சினி நிகழ்வுகள்

உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை ‘விருமன்’

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்.’
முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ்ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் மனோஜ் பேசும்போது, ‘‘2டியில் இருந்து இப்படத்தின் வாய்ப்பைக் கூறினார்கள். ஆனால், இரண்டு மாதங்கள் வரை எந்த தொடர்பும் இல்லை. ஆகையால், குழம்பிக் கொண்டிருந்த என்னை என் மனைவி தான் தெளிவுபடுத்தினார். 2டியிலிருந்து அழைத்திருக்கிறார்கள், கண்டிப்பாக கொடுப்பார்கள் என்று கூறினார். நான் பார்த்து வளர்ந்த பெண் அதிதி. காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூட நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி’’ என்றார்.
நடிகை இந்திரஜா பேசும்போது, ‘‘இந்த படத்தில் சூரி மாமாவிற்கு ஜோடியாக நடிக்கிறேன். ஆனால், உங்கள் அனைவருக்கும் தெரியாத ரகசியம் அவர் மடியில் அமர்ந்து தான் 2வது மொட்டை அடித்தேன். என்னை அழகாக காண்பித்த ஒளிப்பதிவாளர் செல்வா சாருக்கு நன்றி. எனக்கு ஆதரவளிக்கும் என் குடும்பத்தாருக்கும் நன்றி’’ என்றார்.
டைரக்டர் ராஜூமுருகன் பேசும்போது, ‘‘2டி ராஜா சார் இந்த விழாவிற்கு என்னை அழைத்தார். என்னுடைய கதையைக் கூறுவதற்கு தேனி சென்றேன். அப்போது, இந்த டீயூனுக்கு பாடல் வேண்டும் என்று கூறினார். அவசரமாக வேண்டும் என்றார். அப்படித்தான் இந்த படத்திற்கு 3 பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பாடல் இசைஞானி இளையராஜா குரலில் வந்திருக்கிறது. அந்த வாய்ப்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.
பொதுவாக ஜனங்களின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஈரானிய சினிமா என்று எந்த மொழி படமாக இருந்தாலும், ஜனங்களின் படங்கள் தான் முக்கியத்துவம் பெறும்.
கார்த்தி சாருடன் அடுத்த படம் பணியாற்றப் போகிறேன். அவர் எப்போதும் முழு சார்ஜ் போட்ட பேட்டரி போன்று இருப்பார். உழவன் என்ற பெயரில் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை செய்து வருகிறார்.
நான் எப்போதும் அண்ணாந்து பார்க்கக் கூடிய கலைஞன் ராஜ்கிரண் சார். என்னுடைய முன்னோடியாக அவரைப் பார்க்கிறேன். இப்படம் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
நடிகை சரண்யா பேசும்போது, ‘‘குட்டிபுலி படத்தில் முத்தையாவுடன் பணியாற்றினேன். அதற்கு பிறகு அவரின் படங்களில் நான் பணியாற்றவில்லை. இந்த படத்திற்கு அழைத்தபோது உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஆகையால் நான் கதை கேட்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். அவர் கூறியதை செய்தாலே காட்சிகள் நன்றாக வரும்.
அனைவரையும் தங்க தட்டில் வைத்து தாலாட்டுவது 2டி நிறுவனம் மட்டும் தான். என்ன கேட்டாலும் செய்து கொடுப்பார்கள். கார்த்திக்கு ஏற்கனவே அம்மாவாக நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்ததும் மகிழ்ச்சி. பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தில் நடித்திருக்கிறேன். ராஜ்கிரணுடன் நடிக்கும்போது குடும்ப உறவாகத் தோன்றும்படி பழகுவார். எல்லோருக்கும் அம்மாவாக எப்படி அப்படி இயல்பாக நடிக்கிறீர்கள்? என்று எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள். நான் எப்படி நடிக்கிறேன் என்று எனக்கே தெரியாது, அது கடவுளும் தமிழ் சினிமாத்துறையும் எனக்குக் கொடுத்த மிகப்பெரிய வரம்’’ என்றார்.
