Latest:
சினி நிகழ்வுகள்

சமத்துவ இப்தார் விருந்து நிகழ்ச்சியில் இந்த ஆண்டிற்கான ரெயின்ட்ராப்ஸ் ‘சாதனைப் பெண்கள்’ விருதுகள் அறிமுகம் !!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், தூய்மைப் பணியாளர் பத்மா வெளியிட்டனர். ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு நடத்திய சமத்துவ இப்தார் நிகழ்ச்சியில் 13-ஆம் ஆண்டு சாதனைப் பெண்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.   இசையமைப்பாளரும் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் தூதருமான ஏ.ஆர்.ரெஹானா, பிரபல தூய்மைப் பணியாளர் பத்மா மற்றும் சிறப்பு விருந்தினர்கள்  இணைந்து இந்த ஆண்டிற்கான  சாதனைப் பெண்கள் விருதினை அறிமுகம் செய்தனர். ரெயின்ட்ராப்ஸ் நிறுவனர் அரவிந்த் ஜெயபால் விருதுகளைப் பெறும் சாதனைப் பெண்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார்.  ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் சமத்துவ இப்தார் விருந்து நிகழ்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இப்தார் விருந்து நிகழ்வு தி.நகரில் உள்ள கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, வி.ஜி.பி. குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ரெயின்ட்ராப்ஸ் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால்,  விளக்குக்கடை ராஜலக்ஷ்மி சிவசங்கரன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சமீபத்தில் 45 பவுன் தங்க நகையை உரிமையாளர்களிடம் சேர்த்து நேர்மையின் சிகரமாக சமூகத்தினரின் பாராட்டைப் பெற்ற தூய்மைப் பணியாளர் பத்மா இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவருக்கு ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் சார்பில் பட்டு புடவை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியின் போது ரெயின்ட்ராப்ஸ் 13வது ஆண்டு சாதனைப் பெண்கள் நிகழ்ச்சிக்கான விருது மற்றும் விருதாளர்கள் பட்டியல் குறித்து அறிமுகம் செய்யப்பட்டது.சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ரெயின்ட்ராப்ஸ்  சாதனைப் பெண்கள் விருது விழா மார்ச் 8-ந்தேதி மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கில் நடைபெறுகிறது. பிரித்வி இன்னர் வேர்ஸ், ஆர்.எல்.ஹேண்டிகிராப்ட்ஸ் விளக்குக் கடை மற்றும் பார்வதி மருத்துவமனையுடன் இணைந்து ரெயின்ட்ராப்ஸ் இந்த விழாவை நடத்துகிறது. இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகியுமான ஏ.ஆர்.ரெஹானா இந்த விழாவிற்கு தலைமை வகிக்கிறார். ரெயின்ட்ராப்ஸ் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலை வகிக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் சார்பில் சாதனைப் பெண்கள் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ‘ரெயின்ட்ராப்ஸ்’ வாழ்நாள் சாதனையாளர் விருது, இந்தியாவிலேயே அதிகளவில் மாற்றுத் திறனாளிகளை தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தியதுடன்,  கடந்த 25 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு மையம் அமைத்து, அரசு பள்ளிகளை தத்தெடுத்து பல்வேறு சேவைகள் செய்து வரும் சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர் சாந்தி துரைசாமிக்கும், கடந்த 50 ஆண்டுகளாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி சுஜாதா ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகிறது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவில் இந்தியாவின் புள்ளியியல் நிறுவனத்தின் முதல் பெண் இயக்குனரும், கணினி விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ சங்கமித்ரா பந்தோபாத்யாய் சிறந்த ஆளுமைக்கான விருது பெறுகிறார். பாரா ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்ததுடன், அர்ஜூனா விருது வென்ற வீராங்கனையான துளசிமதி  முருகேசனுக்கு யூத் ஐகான் விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் பெண் குதிரை ஜாக்கியாக உலக மேடைகளில் 700-க்கும் மேற்பட்ட  பதக்கங்கள் வென்ற ரூபா சிங் வீரத்திற்கான விருது பெறுகிறார். 800-க்கும் மேற்பட்ட மாணவர்களை பரத நாட்டியக் கலைஞர்களாக உருவாக்கி, பரதம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற தலைசிறந்த பரதநாட்டிய கலைஞர் சந்தியா சங்கர் கலைத்துறை சாதனைக்கான விருது பெறுகிறார். தமிழ்நாட்டை உலகளவில் தலை நிமிரச் செய்த உலக கேரம் சாம்பியன் காசிமா பாஷாவுக்கு இளம் சாதனையாளர் விருதும், இந்தியாவின் முதல் திருநங்கை பேராசிரியர் என்.ஜென்சிக்கு நம்பிக்கை விருதும் வழங்கப்படுகிறது. 82 வயதில் 50 கிலோ எடை தூக்கி சாதனை படைத்து இந்தியாவின் மிக வயதான பளுதூக்கும் வீராங்கனை கிட்டம்மாள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை காப்பாற்றி, மனிதர்கள் மற்றும் வன உயிர்கள் இடையே பாதுகாப்புக்கான பாலமாக விளங்கும் வேதப்பிரியா கணேசன், தென்னிந்தியாவின் முதல் ஆம்னி பஸ் டிரைவர் கனிமொழி, இயற்கை விவசாயி தனலட்சுமி, கண்ணகி நகர் அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த உமா மகேஸ்வரி, தென்னிந்தியாவின் முதல் கடல் சார் வலைப்பதிவர் எனும் சாதனைப் படைத்த மீனவப் பெண் சுபிக்ஷா குமார் ஆகியோருக்கு சிறப்பு அங்கீகாரத்திற்கான சாதனைப் பெண்கள் விருது வழங்கப்படுகிறது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.     புகைப்படம்: இசையமைப்பாளரும் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் தூதருமான ஏ.ஆர்.ரெஹானா, பிரபல தூய்மைப் பணியாளர் பத்மா, தொழில் அதிபர் விஜி சந்தோசம், மாநில திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து இந்த ஆண்டிற்கான  சாதனைப் பெண்கள் விருதினை அறிமுகம் செய்தனர். ரெயின்ட்ராப்ஸ் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் விருதுகளைப் பெறும் சாதனைப் பெண்களின் பெயர் பட்டியலை வெளியிட்டார்.