சமுத்திரக்கனி-பூஜா கண்ணன் அப்பா-மகளாக நடிக்க, ‘ஸ்டண்ட் மாஸ்டர்’

ரசிகர்கள் விரும்பும் வகையில் பலதரப்பட்ட வகைகளில் வித்தியாசமான வெற்றிப் படங்களை வழங்கி முன்னணி OTT தளமாக ஜீ5 வளர்ந்து வருகிறது. ‘லாக்கப், க.பெ.ரணசிங்கம், மதில், ஒரு பக்க கதை, மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம்’ என ஒரே நேரத்தில் விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும் வகையில் தரமான வெற்றிப் படங்களை வழங்கி ஜீ5 ரசிகர்களை மகிழ்வித்தது.
தற்போது அடுத்த வெளியீடாக சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குனர் விஜய் எழுத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் ‘சித்திரைச் செவ்வானம்’ -பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் வருகிற 3-ந்தேதி வெளியாகிறது. படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ‘சில்வா’ இயக்கி இருக்கிறார். இவர் இயக்கி இருக்கும் முதல் படம் இது.
சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஜா, சாய் பல்லவியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
சாம் C.S. இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா-கே.ஜி.வெங்கடேஷ் கேமராவை கையாள, படத் தொகுப்பு பிரவீன் KL. A.L அழகப்பன் மற்றும் P. மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ளனர். படம் வெளியாவதையொட்டி முன்னதாக படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் A.L.அழகப்பன் பேசுகையில், ஸ்டண்ட் மாஸ்டர் செல்வா இயக்குநராக வேண்டுமென்கிற ஆசையை, பல வருடங்களாக மனதில் வைத்து, சரியான படத்திற்கு காத்திருந்து, இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தம்பி விஜய் இப்படத்திற்கு கதை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் புகழ் கிடைக்க வேண்டும். சினிமாவில் மற்ற துறைகளில் இருந்து நிறைய பேர் இயக்குநர் ஆகியுள்ளார்கள் ஆனால் ஸ்டண்ட் துறையிலிருந்து யாரும் அதிகமாக ஆனதில்லை, அதில் மாஸ்டர் சில்வா மிகப்பெரிய புகழ் பெற வேண்டும். என்னை நடிகனாக்கிய படத்தில் சமுத்திரக்கனி பணி புரிந்திருக்கிறார். என் மேல் மற்றவர்களை விட நிறைய நம்பிக்கை வைத்தார். சமுத்திரக்கனி இன்றைய சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருவது மகிழ்ச்சி’’ என்றார்.
ஷுஜு பிரபாகரன், Cluster Head ZEE Network பேசியதாவது..,
‘விநோதய சித்தம் படத்திற்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இயக்குநர் விஜய் மிகச் சிறந்த படைப்புகளை தரக்கூடியவர். அவருடன் ‘சித்திரைச் செவ்வானம்’ படத்தின் மூலமாக இணைந்ததில் மகிழ்ச்சி. விஜய் உடன் இணைந்து இன்னும் நிறைய படங்கள் உருவாக்கி வருகிறோம் அடுத்தடுத்து அவை வெளியாகும். எங்கள் நிறுவனத்தின் மூலம் நல்ல கதைகளை தொடர்ந்து ரசிகர்களுக்கு தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த படம் உங்கள் அனைவரையும் கவரும்’’ என்றார்..
கௌசிக் நரசிம்மன், VP Content, ZEE5 Tamil பேசியதாவது…
ரசிகர்களுக்கு தொடர்ந்து ஜீ5 லிருந்து நல்ல நல்ல படைப்புகள் நிறைய வரவுள்ளது. இப்படத்தில் ஒரு அப்பாவாக அனைவரும் உணரும்படி நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி, சில்வா மாஸ்டர் படத்தை அற்புதமாக இயக்கியிருக்கிறார். இயக்குநர் விஜய் உடன் இணைந்து ஒரு வெப் சீரிஸ் செய்து வருகிறோம் அது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும்’’என்றார்.
