‘ஓ மை டாக்’ படத்தில் நாயிடம் கடி வாங்கினாலும் அசராமல் நடித்த ஆர்ணவ் மகன் பற்றி அப்பா அருண்விஜய் பெருமிதம்

‘ஓ மை டாக்’ படத்தில் நாயிடம் கடி வாங்கினாலும் அசராமல் நடித்த ஆர்ணவ்
மகன் பற்றி அப்பா அருண்விஜய் பெருமிதம்
நாயக்கும் ஒரு சிறுவனுக்கும் இடையிலான பாசத்தை மையமாக வைத்து உருவான ‘ஒ மை டாக்’ திரைப்படம் இ்ப்போது பிரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது. தனது கலைவாரிசான ஆர்ணவ் விஜய் நடிப்பில் வெளியான இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற வேடிக்கையான அனுபவத்தை அப்பா அருண்விஜய் இங்கே பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.
அவர் கூறுகையில், ‘‘இந்த திரைப்படம் அர்ஜுன் என்ற குழந்தைக்கும், சிம்பா என்ற நாய்க்குட்டிக்கு இடையேயான உணர்வுபூர்வமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம் பிடித்த ஆர்ணவ் விஜய் மற்றும் சிம்பா என்ற நாய்க்குட்டி என இரண்டும் திரையிலும், திரைக்குப் பின்னாலும் தங்களுக்கு இடையேயான அன்பையும், பிணைப்பையும் பகிர்ந்து கொண்டனர் ஆனால் படப்பிடிப்பின் முதல் நாளிலேயே செல்லப் பிராணியான சிம்பா தனதநகங்களால் ஆர்ணவ்வை கீறி விட்டது. ஆனால் அவர் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு படப்பிடிப்பை தொடர்ந்தார்.
அது ஆர்ணவ்வின் உலகம். சிம்பா இரண்டு மூன்று குட்டிகளுடன் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் எங்களிடம் வந்தன. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பின் போது வெவ்வேறு குட்டிகள் வருவதால், அவற்றினோடும் படப்பிடிப்பில் நடிக்க வேண்டியிருந்தது. நாய்க்குட்டிகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். அவற்றில் சில நாய்க்குட்டி ஆர்ணவ்வை கடிக்கத் தொடங்கியது. அவை சிறிய குட்டிகள் என்பதால் அவை கடிக்கின்றனவா? இல்லையா? என்பது கூட தெரியாது. சில குட்டிகள் கூர்மையான பற்களால் கடிக்கத் தொடங்கியது. ஆனால் அதனை ஆர்ணவ் சரியாக எதிர்கொண்டார். கைகளில் ஏற்படும் கீறல்களால் எந்த பிரச்சினையும் இல்லை. அது சிறிய காயம் என்று அவர் கூறினார். பிறகு அவரை கைகளை சானிடைசரை கொண்டு சுத்தப்படுத்திக் கொண்டு நடித்தார். ஏனெனில் அவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவே அவரை இயல்பான நடிப்புக்குள்ளும் கொண்டு வந்தது’’ என்கிறார்.
‘இந்த படம் ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை ஒன்றாக இணைத்திருக்கிறது. நிஜ வாழ்க்கையில் தாத்தா- தந்தை- மகன் என விஜயகுமார், அருண் விஜய் மற்றும் ஆர்ணவ் விஜய் முதல் முறையாக திரையில் தோன்றுகிறார்கள். இவர்களுடன் மகிமா நம்பியார் மற்றும் வினய் ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவான இந்த படம், கடந்த ஏப்ரல் 21ஆம் தேதியன்று பிரைம் வீடியோவில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
