்தை பார்த்து விட்டேன். படம் பார்ப்பதற்கு முன்பு வரை நான் தான் இந்த படத்துக்காக தேசிய விருது வாங்குவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், இறுதிக் காட்சிகளில் விஷாலின் நடிப்பைப் பார்த்ததும் அவருக்குத் தான் கிடைக்கும். அவன் இவன் படத்திற்கு பிறகு விஷால் நடிப்பை இப்படத்தில் பெரிதாக பேசுவார்கள்’’ என்றார்.
தயாரிப்பாளர் நந்தா பேசும்போது, ‘‘ஜாங்கித் சாரை சிறப்பு விருந்தினராக அழைக்க சென்றபோது, அவர் நிஜகதைகளை கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நம் கற்பனைகளுக்கும் எட்டாத விஷயங்கள் நிஜ வாழ்க்கையில் நடக்கிறது. பல நூறு கதைகளை வைத்திருக்கிறார். அத்தனையும் மறைக்கப்பட்டவை, அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை.
நடிகர், நண்பன் என்பதைத் தாண்டி பார்வையாளர்கள், ரசிகர்கள் என்று விஷாலின் பார்வை நுணுக்கமாக இருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் என்ன வசனம் பேசப் போகிறோம் என்பது அவருக்கு நன்றாக தெரியும். இருப்பினும் சில மாற்றங்களைக் கூறுவார். அதைக் காட்சியாக பார்க்கும்போது பார்வையாளர்களின் மனதை எந்தளவிற்கு கவனித்திருக்கிறார் என்று நினைத்து ஆச்சரியமாக இருந்தது. இப்படம் வெற்றியடைய காத்திருக்கிறோம்’’ என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, ‘‘ஜாங்கித் சாருடைய மிகப்பெரிய விசிறி நான். தீரன் படத்தில் இருந்தே அவரை மிகவும் பிடிக்கும். இன்று சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. பொதுவாக எனக்கு ஆக்ஷன் படங்கள் தான் பிடிக்கும். முதல் நாள் முதல் காட்சி பார்த்து விடுவேன். அதேபோன்ற ஆக்ஷன் படத்தின் டிரைலர் வெளியிட அழைத்ததற்கு நன்றி. இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது வினோத்திற்கு முதல் படம் போல தெரியவில்லை. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.
