சான்றிதழ் திரை விமர்சனம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருவறை கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி சட்டங்களை வகுத்துக் கொண்டு கட்டுக் கோப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். கருவறை கிராமத்தின் இத்தகைய சிறப்பை அறிந்து மத்திய அரசு சிறந்த கிராமத்திற்கான விருதை அறிவிக்க, அதை அந்த கிராம மக்கள் வாங்க மறுக்கிறார்கள். இதனால், கோபமடையும் அமைச்சர் கருவறை கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
கிராம மக்கள் விருதை ஏற்க மறுப்பதற்கான காரணம் என்ன? தறுதலை கிராமத்தை கருவறை கிராமமாக மாற்றியதற்கு பின்னணியில் வெள்ளைச்சாமி என்பவரின் மிகப்பெரிய தியாகத்தையும், அவர் தனது கனவு கிராமத்தை உருவாக்க இழந்ததையும், நெஞ்சம் நெக்குருக சொல்வது தான் இந்த ‘சான்றிதழ்.’
கருவறை கிராமத்தின் கட்டுப்பாடுகளும், சட்ட திட்டங்களும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ண வைக்கிறது.
ஊருக்கே மாற்றம் தந்த வெள்ளச்சாமி கேரக்டரில் ஹரிகுமார் அட்டகாசம். கிராம மக்களின் அவல நிலையை கண்டு கலங்கும் காட்சிகளில் கலங்க வைக்கிற நடிப்பு இவருக்கான சிறப்பு.
கருவறை கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ரோஷன் பஷீர்-நிருபராக வரும் ஆஷிகா அசோகன் ஆகியோரது காதல் ஈர்க்கிறது.
அமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் ராதாரவி, அருள்தாஸ், நடிகை கெளசல்யா ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பு மூலம் கேரக்டர்களில் நின்று நிலைக்கிறார்கள்.
வில்லத்தனமாகவும், நல்லத்தனமாகவும் நடிப்பில் கவனம் ஈர்க்கிற இன்னொருவர் ரவி மரியா. மனோபாலா, ஆதித்யா கதிர் சிரிக்க வைக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.எஸ்.ரவிமாறன் சிவன், முழு கிராமத்தையும் அழகியலோடு படமாக்கி கதைக்குள்நம்மை கொண்டுபோய் விடுகிறது.
இசையமைப்பாளர் பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்கள் ரசனை.
கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கிராமத்தையே கதை நாயகனாக்கி புதிய கோணத்தில் கதை சொன்ன இயக்குநர் ஜெயச்சந்திரன் தமிழ் சினிமாவில் புிய தடம் பதித்திருக்கிறார்.
மாலை 6 மணிக்கு மேல் யாரும் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கக் கூடாது என்ற கட்டுப்பாடு, அதை மீறும் இளம்பெண் தொடர்பான காட்சிகள் ரசனை பிளஸ் ரகளை.
ஒவ்வொரு மனிதனுக்கும் தனி மனித ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியம். அப்படி இருந்தால் ஒட்டு மொத்த ஊரே கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் இருக்கும் என்ற நல்ல கருத்தை காட்சிப்படுத்தியதற்காகவே இந்த ’சான்றிதழுக்கு தரலாம், சமூக விழிப்புணர்வுக்கான ‘நற்சான்றிதழ்.’