தயாரிப்பாளர், நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது,
சூர்யா, கார்த்தி மற்றும் ராஜா சார் அனைவரையும் பார்க்கும் போது எனக்கு அந்த மாதிரி உறவுகள் இல்லை என்று ஏக்கமாக இருக்கிறது. ஸ்டுடியோ 9 இன்றுவரை விநியோகம் செய்யும் நிறுவனமாகத்தான் இருக்கிறது. என்னால் வாய்ப்பு கிடைத்தவர்கள் வளர்ந்த பிறகு என்னைவிட்டு சென்று விட்டார்கள். ஆகையால், நானே தயாரித்து நடிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இப்போது எனது மனைவி எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.
கார்த்தியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்படத்தில் நிறைவேறியது. கார்த்தி அண்ணன் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் காட்சியிலும் பயமின்றி நடிக்கக் கூடியவர். அவருடன் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி’’ என்றார்.
நடிகர் சூரி பேசும்போது, ‘‘சூர்யா அண்ணன் நீங்கள் எப்போதும் நன்றாக இருப்பீர்கள். கார்த்தி அண்ணனும் நன்றாக இருப்பார். உங்களுக்கு கிடைக்கக் கூடிய வருமானத்தை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கலாம். ஆனால், பலருக்கும் வாய்ப்பளித்து வருகிறீர்கள். கல்வி, வேலை என்று மற்றவர்களுக்கு ஏதாவது ஒன்றை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். 2டி நிறுவனத்தை ‘சவுக்கு’ போல ராஜா சார் தாங்கிப் பிடித்து கொண்டிருக்கிறார்.
ஒழுக்கத்திற்கும், உண்மைக்கும் உதாரணமாக இருக்கும் ராஜ்கிரண் அப்பாவிற்கு நன்றி. இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும் நீங்கள் வேட்டியை தூக்கிக் கட்டினால் அழகாகத்தான் இருக்கும்.
மறுநாள் படப்பிடிப்பிற்கு தேவையானவற்றை முதல்நாளே திட்டமிட்டு தயார் நிலையில் வைக்கிறார்கள். அதிதிக்கு வாழ்த்துகள். சரண்யா அக்காவிற்கு வாழ்த்துகள். நீங்கள் எல்லோருக்கும் அம்மாவாக நடிக்கவில்லை, அம்மாவாகவே வாழ்கிறீர்கள். ஆகையால், தான் எல்லோருக்கும் அம்மாவாக தோன்றுகிறது.முத்தையா மண் சார்ந்து அதோடு ஒன்றி வாழ்ந்து வருகிறார், அதனால் தான் தொடர்ந்து அதுபோன்ற படங்களை இயக்கி வெற்றிபடமாக கொடுக்க முடிகிறது.
படத்தின் நாயகி பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற பந்தா இல்லாமல் அனைவரிடமும் இயல்பாக பழகுவார். உணர்ச்சிவசப்படக் கூடிய காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும்போது கூட நகைச்சுவை செய்து விடுவார். முதல் படத்திலேயே சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார்.
மதுரை விழாவில், ஆயிரம் அன்ன சத்திரம் கட்டுவதை விட, ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவி ட ஒரு ஏழைக்கு கல்வி கற்பிப்பது சிறந்து என்று பாரதியாரின் கூற்றைத் தான் கூறினேன். நான் கடவுளுக்கு எதிரானவன் அல்ல. யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காகவும் கூறிவில்லை. மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன்’’ என்றார்.
நடிகர் ராஜ்கிரண் பேசும்போது, ‘‘2டி நிறுவனம் எனக்கு முதல் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜா அவர்களுக்கும் நன்றி. தம்பி முத்தையாவும், கார்த்தியும் கொம்பனில் முதல் வாய்ப்பு கொடுத்தார்கள். இரண்டாவது படம் விருமன் கொடுத்ததற்கு நன்றி. 2டி நிறுவனம் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராக பாவித்து தேவையான வசதிகளை செய்து கொடுத்தார்கள்.
இப்படத்தை வியாபார நோக்கில் எடுக்காமல், நல்ல கருத்துகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொறுப்போடு தம்பி முத்தையா எடுத்திருக்கிறார். வாழ்த்துகள்’’ என்றார்.
