Latest:
சினிமா செய்திகள்

பெண் இயக்குனர் அறிமுகமாகும் புதிய படம் ‘நாவல்’

டைரக்டர் பாரதிராஜாவிடம் பயிற்சி எடுத்த உதவி இயக்குனர்கள் தனித்து படங்களை இயக்கி நிறைய வெற்றிப்படங்களை தந்துள்ளார்கள். அந்த வரிசையில் இன்னுமொரு இயக்குனர் வருகிறார். அதுவும் இவர் பெண் இயக்குனர். பெயர் ஐசு ஜான்சி. இவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் அந்த படத்தின் பெயர் ‘நாவல்.’

படத்தின் தலைப்பை போலவே படத்தையும் புதுமைப்பொலிவுடன் இயக்கி முதல் படத்திலேயே மக்களிடம் பாராட்டை யும், கைதட்டலையும் உறுதியாக பெறுவார் என்று இந்த படத்தை எண்ட்லஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் அருணாசலகுமார் கூறுகிறார்.

அபிஷேக் ஜோசப்ராஜ், ஆதிரை சௌந்தரராஜன் முக்கிய நட்சத்திரங்கள்.

ரகுநாத் இசையையும், ஜெகன் கலையையும், மனோஜ்சிவா நடன பயிற்சியையும், கண்ணன் பாடல்களையும், ஞானவேல் பிரதீப் படத்தொகுப்பையும், வசந்தகுமார் ஒளிப்பதிவையும், சரவணன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.

படத்தை பற்றி அறிமுக இயக்குனரான ஐசுஜான்சி கூறியதாவது: ‘‘இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும், நாம் நிஜமானவையே என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அந்த நிஜத்தை மாற்றும் ஒரு எண்ணமே நிஜமான எண்ணம் என்பதை படத்தின் மையக்கருவாக வைத்து கதைக்களத்தை அமைத்துள்ளேன். இதில் திகிலுடன், விறுவிறுப்பு, பரபரப்பு என அனைத்தும் நீக்கமற நிறைந்திருக்குமாறு திரைக்கதை அமைத்துள்ளேன்” என்கிறார்.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் பாடல்களை திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் ஆர்.வி.உதயகுமார், பொருளாளர் பேரரசு ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.