ஊர்வசிக்காக தனது கேரக்டரை விட்டுக்கொடுத்த நாயகன்

அறிமுக இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’. இதில் ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், சுஜித் சங்கர், அபிஜா சிவகலா, மணிகண்டன் ஆச்சாரி, பானு, மிருதுளா மாதவ், சுதீர் பரவூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஸ்வரூப் பிலிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே.வி.சுப்பிரமணியன் மற்றும் அசோக் பொன்னப்பன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் டாக்டர் அஜித் ஜாய் தயாரித்திருக்கிறார்.
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படம், தற்போது தமிழில் வெளியாகிறது. இதனையொட்டி சென்னையில் படக்குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வசனகர்த்தா ஆனந்த் குமரேசன், நடிகர்கள் கலையரசன், குரு சோமசுந்தரம், நடிகை ஊர்வசி, இயக்குநர் லலிதா சுபாஷ் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர் குரு சோமசுந்தரம் பேசுகையில், “நடிகை ஊர்வசியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் கனவு. இயக்குநர் கதை சொன்னவுடன் உடனே மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டேன். இருப்பினும் கலையரசன் கதாபாத்திரம் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. பிறகு ஊர்வசியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காக சம்மதம் தெரிவித்தேன். படம் சிறப்பாக அமைந்திருக்கிறது. மலையாளத்தில் வெற்றி பெற்றது போல் தமிழிலும் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன். தயாரிப்பாளர் டாக்டர் அஜித் ஜாய் மிக தனித்துவமானவர். அவர் தான் புதிய திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளித்து அடையாளப்படுத்தியவர். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகர் கலையரசன் பேசுகையில், “நான் மலையாளத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட முதல் படம் இது. அதனால் இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல். படத்தின் கதையை தொலைபேசி வாயிலாகத்தான் இயக்குநரிடமிருந்து கேட்டேன். இருப்பினும் இந்த திரைப்படத்தில் ஊர்வசி மேடமும், குரு அண்ணாவும் இருக்கிறார்கள் என்றவுடன், மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். தற்போது அனைத்து மொழி ரசிகர்களும், அனைத்து மொழி திரைப்படங்களையும் பார்வையிடுகிறார்கள். அதனால் எந்த எல்லைக்கோடும் இல்லை என்பதால், மலையாளத்தில் நடிக்க சம்மதித்தேன். ஊர்வசி மேடம் ஒரு காட்சியை இயக்குநர் விளக்கும்போது, அதனை எப்படி உள்வாங்கி வெளிப்படுத்துகிறார், எந்த வகையில் மேம்படுத்துகிறார் என்பதை உடனிருந்து காணும் பாக்கியம் கிடைத்தது. என்னுடைய திரையுலக பயணத்தில் நான் சந்தித்த மிக சிறந்த தயாரிப்பாளர் டாக்டர் அஜித் ஜாய். படத்திற்கு என்ன தேவை, படக்குழுவினருக்கு என்ன தேவை.
என்பதனை தெரிந்து கொண்டு அனைத்து உதவிகளையும் செய்து, அனைவரையும் சமமாக நடத்தினார். இதற்காக அவருக்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் ரசிகர்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் லலிதா சுபாஷ் சுப்பிரமணியன் பேசுகையில், ”நான் நிறைய தமிழ் படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். என்னுடைய இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், சிறிய முதலீட்டில் உருவான திரைப்படமாக இருந்தாலும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற திரைப்படமாக இருக்கும். இதற்கு நிச்சயம் உங்களின் ஆதரவு தேவை.” என்றார்.
நடிகை ஊர்வசி பேசுகையில், “சின்ன முதலீட்டில் தயாராகும் படங்களுக்கும், பெரிய முதலீட்டில் தயாராகும் படங்களுக்கும் உழைப்பு ஒரே அளவு தான். இருந்தாலும் சின்ன பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு விளம்பரம் அதிகம் தேவைப்படுகிறது. ஒரு படத்திற்கு பலம் அதன் தயாரிப்பாளர் தான். பொதுவாக பத்திரிகையாளர்கள் எங்களைப் போன்ற நடிகைகளிடம் பிடித்த நடிகர்? பிடித்த நடிகை? பிடித்த கதாபாத்திரம்? பிடித்த இயக்குநர்? என கேள்விகளை கேட்கிறார்கள். இனி பிடித்த தயாரிப்பாளர் யார்? என்றும் கேளுங்கள். ஏனென்றால் இந்த படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ரொம்ப பிடிக்கும். வேறு சில தயாரிப்பாளர்களை பற்றி புகார் அளிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். படம் தரமான படமாக இருக்கிறதா? அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்கள் இருக்கிறதா? வணிக ரீதியாகவும் அமைந்திருக்கிறதா? என ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து, தயாரிப்பாளர் அஜித் ஜாய் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்’’ என்றார்.
