ஊமைச்செந்நாய் பட விமர்சனம்

பெரிய மனிதர்களை பின் தொடர்ந்து துப்பறியும் நிறுவனத்தில் நாயகன் மைக்கேல் பணிபுரிகிறார். துப்பறியும் நிறுவனம் என்ற பெயரில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் அந்நிறுவனத்திடம் இருந்து ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் மைக்கேல் ஈடுபட, அதனை தொடர்ந்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் அதிரடி கிளைமாக்ஸ்.
நாயகன் மைக்கேல் தனது கேரக்டரில் உணர்ந்து நடித்திருக்கிறார். சைலண்டான அதேநேரம் வீரியமான அந்த கேரக்டர், நடிப்பில் மைக்கேலை தூக்கிப் பிடிக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் சனம் ஷெட்டி இயல்பான நடிப்பில் வெரைட்டி காட்டுகிறார். வந்த கொஞ்ச நேரத்திலும் நெஞ்சம் நிறைகிறார். குறிப்பாக நாயகனுடனான காதல் காட்சிகளில் காட்சிக்கு தனி அழகு வந்து விடுகிறது.
துப்பறியும் நிறுவனத்தை நடத்தும் முன்னாள் காவல்துறை அதிகாரி கேரக்டரில் கஜராஜ், காவல்துறை அதிகாரியாக அருள் சங்கர், சேதுவாக சாய் ராஜ்குமார் பொருத்தமான தேர்வில் சிறப்பு சேர்க்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமனும் இசையமைத்த சிவாவும் கிளைமாக்ஸ் வரையிலும் இயக்குனருடன் அமைத்திருப்பது வலுவான கூட்டணி.
துப்பறியும் நிறுவனத்தை கதைக்களமாக வைத்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் இழைக்கும் துரோகங்களையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் நேர்த்தியான காட்சியமைப்பில் நேர்மையாக சொன்னவிதத்தில் இயக்கிய அர்ஜுனன் ஏகலைவன் கவனம் பெறுகிறார்.
கண்டெய்னருக்குள் நடக்கும் சண்டைக்காட்சியும் சோளக்காட்டு சண்டையும் செந்நாயின் பாய்ச்சலாய் இதயம் வரை எகிறுகிறது.
