சினி நிகழ்வுகள்

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்

இயக்குநர் சுந்தர்.சி.யின் உதவியாளர் வி.எம்.ரத்தினவேல் எழுதி இயக்கும் ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ படத்தின் டீஸரை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்.

இயக்குநர் சுந்தர்.சி.யிடம் உதவியாளராக இருந்த வி.எம்.ரத்னவேல் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ இந்தப் படத்தை டீம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
நாயகனாக ஆனந்த்நாக் நடிக்கிறார்.அவருடைய நண்பர்களாக புது முகம் ராஜேஷ், ஸ்ரீஜித், விக்கி பீமா ஆகியோர் நடித்துள்ளனர். நாயகிகளாக ஸ்வேதா டோரத்தி, ரேணுகா பதுளா நடித்துள்ளனர்.
இவர்களுடன் ஓ.ஏ.கே.சுந்தர், தளபதி தினேஷ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், மீசை ராஜேந்திரன், மணிமாறன், செந்தில்குமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் ரத்தினவேலும் ஒரு எதிர்மறைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு சீனு ஆதித்யா. இசை ராஜ்பிரதாப். படத்தொகுப்பு சேதுரமணன். சண்டைப் பயிற்சி தளபதி தினேஷ். பாடல் அருண்பாரதி.

படம் பற்றி இயக்குநர் வி.எம்.ரத்னவேல் கூறுகையில், ‘‘சுந்தர்.சி. சாரிடம் 2008 முதல் 2018 வரை பத்து ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படம் கிரவுட் ஃபண்டிங் மூலம் கொரோனாவுக்கு முன்பு தொடங்க ஆசைப்பட்டு 25 நண்பர்கள் இணைந்தார்கள். இடையில் கொரோனா வந்ததும் அவர்கள் மெல்ல மெல்ல விலகினார்கள். எனவே அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.கடைசியில் அதிலிருந்த எனது உறவினர் சிலரை மட்டும் சேர்த்துக்கொண்டு ஆறு பேருடன் நானும் இணைந்து இந்தப் படத்தை டீம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளேன்.
சென்னையிலுள்ள ஒரு குப்பத்திற்கு அனாதைச் சிறுவர்கள் நான்கு பேர் வந்து இணைந்து கொள்கிறார்கள். அவர்கள் அந்த மக்களோடு ஒன்றாக கலக்கிறார்கள். நாலு பேரும் நாலு இடத்தில் வேலை பார்க்கிறார்கள்.
அதில் ஒருவன் முக்கோணக் காதலில் சிக்கிக் கொள்கிறான். அவனை ஒருத்தியும் அவன் இன்னொருத்தியையும் காதலிக்கும் சூழல் நேர்கிறது.
அந்த நான்கு பேரும் நான்கு வேலை பார்த்தாலும் கிடைக்கும் வருமானத்தில் தங்கள் தேவைக்குப் போக மீதியை அந்தக் குப்பத்தில் உள்ள முதியவர்களுக்கு மருத்துவச் செலவிற்கும் மாணவர்களுக்குப் படிப்பு செலவுக்கும் என உதவுகின்றனர் .
அப்படிப்பட்ட அவர்கள் கையில் தலைக்கவசம் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு வருகிறது. அதை அவர்கள் எப்படிச் சரியாகப் பயன்படுத்தி அந்தப் பகுதி மக்களுக்கு நன்மை செய்கிறார்கள் என்பதுதான் இந்தக் கதை’’ என்கிறார்.