செய்திகள்திரை விமர்சனம்

நூறு சாமி விமர்சனம்.. – அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்[4.5/5]

கதை…

2019 ஆம் ஆண்டில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சசி..

நாயகி ஸ்வாசிகா.. கணவரை இளம் வயதிலேயே இழந்த இவருக்கு இரு மகன்கள்.. மூத்தவன் அஜய் திஷான்.. இரண்டாவது மகன் சக்தி..

மறுமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு ஆசிரியர் அருள்தாஸ் மூலமாக தன் மகனிடம் விருப்பத்தை கேட்கிறார் அம்மா ஸ்வாசிகா.. இளவயது மகன்கள் மறுக்கிறார்கள்… ஒரு கட்டத்தில் அவர்களுக்கு திருமண வயது எட்டிய போது அம்மாவின் மறுமணம் பற்றி யோசிக்கின்றனர்.. ஆனால் இப்போது அம்மா மறுக்கிறார்..

நீங்கள் மறுமணம் செய்ய வில்லை என்றால் நாங்களும் செய்து கொள்ள மாட்டோம் என்றும் மகன்கள் மறுக்கின்றனர்..

அதன் பிறகு நடந்தது என்ன.? அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா மகன்கள்.? எப்படி நடந்தது என்பதெல்லாம் சுவாரசியமான உணர்வுபூர்வமான திரைக்கதை..

 

நடிகர்கள்…

ஸ்வாசிகா – அம்மா கேரக்டருக்கு அப்படியே பொருத்தமாக இருக்கிறார் செல்வி என்ற இந்த சுவாசிகா.. மருதாணி போட ஆசை.. பூ போட்டு வைக்க ஆசை.. ஆனால் அனைத்தையும் துறந்த விதவை கேரக்டரில் செல்வியாக செதுக்கியிருக்கிறார்..

கணவன் இல்லாத பெண் படும் அவஸ்தைகளை கண்களிலே காட்டிருக்கிறார்.. மறுமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு வீட்டில் கேட்கும்போது அதற்கு அம்மா & அண்ணா மறுக்கும் போதும் அவர் பேசும் வசனங்கள் அனல்..

மூத்த மகனாக அஜய் திஷான்.. விதவைகள் மறுமணம் செய்ய ஆசைப்பட்டால் பத்தாது ஒரு சின்ன துரும்பையாவது கிள்ளி எறிய வேண்டும். அதற்கு நீ முன் வர வேண்டும் என்று அஜய் அம்மாவிடம் சொல்லும் போது ஒரு மகனின் பாசத்தையும் ஒரு இளைஞனின் எழுச்சியை காண முடிகிறது..

அஜய் தம்பியாக நடித்த சக்தியும் ஜொலிக்கிறார்.. அம்மாவின் செல்ல பிள்ளையாக செல்வி என்று அம்மாவை பெயர் சொல்லி கொஞ்சி விளையாடுகிறார்..

பழமைவாதி பாலாஜி சக்திவேல்.. முறுக்கு மீசையில் முரட்டு வில்லத்தனம் காட்டி இருக்கிறார்..

அப்பாவி அண்ணனாக வந்து கடைசியில் வில்லத்தனத்தில் கலக்கி இருக்கிறார் கருணாஸ்..

கன்னியாஸ்திரி ஆக லிஜோ மோல்.. கேரக்டர் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. அழகான சிறந்த நடிகை கேரக்டர் ஸ்பேஸ் இல்லை..

காவியா அனில், பகவதி பெருமாள், வினோதினி, பாடினி குமார் ஜென்சன் திவாகர், தாமரைச்செல்வி ஆகியோர் தங்கள் பங்களிப்பில் ரசிகர்களின் கவனம் ஈர்க்கின்றனர்..

தொழில்நுட்ப கலைஞர்கள் …

தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீ ராம்.. தங்கள் பணியின் மூலம் படத்திற்கு ஒரு உணர்வுபூர்வமான உயிரோட்டத்தை கொடுத்துள்ளனர்..

கள்ளக்குறிச்சி அழகை கவித்துவமாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..

பிச்சைக்காரன் படத்தின் மூலம் மனதை வென்ற கூட்டணி நடிகர் விஜய் ஆண்டனி இயக்குனர் சசி.. இதில் மீண்டும் வெற்றி கொடி நாட்டி உள்ளனர்.. படம் முடியும் கொஞ்ச நேரத்தில்தான் விஜய் ஆண்டனி வருகிறார்.. வெள்ளந்தியான நடிப்பின் மூலம் நம் மனங்களை கவர்ந்து விடுகிறார்..

கணவனை மனைவி கொன்றால் கூட பத்து வருஷம் தான் ஜெயில்… ஆனால் கணவர் இறந்ததற்கு ஆயுள் முழுக்க மனைவிக்கு தண்டனை வேண்டுமா என்ற வசனங்கள் மூலம் இளம் விதவைகளின் கண்ணீரை பிரதிபலிக்கிறார் சுவாசிக்கா..

இரு மகன்களைப் பெற்ற உனக்கு 42 வயதில் ஆசை அடங்கலயா என்று அம்மா கேட்கும் போது.. என் பிள்ளைகளை வளர்க்க நீ துணைக்கு வா என்ற போது நீ வர மறுத்தாய்… உனக்கு 60 வயதில் துணைக்கு கணவன் இருக்கும் போது.. என்ற வசனம் முடிவதற்குள்.. செல்வி கேரக்டருக்கு தியேட்டர்கள் அதிர்கிறது…

Nooru Sami movie review