வரலாறு முக்கியம் பட விமர்சனம்

கோவையைச் சேர்ந்த ஜீவா, எந்த வேலைக்கும் போகாமல் அரசியல்வாதி வி.டி.வி கணேஷூடன் ஜாலி அரட்டை என்று ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டருகே ஒரு மலையாளக் குடும்பம் குடியேற, அதில் அக்கா-தங்கை என அழகுப் பெண்கள்.
அதில் இளையபெண் ஜீவாவை விரும்ப, ஜீவாவுக்கோ பெரிய பெண் காஷ்மீரா மீது காதல். துரத்த துரத்தி காதல் சொல்கிறார். முதலில் மறுத்து பின் அந்த காதலுக்கு ஓ.கே. சொல்கிறார், காஷ்மீரா. பெண்களின் தந்தையோ மகள்களுக்கு துபாய் மாப்பள்ளைகளை பார்த்து வைத்திருக்கிறார். இந்நிலையில் மகளின் காதல் பெண்ணின் தந்தைக்கு தெரிய வர, ஜீவாவின் பெற்றோரிடம் அவர் ஆவேசமாக… இதனால் ஜீவாவின் பெற்றோர் மகனிடம் காதலை தியாகம் செய்ய கேட்டுக் கொள்கிறார்கள்.
ஆனால் இந்த காதல் ஜோடியை இணைத்து வைக்க ஜீவாவின் அரசியல்வாதி நண்பர் வி.டி.வி.கணேஷ் முயற்சி மேற்கொள்கிறார். முடிவில் ஜீவா காதலியை கரம் பற்றினாரா என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ்.
பக்கத்து வீட்டு பையன் போல இருக்கும் ஜீவாவின் தோற்றம் இந்த காதலன் கேரக்டருக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது. காஷ்மீராவை துரத்தி துரத்தி காதலுக்கு அங்கீகாரம் பெறும் இடத்திலும், வி.டி.வி. கணேஷூடனான காமெடியிலும் கலக்கியிருக்கிறார். கல்யாண வீட்டில் பெண் தோற்றத்தில் அவர் செய்யும் அட்டகாசத்துக்கு தியேட்டரே அலறுகிறது.
நாயகியாக வரும் காஷ்மீரா தோற்றத்திலும், நடிப்பிலும் அழகு. அவரது தங்கை பிரக்யா காதலுக்காக ஜீவாவை துரத்தும் காட்சிகள் ரசனை பிளஸ் ரகளை.
ஜீவாவின் பெற்றோராக கே.எஸ்.ரவிகுமார்-சரண்யா பொன்வண்ணன். மகனுக்காக மன்னிப்பு கோரும் இடத்திலும், முன்னாள் காதலி வீட்டுக்கு வந்த நேரத்தில் அடக்கமாட்டாத சந்தோஷத்தில் உலா வரும் இடத்திலும் கே.எஸ்.ரவிகுமாரிடம் அப்பபடியொரு எனர்ஜி நடிப்பு.
அந்த கண்டிப்பான மலையாள அப்பா கேரக்டரில் சித்திக் இ்ன்னொரு நடிப்புச் சுரங்கம். ஜீவாவின் அரசியல்வாதி நண்பராக வரும் வி.டி.வி.கணேஷ் வரும் நேரமெல்லாம் நடிப்பில் தனிக்கொடி பறக்க விடுகிறார்.. இவரும் லாரி டிரைவர் மொட்டை ராஜேந்திரனும் 2050-ல் சந்தித்துக் கொள்வதுபோல் தான் கதையே தொடங்குவதால், பழம்பெரும் நடிகர் சிம்பு என்ன சொன்னார்னா.. என்று இவர் ஆரம்பிக்கும் நேரமெல்லாம் தொடர் கரகோஷம் அரங்கில்.
ஷான் ரகுமானின் இசை ‘தேவலாம்’ ரகம். கலகலப்பான பின்னணியில் இளைஞர்களுக்கான ஒரு காதல் மோதல் கதையை தர விரும்பிய இயக்குனர் சந்தோஷ்ராஜன், காண்டம் உள்ளிட்ட ‘ஏ’ ரக வசனங்களை தவிர்த்திருந்தால் குடும்பங்களையும்் ஈர்த்திருக்கலாம்.
