சினிமா செய்திகள்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படம்!

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதை வணிக ரீதியாகவும் வெற்றி படங்களாக தயாரித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அடுத்து நம்பிக்கைக்குரிய ஒரு படத்துடன் வந்திருக்கிறார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் ராகுல் அறிவித்துள்ளார்.

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்கிறது. உண்மையான அன்பு, உறவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் ‘என் அன்பே’ என்பதாகும்.

‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ போன்ற படங்களில் சமூக அக்கறையுள்ள கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மீரா கதிரவன் ‘ஹபீபி’ படத்தில் மீண்டும் அழுத்தமான கதைக்களத்தோடு வருகிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான இந்த கதைக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ வெறும் திரைப்படமாக மட்டுமல்லாது, நான் வாழ்ந்த நெருக்கமாக பார்த்த உலகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். நன்றி, உண்மை மற்றும் அன்பின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. தவறான புரிதல்கள் அதிகரிக்கும் இந்த காலத்தில் மனிதத்தன்மை மற்றும் பாசம் நிறைந்த வாழ்க்கையை அதன் இயல்பிலேயே பதிவு செய்ய விரும்பினேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தில் ஆர்வம் காட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் உள்ளே வந்ததும் நாங்கள் கற்பனை செய்ததைவிட படம் பெரிய அளவில் வளர்ந்தது” என்றார்.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கூறுகையில், “மக்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டும் சக்தி சினிமாவுக்கு உண்டு. அர்த்தமுள்ள கதையை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் சின்சியராக எடுக்கப்பட்ட படம்தான் ‘ஹபீபி’. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் இந்த முக்கியமான படைப்பை கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும். ‘ஹபீபி’ அப்படியான ஒரு திரைப்படம். நிச்சயம் பார்வையாளர்களும் அதை உணர்வார்கள். படத்திற்கான வலுவான மார்க்கெட்டிங் திட்டங்கள் வைத்துள்ளோம். படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

இப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ’வல்லோனே’ பாடல் மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் ஈ.எம். ஹனிபா அவர்களின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பாடவைத்தது பாராட்டை பெற்றது.