இசையமைப்பாளர் சாம் CS பேசுகையில், ‘‘சில்வா மாஸ்டர் படம் என்றவுடனே, இது ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதேநேரம் இயக்குநர் விஜய் கதை என்றதும் என்ன செய்யப் போகிறார்கள் என்று தோன்றியது. இந்த படத்தில் உணர்வுபூர்வமான அப்பா-மகள் கதை தான் இருந்தது. எல்லா ஆக்ஷன் மாஸ்டரிடமும் எமோஷனல் பக்கம் தான் அதிகம் இருக்கிறது. கல்லுக்குள் ஈரம் போல் அவர்களுக்குள் ஒரு ஈரமான பக்கம் இருக்கிறது. இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும். சில்வா மாஸ்டர் அட்டகாசமாக இயக்கியிருக்கிறார். சமுத்திரகனி ஒரு அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். பூஜா மகளாக அற்புதமாக நடித்திருக்கிறார். இந்தப் படம் உணர்வுப்பூர்வமாக உங்களை கவரும்’’ என்றார்.
இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசுகையில், ‘‘மாஸ்டர் சில்வா, 1996-ல் நண்பரிடம் கடன் வாங்கி 100 ரூபாய் பணத்துடன் சென்னை வந்தவர். அவர் இன்று இவ்வளவு சாதனைகள் படைத்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த படத்தில் காமெடி அரசியல்வாதி பாத்திரத்தை செய்துள்ளேன். இது சில்வா மாஸ்டர் செய்ய வேண்டிய பாத்திரம், ஆனால் என்னிடம் தந்து விட்டார். சமீபத்தில் தனுஷ் தனது படத்தில் ஒரு பாத்திரத்தை நான் தான் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார், ஆனால் கடைசியில் அதை சில்வா மாஸ்டர் செய்கிறார் என்றார், எனக்கு வர வேண்டியது அவருக்கும், அவருக்கு வர வேண்டியது எனக்கும் வந்து சேர்கிறது. சில்வா தனது ஞானத்தின் கதையை இப்படத்தில் சொல்லியிருக்கிறான். நாம் தாய் வழி சமூகம், நம் மொழியில் தந்தையின் கதையே இல்லை அதை சில்வா உடைத்து செய்திருக்கிறான். அவன் வெற்றி பெற வேண்டும். சமுத்திரகனி அண்ணனை பற்றி சொல்லவே தேவையே இல்லை, எந்த கதாப்பாத்திரம் செய்தாலும் சிங்கிள் டேக்கில் செய்யும் திறமை கொண்டவர். அவர் இன்னும் வளர வேண்டும். சாம் CS இசை நன்றாக இருக்கிறது. ஒரு பணக்காரனாக இருந்து நல்லவனாக ஒழுக்கமானவனாக வளர்வது அரிது. ஆனால் அனைத்தும் கிடைத்தும் ஒழுக்கமானவனாக வளர்ந்துள்ளார் இயக்குநர் விஜய். அவர் தான் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்’’ என்றார்.
படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நடிகை ரீமா கலிங்கல் பேசுகையில், ‘‘விஜய் சார் போன் செய்து, ‘சில்வா மாஸ்டர் இயக்குகிறார். இந்தபடத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டபோது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்று தான் முதலில் நினைத்தேன். திரைக்கதையை படித்தபின் ஆச்சர்யமாக இருந்தது. சில்வா சார் இப்படி ஒரு படம் செய்கிறார் என நம்ப முடியவில்லை. அவருடன் இணைந்து பணிபுரிந்த பின் தான் அவர் எத்தனை குழந்தை மனம் கொண்டவர் என்று தெரிந்தது. சமுத்திரக்கனி சாருடன் முன்பே படம் செய்ய வேண்டியது, இப்போது அவரை பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. இரண்டு பக்க டயலாக் இருந்தாலும் நொடியில் முடித்து விடுகிறார், அவருடன் நடித்தது மகிழ்ச்சி. பூஜா அட்டகாசமாக நடித்திருக்கிறார், படத்தில் அனைவருமே ஒரு குடும்பமாக பெரும் ஆதரவு தந்தார்கள். இப்படத்தில் போலீஸ் பாத்திரம் மிக சவாலாக இருந்தது. அதற்காக நிறைய பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது’‘ என்றார்.
