சினி நிகழ்வுகள்திரை விமர்சனம்

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் மலையாள திரைப்பட விமர்சனம்

வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வர நேர்மையாக உழைத்து தான் முன்னேற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை தவறான வழியிலும் சம்பாதித்து பெரிய ஆளாகலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
வழக்கறிஞர் வினீத் சீனிவாசன் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார். இந்நிலையில் அவரது அம்மா தவறி விழுந்து காலை முறித்துக் கொள்கிறார்.அவருடைய சிகிச்சைக்குப் பணமில்லாமல் தவிக்கும் வினீத் சீனிவாசனுக்கு, இப்படிப்பட்ட பல விபத்துகளை சாலை விபத்துகளாக மாற்றி காப்பீட்டுப் பணம் பெற்றுத் தரும் ஒருவரது அறிமுகம் ஏற்படுகிறது.
அதன்பின்னர் அவரும் அதேவழியில் பணம் பார்க்கத் தொடங்குகிறார்.

இதனால் ஏற்கெனவே அதைச் செய்து வரும் ஒருவர் பகையாகிறார்.. அப்புறம் என்னாகிறது என்பது கிளைமாக்ஸ்.
படத்தின் நாயகனாக வழக்கறிஞர் பாத்திரத்தில் நடித்திருக்கும் வினித் சீனிவாசன் அந்தப் பாத்திரத்திற்கு அச்சாக பொருந்துகிறார். தவறான ரூட்டில் பயணப்படும் காட்சிகிளில் குற்ற உணர்வே இல்லாத அந்த நடிப்பு, திரைக்கு புதுசு.
அவருக்கு ஜோடியாக வரும் அர்ஷா பைஜூ அவரிடம் தவறை சுட்டிக் காட்டும் இடங்களில் பிரகாசிக்கிறார்.
இன்னொரு வழக்கறிஞராக வரும் சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் கவனிக்க வைக்கிறார். இறந்த பின்பும் வினீத்தின் நினைவுகளில் அவர் வந்து போகும் காட்சிகள் நடிப்பும் புதுமையும் இணைந்த கலவை.
வினீத்தின் தோழியாக வரும் தான்விராம் இயல்பான நடிப்பில் ரசிக்க வைக்கும் இன்னொரு நட்சத்திரம்.
கதையோட்டத்தில் இணைந்த ஒளிப்பதிவில் விசுவஜித் ஒடுக்கத்தில் தனித்து தெரிகிறார். பின்னணி இசையில் சிபி மேத்யூ அலெக்ஸ் தன் இருப்பை உறுதி செய்கிறார்.
அபிநவ் சுந்தர்நாயக் இயக்கி இருக்கிறார். நகைச்சுவை பின்னணியில் கதையை சரளமாக கொண்டு செல்வதில் ‘கிங்’ என்பதை நிரூபித்தாலும், அநீதியே நீதி என்னும் அந்த தவறு மட்டும் உறுத்துகிறது.