சினிமா செய்திகள்

செல்வராகவன் நடிக்கும் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ படத்தின் இசை வெளியீடு

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையை வழி நடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.‌

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மனிதனும் தெய்வமாகலாம்’ படத்தில் செல்வராகவன், குஷி ரவி, கௌசல்யா, மைம் கோபி, வை. ஜி. மகேந்திரா, லிர்த்திகா, சேலம் தீபக், இலா பரத், சுதா, ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ரவிவர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ கே பிரியன் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வயோம் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயா சதீஷ் மற்றும் ஆர் எஸ் சதீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.‌

எதிர்வரும் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பட குழுவினருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” எல்லா கதையிலும் ஒரு ஹீரோ – ஒரு வில்லன் இருப்பார். ஒரு பகல் ஒரு இரவு- ஒரு நிழல் ஒரு நிஜம் – ஒரு இன்பம் ஒரு துயரம் – இப்படித்தான் இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு கதையில் இவை எல்லாம் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும். இந்தக் கதையில் ரொம்ப நல்லவன்- ரொம்ப கெட்டவன் என இருவர் இருக்கிறார்கள். இதில் நல்லவனாக செல்வ ராகவனும் கெட்டவனாக மைம் கோபியும் நடித்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்” என்றார்.

இயக்குநர் நடிகர் செல்வராகவன் பேசுகையில், ”’ எம்முடைய இளமை காலத்தில் கௌசல்யாவை திரையில் பார்த்தவுடன் அவர்களை பார்த்து ஜொள்ளு விட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் படப்பிடிப்பில் பங்கு பற்றிய போது மிக அமைதியாக இருந்தார்கள். நான் அவர்களை பார்த்து வியந்து ரசித்தேன். ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாக படத்தின் நாயகியான குஷி ரவி இருப்பார் . அவர் படப்பிடிப்பு தளத்தில் எங்கு இருந்தாலும் ஏதேனும் குட்டி கலாட்டாகளல செய்து கொண்டே இருப்பார். ஜாலியானவர். உற்சாகத்துடன் வலம் வருவார். இது அவருக்கு கடவுள் கொடுத்த வரம். எப்போதும் அவர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். அதிலும் அவர் தமிழில் பேசினால் …எம்முடைய கஷ்டங்கள் எல்லாம் மறந்து விடும். ” என்றார்.