சக்தி பிலிம் பேக்டரி சக்தி பேசும்போது, ‘‘விருமன் படத்தின் தமிழ்நாடு விநியோகத்தை சக்தி பிலிம் பாக்டரி செய்கிறது. கார்த்தி நடித்த பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், கடைக்குட்டி சிங்கம், நான்காவதாக விருமனையும் நான் தான் விநியோகம் செய்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. ராஜ்கிரண் போன்ற கலைஞர்களின் படங்களை வண்டி கட்டிக் கொண்டு வந்து பார்ப்பார்கள். சம காலத்தில் கிராமங்களை இயல்பாக பதிவு செய்ய பாரதிராஜாவிற்குப் பிறகு யாரும் கிடையாது. அதை முத்தையா நிறைவேற்றி இருக்கிறார்.
உலகத்தில் எங்கோ மூலையில் இருக்கும் விஷயங்களைப் பற்றி தேடித் தேடி தெரிந்து கொள்கிறார்கள். ஆனால், பக்கத்தில் இருக்கும் கிராமத்தை பற்றி தெரிந்து கொள்ள தவறி விடுகிறோம். கூட்டு குடும்பங்கள் எப்படி இருக்கும் என்பதை மதுரை மாதிரியான கிராமங்களில் தான் தெரிந்து கொள்ள முடியும். கிராமப் படங்களை ஆதரித்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி இன்னும் மேன்மையடையும். அதற்கான மிகப் பெரிய அடித்தளமாக இப்படம் இருக்கப் போகிறது’’ என்றார்.
நடிகை அதிதி பேசும்போது, ‘‘என் கனவை நிறைவேற்றிய அப்பா, அம்மா, தங்கைக்கு நன்றி. என் வீட்டை விட்டு நான் எங்கும் சென்றதில்லை. அந்த குறை தெரியாமல் பார்த்து கொண்ட 2டி நிறுவனத்திற்கும், படக்குழுவிற்கும் நன்றி. முத்தையா எல்லாவற்றையும் ஊக்கப்படுத்திக் கற்றுக் கொடுத்தார். இப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கொடுத்த யுவன் சாருக்கு நன்றி. கார்த்தி சார் தினமும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுப்பார். சூரி சாருடன் நடிக்கும் காட்சிகளில் ஏதாவது நகைச்சுவை சொல்லிக் கொண்டிருப்பேன். ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் சாருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. கார்த்தி சார் போலவே நானும் முதல் படமாக மண் சார்ந்த படத்தில் நடித்திருக்கிறேன்’’ என்றார்.
2டி ராஜசேகர பாண்டியன் பேசும்போது, ‘‘கார்த்திக்கு தான் முதலில் நன்றி கூற வேண்டும். கொம்பன் போன்று ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். கொம்பன் – 2 எடுக்கலாம் என்று முத்தையா கூறினார். ஆனால், புதிதாக மண் சார்ந்த படம் வேண்டும் என்றதும், விருமன் கதையைத் தேர்ந்தெடுத்தோம். உறவுகளை அரவணைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதியை மறந்துவிடாத படி ஒரு படம் எடுக்க நினைத்தோம். எல்லா உறவுகளையும் அரவணைத்துக் கொள்ளும்படியான ஒருவர் ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார். இப்போது எனது தங்கை அப்படி இருக்கிறார்.

அதிதியை அறிமுகப்படுத்தியதில் எங்களுக்குத்தான் பெருமை. எங்களை நம்பி அதிதியை அனுப்பி வைத்த ஷங்கர் சாருக்கும், ஈஸ்வரி மேடமிற்கும் நன்றி. ராஜ்கிரண் சாரை ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு அழைத்தோம். அப்போது அவரிடம் தேதிகள் இல்லை. இந்த படத்தில் நடித்ததற்கு நன்றி.
பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை திரையிலும், திரைக்கு வெளியிலும் நடந்து கொள்ளும் முத்தையாவிற்கு இந்த பட வாய்ப்பைக் கொடுத்தற்காக பெருமைப் படுகிறோம். எல்லோருக்கும் இப்படத்தை பிடிக்கும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
இயக்குனர் முத்தையா பேசும்போது, ‘‘இப்போது இருக்கும் காலகட்டத்தில் இரண்டு பிள்ளைகளை வளர்ப்பது சிரமமாக இருக்கிறது. இப்போது ஒரு குழந்தை, பிறகு குழந்தையே வேண்டாம். நான் இருவர்.. நமக்கு இருவர் என்ற நிலை வரலாம்.
