சினி நிகழ்வுகள்

புதுஅனுபவம் விரும்பும் ரசிகர்களுக்கான படம் ‘அடியே’

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘அடியே’. இதில் நாயகியாக ‘96’ புகழ் கெளரி கிஷன் நடிக்க, இவர்களுடன் மதும்கேஷ் பிரேம், ஆர்.ஜே.விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை.

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் இப்படம் வரும் 25-ந் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதைத் தொடர்ந்து படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், “இந்த திரைப்படம் வழக்கமான திரைப்படம் அல்ல. வித்தியாசமான படைப்பு. புது அனுபவம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த படத்தை தாராளமாக திரையரங்கிற்கு சென்று கண்டு ரசிக்கலாம்.
தயாரிப்பாளர் பிரேம்குமாருக்கு நன்றி. படத்தை தெளிவாக திட்டமிட்டு நிறைவு செய்திருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் வலிமையான பட தயாரிப்பு நிறுவனமாக உயர்வார்கள். படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் விரைவில் முன்னணி இயக்குநராக உயர்வார்” என்றார்.
நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில், ‘‘என் வாழ்க்கையில் எல்லாமே எதிர்பாராமல் தான் நடந்திருக்கிறது. ‘96’ படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை போல்.. இந்த திரைப்படத்திலும் ஒரே ஒரு போன் கால் மூலம் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். பொதுவாக கதைகளை கேட்டு பொறுமையாக தான் தேர்வு செய்து நடிப்பேன். ஆனால் அடியே படத்தின் கதையை முழுமையாக கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். அதற்கு மற்றொரு காரணம் ஜீ.வி.பிரகாஷ். அவருடைய இசைக்கு நான் ரசிகை. அவருடன் இணைந்து நடித்தது மறக்க இயலாத வித்தியாசமான அனுபவம். இந்த படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயரில் பாடல் ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் என்னுடைய திரையுலக பயணத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்’’ என்றார்.
படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், இந்தப் படத்திற்கு முதலில் வேறு ஒரு நாயகியை தான் ஒப்பந்தம் செய்திருந்தோம். படப்பிடிப்பிற்கு பத்து நாள் முன்னதாக இந்த நாயகிக்கு பதிலாக வேறு ஒரு நாயகியை தேர்வு செய்யலாம் என நான் தான் தயாரிப்பாளரிடம் சொன்னேன். தயாரிப்பாளர் எதுவும் பேசாமல் உங்களின் முடிவு எதுவோ அதை செய்யுங்கள் என்றார்.
இந்த கதைக்கு பொருத்தமான ஒரு நடிகையாக கௌரி கிஷன் சரியாக இருப்பார் என்று தோன்ற, அவரை போனில் தொடர்பு கொண்டு படத்தின் முதல் பாதி கதையை சொன்னேன். சொல்லும் போதே என் கதையை கேட்டு நடிக்க சம்மதிக்க வேண்டும் என்று மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டேன். இரண்டாம் பாதியை அவரது வீட்டிற்கு சென்று சொன்னேன். கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஜி.வி.பிரகாஷ் எப்போதுமே சந்தோஷமாக இருப்பவர். அவரை பார்த்தவுடன் அவருடன் நட்பு கொள்ள வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அவரிடமும் ஒரு நகைச்சுவை உணர்வு பொதிந்திருக்கிறது. அவர் மனதில் பட்டதை உடனே தெரிவித்து விடுவார். நன்றாக இருப்பதை நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவார். நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை என்று சொல்லி விடுவார்.
‘அடியே’ அடிப்படையில் ஒரு அழகான காதல் கதை. குறும்பும், வேடிக்கைகளும் நிறைந்த கதை. ஒரு வித்தியாசமான திரைப்படம். நம்பிக்கையுடன் கடினமாக உழைத்திருக்கிறோம். ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் பிரேம்குமார் பேசுகையில், ”எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படமான ‘அடியே’ திரைப்படம் மிகப்பெரியளவில் வெற்றியடையும். ஏனெனில் வித்தியாசமான திரைப்படமாக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தலைமையிலான குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் நடித்த அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். குறிப்பாக ஜி.வி.பிரகாஷின் ஒத்துழைப்பு மறக்க இயலாது. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கினர். தொடர்ந்து நல்ல படங்களை வழங்கி தமிழ் திரையுலகில் தரமான தயாரிப்பு நிறுவனமாக எங்கள் நிறுவனம் வளரும். இதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.