படத்தின் நாயகி பூஜா கண்ணன் பேசுகையில், ‘‘முதல் முறை மேடையில் பேசுகிறேன். விஜய் சார், சில்வா மாஸ்டர் இருவருக்கும் நன்றி. அக்காவுடன் (நடிகை சாய் பல்லவி) ஷூட்டிங் போயிருக்கிறேன், ஆனால் முதல் முறை, கேமரா முன் நிற்கும் போது தயக்கம் இருந்தது. அதை உடைத்து அனைத்தையும் சொல்லி தந்தார் சில்வா மாஸ்டர். சமுத்திரக்கனி சாருடன் வேலை செய்ய பயமாக இருந்தது, ஆனால் அறிமுகமான உடனே “எப்படிம்மா இருக்க’ எனக்கேட்டு என்னை இயல்பாக்கி, ஒரு மகளாகவே பார்த்துக் கொண்டார் அவருக்கு நன்றி. இந்தப்படம் மிகச்சிறந்த அனுபவம். ஒரு உணர்வுபூர்வமான படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்’’ என்றார்.
இயக்குனர் விஜய் பேசுகையில், ‘‘இந்த நாள் எங்கள் எல்லோருக்கும் முக்கியமான நாள். ஒரு நல்ல கதையை மக்களிடம் கொண்டு சேர்க்க துணை நிற்கும் ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி. அவர்கள் நல்ல கதைகள் மட்டும் தான் செய்கிறார்கள். சாம் CS இடம் எனக்கு பிடித்தது, சின்ன படம் பெரிய படம் என இல்லாமல், எல்லா படத்திற்கும் ஒரே உழைப்பு தான். அவருக்கு நன்றி. ரீமா அவர்கள் இப்படத்தை ஒப்புக்கொண்டு, மிக அழகாக செய்து தந்ததற்கு நன்றி. அவர் கதாபாத்திரமாகவே மாறி விட்டார். பூஜாவை ‘கரு’ பட காலத்திலிருந்தே தெரியும். இந்தப்படம் செய்யும் போது, சில்வா மாஸ்டரிடம் நான் தான் இந்தப்படத்திற்கு பூஜா சரியாக இருப்பார் என்று சொன்னேன். அவர் தனக்கு வந்த நிறைய வாய்ப்புகளை தவிர்த்து வந்தார். ஆனால் இந்தக் கதை கேட்ட பிறகு, இப்படத்தை ஒப்புக்கொண்டார். நடிப்புக்காக பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார். அவர் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார். சமுத்திரக்கனி சார் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். அவருடன் தலைவி படத்தில் வேலை செய்த போது, அவர் நடிப்பை பார்த்து பிரமித்திருக்கிறேன். இப்படத்தில் காலில் செருப்பு போட்டுக் கொள்ளாமல் நடித்தார். சில்வா மாஸ்டர் தலைவா படம் மூலம் தான் அறிமுகம். அதன் பிறகு என் எல்லா படத்திற்கும் அவர் தான் ஆக்ஷன் மாஸ்டர். அவர் ஒரு ஆக்ஷன் காட்சியை சாதாரணமாக செய்ய மாட்டார். கதையோடு எப்படி வருகிறது கதைக்கு என்ன தேவை என்று பார்த்து பார்த்து செய்வார். 2015-ல் நான் எழுதி வைத்த கதையை படமாக்க வேண்டுமென நினைத்த போது சில்வா மாஸ்டர் தான் ஞாபகத்திற்கு வந்தார். அவருக்குள் இயக்குனர் இருக்கிறார் என தெரியும். சின்ன எமோஷனல் காட்சிக்கும் அழுது விடுவார். மாஸ்டரை விட சிறப்பாக இப்படத்தை யாரும் செய்து விட முடியாது. அவர் இயக்குநராக இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்’’ என்றார்.
