மக்களும் மகேசனும் நினைத்தால் அரசியலுக்கு வருவேன்: -லெஜண்ட் சரவணன்

முன்னணி தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் சமீபத்தில் வெளியான லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதன்பிறகு அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள்அவரை சூழ்ந்து வாழ்த்து தெரிவித்தார்கள். லெஜண்ட் படத்தில் அவர் நடிப்பை வியந்து பாராட்டி விட்டு, அடுத்த படம் எப்போது என்று கேட்டு அவரை அன்பால் திணறடித்தார்கள்.
இந்நிலையில் கோவைக்கு வந்த அவர் பிரைடல் ஸ்டுடியோ நூரின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அவரை காண திரண்ட ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்தபடி ஸ்டூடியோவை திறந்து வைத்தவர், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதற்குண்டான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வில் லெஜண்ட் சரவணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஒரு நிரூபர் அவரிடம், ‘‘சினிமாவுக்கு வந்த பிறகு, கதாநாயகர்களின் அடுத்த கட்ட நகர்வு அரசியல் தான். இதுவிஷயத்தில் நீங்கள் எப்படி?’’ என்று கேட்க,
பதில் அளித்த அவர், ‘‘மக்களும், மகேசனும் நினைத்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’’ என்று தெரிவித்தார். இதை கேட்டதும் அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.
தொடர்ந்து பேசிய லெஜண்ட் சரவணன், ‘‘சென்னையை போலவே கோயம்புத்தூரும் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அதை கண்கூடாக பார்க்க முடிகிறது. கடுமையாக உழைப்பவர்களை எனக்கு எப்போதும் பிடிக்கும். அப்பேர்ப்பட்ட ஒருத்தர் தான் பிரைடல் ஸ்டுடியோ நூரின் நிறுவனர் நூர் முகமது. அவர் மிகவும் அன்பான மனிதர். அவரது அன்பிற்கு கட்டுப்பட்டு தான் இங்கு வந்தேன்’’ என்று கூறினார்.
நடிகர் நடிகைகளை மிகவும் அழகாக திரையில் காட்டுவதில் ஒப்பனை கலைஞர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்றும், நூர் முகமது மிகவும் திறமையான கலைஞர் என்றும் லெஜெண்ட் சரவணன் கூறினார்.