இப்படம் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை தான். என் வீட்டிற்கு பக்கத்தில் நேரில் நடந்ததைத் தான் இப்படத்தில் எடுத்திருக்கிறேன். கார்த்தி சாரிடம் இக்கதையைக் கூறியதும் ஒப்புக் கொண்டார். இப்படம் துவங்கும்போது என்ன வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளுங்கள் என்று ராஜா அண்ணன் கூறினார். ஆனால், இப்படத்தில் அதிகமாக ஆன செலவு வெள்ளையடித்தது தான்.

இளையராஜா சார் என் படத்திற்கு டைட்டில் பாட்டு பாடிக்கொடுத்ததில் மிகுந்த பெருமை.
செல்வா நன்றாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வடசென்னையில் தத்ரூபமாக படப்பிடிப்பு தளத்தை அமைத்திருந்தார் ஜாக்கி. ஆகையால், இந்த படத்திற்கு அழைத்தோம்.
பொதுவாக நான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது வியாபார நோக்கத்தையும் மனதில் வைத்துத்தான் எடுப்பேன். சூழல்கள் அமைந்தால் நகரம் சார்ந்தும் படம் எடுப்பேன். ஆனால், தவறான படத்தை ஒருபோதும் இயக்க மாட்டேன். என் படத்தில் யார் மனதையும் புண்படுத்தும் வசனமோ இடம்பெறாது’‘ என்றார்.
நடிகர் கார்த்தி பேசும்போது, ‘‘இப்படத்தின் டிரைலர் வரும்வரை பதட்டமாகத்தான் இருந்தது. டிரைலர் வெளியாகி வெற்றிப் பெற்றதும் அந்த எண்ணம் மாறிவிட்டது.
பருத்தி வீரன் பாணி கொம்பனில் வரக் கூடாது என்று கவனமாக இருப்பேன். கடைக்குட்டி சிங்கத்தில் 5 அக்காவிற்கு தம்பியாக இருக்க வேண்டும். முன் படத்தின் சாயல் வரக் கூடாது என்று எண்ணுவேன்.

ஷோபி மாஸ்டர் எனக்கு என்ன வருமோ அதை உணர்ந்து கொடுப்பார். கிராம வாழ்க்கை தான் அழகாக இருக்கிறது. அந்த கதாபாத்திரம் ஏற்று நடிக்கும்போது சுகமாக இருக்கிறது.

என் மாமனாருக்கு என்னுடம் பேச மிகவும் பிடிக்கும் ஆனால், எனது தோளை தொட்டு விட்டு சென்று விடுவார். நானே வலிய சென்று அவரிடம் பேசுவேன். உலக அரசியல் வரைக்கும் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். எப்படி என்று கேட்டால், எல்லாம் டீ கடையில் தெரிந்து கொண்டது தான் என்பார். படத்தில் ராஜ்கிரண் சார் நடிக்கிறார் என்று கூறியதும் நம்பிக்கை வந்துவிட்டது.
காசு வாங்காமல் நடிப்பேன் ஆனால், சம்பளம் வாங்காமல் நடிக்க மாட்டேன், என்பார் பிரகாஷ் ராஜ் சார். கலைஞன் என்றால் பணத்தைப் பொருட்படுத்தாமல் நடிக்க வேண்டும் என்ற அழகான விஷயத்தை பிரகாஷ் ராஜ் கற்றுக் கொடுத்தார்.
என் முதல் படம் வெற்றி என்ற வார்த்தையை என்னிடம் முதலில் கூறியது சக்தி தான். நகரத்தில் இருப்பவர்களின் கேளிக்கை வேறு, கிராமப்புறங்களில் இருப்பவர்களின் கேளிக்கை வேறு என்று உற்சாகமாக கூறுவார். அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் மாதிரி. மிகவும் உண்மையான மனிதர்.
அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல, அது நம்பிக்கை என்று கூறும் படம் தான் இது.
படப்பிடிப்பில் இருக்கும்போது ஒரு அம்மா ஓடிவந்து இங்கிருக்கும் பள்ளியை வந்து பாருங்கள் என்று கூறினார். அங்கு சென்று பார்த்தால் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இப்போது அகரம் சார்பாகவும், பலரும் செய்த உதவியால் இன்று சிறப்பாக இருக்கிறது. இதுபோன்று இருக்கும் இடங்களில் கேட்ட பிறகு உதவி செய்யாமல் தாமே முன்வந்து செய்ய வேண்டும். இப்படம் பெரிய வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்’’ என்றார்.