படத்தின் நாயகன் நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், ‘‘இந்த படத்தில் வேலை செய்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜீ5 நல்ல கதைகள் மட்டும் தேடித் தேடி செய்கிறார்கள் அவர்களுக்கு நன்றி. என் தம்பி சில்வாவும் நானும் எதிரெதிர் வீட்டில் தான் இருந்தோம். அவனை பல வருடங்களாக தெரியும். ‘அப்பா’ படத்திற்கு, ‘அப்பா பற்றி பேசுங்கள்’ என்று நிறைய பேரிடம் கேட்டிருந்தேன் அவன் பேசியதை கேட்டு அதிர்ந்து விட்டேன். அவன் அப்பா தவறி விட்ட ஏக்கத்தை, பேசியிருந்தான். இப்படத்தில் அந்த குழந்தை கை தூக்கி தன் அப்பா விரலை பிடிக்கும். அதில் நான் அப்பாவாக இருந்தேன் அவன் மகனாக இருந்தான். அவ்வளவு தான், எங்களுக்குள்ளான உறவு. இந்தக்கதை என்னை உலுக்கியது, இந்தப்படம் இந்த சமூகத்தை கேள்வி கேட்கும். இந்த படத்தில் விஜய் இருக்கிறார் என்பதே எனக்கு தெரியாது. அவன் ஒரு நல்ல ஆத்மா. பூஜா சில காட்சிகளில் நம்மையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார். அவர் இன்னும் பெரிய தளத்திற்கு செல்வார். ரீமாவை இப்போது பார்த்தாலும் பயமாக இருக்கும். கண்ணிலேயே பேசுவார். இதில் நடித்த குட்டீஸ் எல்லாம் சூப்பராக செய்திருக்கிறார்கள். சில்வாவின் மகனும் இப்படத்தில் நடித்திருக்கிறார்’’ என்றார்.
இயக்குனர் சில்வா மாஸ்டர் பேசுகையில் ‘‘என் சின்ன வயதிலிருந்தே, என்னை இங்கிருப்பவர்கள் தான் என் கை பிடித்து அழைத்து சென்றிருக்கிறார்கள். நான் இயக்குனர் ஆக வேண்டும் என்பதில் என்னை விட வெறியாக இருந்தவர் விஜய் தான். தெரியாத ஆட்களுக்கே உதவி செய்யும் நல்ல மனம் கொண்டவர். தலைவா படத்திலிருந்தே எனக்குள் இயக்குநர் இருக்கிறார் என்று ஊக்கம் தந்து, என்னை இயக்குநர் ஆக்கும் வரை உடன் நின்றவர் விஜய் தான். படம் பார்த்து கண் கலங்கி, என்னால் கூட இப்படி செய்திருக்க முடியாது என பாராட்டினார் அவருக்கு நன்றி. இந்தப்படத்தை பார்த்து நல்ல கதையென்று ஆதரவு தந்த ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி. இந்தப்படத்தில் அண்ணனாக, அப்பாவாக உடன் நின்று தன் சொந்தப்படம் போல் செய்து தந்தார் சமுத்திரக்கனி அண்ணன். அவரால் தான் இந்தப்படம் முழுமையாக வந்துள்ளது. பூஜாவை விஜய் சார் தான், பார்க்க சொன்னார். அவரைப் பார்த்தவுடன் கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது. கடகடவென்று பேசிக்கொண்டே இருப்பார். கலைவாணி மேடத்திடம் பயிற்சி எடுத்து கொண்டு வந்து நடித்தார். ரீமா கலிங்கல் திரைக்கதை கேட்டார். ஒவ்வொரு காட்சிக்கும், முன்னதாகவே தயாராகி வந்தார். திரைக்கதையில் சின்ன மாற்றம் செய்தாலும் கேட்பார் அப்போது தான் அவரே சொந்த தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறார் என தெரியும், மிக மிக நன்றாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் நடிப்பால் சில காட்சிகளில் அழ வைத்து விட்டார்கள். 8 வயது பெண் மானசிக்கு கிளிசரின் போடாமலே அழுகை வருகிறது. சொல்லும் நேரத்தில் சிரிக்கிறாள். அவள் மிகப்பெரிய உயரத்தை தொடுவாள். தமிழில் பேசி, பாட்டெழுதி இசையமைக்கும் திறமை சாம் CS யிடம் இருக்கிறது. அவரது இசை அட்டகாசமாக வந்திருக்கிறது. என்னுடன் இணைந்து இப்படத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி’’ என்றார்.
