ஏவி.எம். தயாரிப்பில் பைரசிக்கு முடிவு கட்டும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணைய தொடர் அருண் விஜய் நடிப்பில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் 19-ந்தேதி வெளியாகிறது

தமிழ் சினிமாவில் பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமாக திகழும் ஏ.வி.எம். நிறுவனம், இணைய தொடர் தயாரிப்பின் மூலம் ஒடிடி தளத்தில் நுழைந்துள்ளது. அந்நிறுவனம் தயாரித்திருக்கும் முதல் இணைய தொடரான ‘தமிழ் ராக்கர்ஸ்’ சோனி லிவ் ஒடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 19-ந் தேதி வெளியாகிறது.
மொத்தம் 8 பகுதிகளை கொண்ட இந்த இணைய தொடரில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம்பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘ஈரம், குற்றம் 23’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய அறிவழகன் இத்தொடரை இயக்கியுள்ளார்.
திரைப்படத்துறையின் இன்றைய மிகப்பெரிய பிரச்சினையே பைரசி தான். திருட்டு விசிடி மூலம் ஒரு தயாரிப்பாளரின் வருமானம் கண்ணெதிரே பறி போகிறது. இத்தகைய திருட்டில் முதன்மை குற்றவாளியாக திகழும் தமிழ் ராக்கர்ஸ் என்ற தளம் தமிழ் சினிமாவே தடம் புரளும் அளவுக்கு பல திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகிறது. தயாரிப்பாளர் சங்கம் இதற்காக போராடிப் பார்த்தது. ஆள் வைத்து பிடிக்கப் பார்த்தது. ஆனால், பைரசி திருடர்களை இதுவரை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதனால் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தமிழ் ராக்கர்ஸ் என்ற தலைப்பை வைத்துக்கொண்டு பைரசியின் பின்னணியையும், அதனால் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்களின் அவல நிலையையும் விவரிக்கும் கதையே தமிழ் ராக்கர்ஸ். இணைய தொடருக்காக இதன் க கதை மற்றும் திரைக்கதையை மனோஜ் குமார் கலைவானன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாத் எழுதியுள்ளனர்.
இத்தொடர் குறித்து கூறிய ஏவி.எம் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரானஅருணா குகன் கூறுகையில், “தமிழ் ராக்கர்ஸ் ஒரு நல்ல ஆழமான கதைக்களத்தை கொண்டது. நாங்கள் மிக தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம், கலைத்துறையினர் படும் இன்னல்களை பல்வேறு கோணங்களில் இருந்து ஆழமாக காட்டி உள்ளனர். சோனி லிவ் நிறுவனத்தினை ஒளிபரப்பு பங்குதாரராக கொண்டது எங்களுக்கு மேலும் பலம் கூட்டியுள்ளது. தொலைநோக்கு சிந்தை உள்ள இயக்குனர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் எங்களுடன் இணைந்தது மேலும் ஒரு கூடுதல் பலம்” என்றார்.
இயக்குநர் அறிவழகன் கூறுகையில், “பைரசி, ஹால் காபி, டோரன்ட் டவுன்லோட் போன்ற வார்த்தைகள் என்ன தான் கேள்விப்பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் உலகிற்கு தெரியாது. தமிழ் ராக்கர்ஸ் தொடர் ஒரு சுவாரஸ்மான திரில்லர். நாயகன் அருண் விஜய் தனது ருத்ரா எனும் கதாபாத்திரம் மூலம் பைரசிக்கு முடிவு கட்டுகிறார்” என்றார்.
நடிகர் அருண் விஜய் கூறுகையில், ‘‘சமுதாயத்திற்கு தேவைப்படும் தொடராக இதனை பார்க்கிறேன். இந்த தொடர் திரை உலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும். மற்றும் எனது கதாபாத்திரமான ருத்ரா எப்படி இதனை முடிவிற்கு கொண்டு வருகின்றான் என்பதே கதை. எனவே நான் மிகவும் ஆவலுடன் இந்த தொடரை சோனி லிவ் இல் காண்பதற்கு காத்திருக்கிறேன். கலைத்துறையில் அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
