சினி நிகழ்வுகள்திரை விமர்சனம்

மிரள் பட விமர்சனம்


காதல் தம்பதிகளான பரத்-வாணிபோஜனுக்கு 10 வயதில் மகன் இருக்கிறான். வாழ்க்கை சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் வாணிக்கு அடிக்கடி கெட்ட கனவு வந்து பயமுறுத்துகிறது. தன்னையும் கணவரையும் ஒருவன் கொல்வது போல் வரும் அந்த கனவால் பயந்து போகிறார், வாணி.

இதனால் தம்பதிகள் ஜோதிடரை நாட, அவரோ குலதெய்வ கோவிலில் சென்று வழிபடுங்கள் என்று கூறுகிறார். இதைத் தொடர்ந்து தங்கள் மகனுடன் தம்பதிகள் குலதெய்வ கோவிலுக்கு காரில் பயணப்படுகிறார்கள். பூஜை முடிந்து இரவில் திரும்பும்போது சில முரட்டு முனிதர்களால் வழி மறிக்கப்பட்டு தாக்கப்படுகிறார்கள். இதில் ஒருவன் வாணி கனவில் பார்த்த அதே முகம். அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்கும்போது பரத்தின் மனைவியும் மகனும் காணாமல் போகிறார்கள். அதிர்ந்து போகும் பரத் அவர்களை தேடுகிறார். அவர்கள் கிடைத்தார்களா? கனவுக்கும் நடந்த சம்பவத்துக்கும் என்ன தொடர்பு என்பது யூகிக்க முடியாத கிளைமாக்ஸ்.

பரத்துக்கு இது சவாலான வேடம். அடிதடியை ஒதுக்கி வைத்து விட்டு அறிவால் சாதிக்க கிடைக்கும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நாயகி வாணி போஜனுக்கு இது முக்கியமான படம். பயந்து நடுங்கும்போதே நம்மையும் பயமுறுத்தி விடுகிறார்.
இவர்களின் மகனாக வரும் அங்கித்தும் தனது கேரக்டரில் இயல்பான நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறான்.
பரத்தின் நண்பனாக வரும் ராஜ்குமாருக்கு இந்த படத்தில் சற்றே மாறுதலான வேடம். நடிப்பில் அவரது புது பரிமாணம் வெளிப்படுகிறது.
வாணி போஜனின் தந்தையாக கே.எஸ்.ரவிக்குமார், அம்மா மீரா கிருஷ்ணன் பொருத்தமான பாத்திரத் தேர்வு.
பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார், இசையமைத்த பிரசாத்.
சுரேஷ் பாலாவின் கேமரா இருட்டுக் காட்சிகளை மிரட்டலுடன் படமாக்கி தன் பங்குக்கு மிரட்டுகிறது.
திகிலில் ஆரம்பித்து திரில்லரில் முடித்திருக்கும் இயக்குனர் சக்திவேல், அந்த எதிர்பாராத சஸ்பென்ஸ் கிளைமாக்சில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.