சினி நிகழ்வுகள்

கன்னடம் தெலுங்கில் வெற்றி பெற்று இப்போது தமிழிலும் வெற்றியை எதிர்நோக்கும் படமே ‘கொன்றால் பாவம்’

வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சார்லி மற்றும் ஈஸ்வரி ராவ், மீசை ராஜேந்திரன், சென்ட்ராயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘கொன்றால் பாவம்.’ கன்னட சினிமாவின் பிரபல இயக்குநரான தயாள் பத்மநாபன் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஐந்பேஃக் ஸ்டுடியோஸ் சார்பில் ப்ரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
வரும் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நடிகர் சரத்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டனர்.
விழாவில் படத்தின் இயக்குநர் தயாள் பத்மநாபன் பேசுகையில், “கன்னட சினிமாவில் பல வெற்றிப் படங்களை எடுத்தாலும், என் தாய் மொழியான தமிழில் இயக்குநராக அறிமுகமாவது சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் சிறந்த படத்துடன் தான் அறிமுகமாக வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட ஒரு படம் தான் ‘கொன்றால் பாவம்’.
சர்வதேச அளவிலான ஒரு நாவலை தழுவி எழுதப்பட்ட நாடகத்தின் உரிமையை பெற்று தான் இந்த படத்தை கன்னடத்தில் இயக்கினேன். அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, மாநில விருதும் எனக்கு கிடைத்தது. தொடர்ந்து தெலுங்கில் இயக்கினேன். அங்கும் வெற்றி. தமிழில் இந்த படத்தை தயாரிக்க பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் முன் வந்தார்கள். ஆனால், அவர்களால் கதையில் எதாவது மாற்றம் நிகழ்ந்திடுமோ என்ற பயத்தால் தான் நான் அவர்களுடன் இணையாமல் இருந்தேன்.
அப்போது தன் என் உறவினர்களான ப்ரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமாரிடம் இந்த படம் பற்றி சொன்னேன். அவர்கள் உடனே தயாரிக்க முன் வந்தார்கள். இந்த படத்தில் வரலட்சுமியின் நடிப்பு பெரிதாக பேசப்படும். அவர் கதைக்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். சந்தோஷ், சார்லி, ஈஸ்வரி ராவ் மட்டும் இன்றி படத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்திருக்கும் மனோபாலா, சென்ட்ராயன் போன்றவர்களும் கவனம் பெறுவார்கள். ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் ரசிர்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார்களோ அதுவெல்லாம் இந்த படத்தில் இருக்காது. ஆனால், நீங்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் உங்களை வியக்க வைக்கும் வகையில் இந்த படத்தில் இருக்கும்” என்றார்.
இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசுகையில், ‘‘இந்த படத்தின் இயக்குநர் தயாள் பத்மநாபனுக்கும் எனக்கும் நீண்ட வருட நட்பு இருக்கிறது. என்னுடைய ‘திருடா திருடி’ படத்தை கன்னடத்தில் அவர் தான் இயக்கினார். அவருடைய இந்த படத்தை கன்னடத்தில் பார்த்தவுடன் நான் தமிழில் இயக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போது அவரே தமிழிலும் இயக்கி விட்டார். மனிதர்களின் ஆசையை பற்றிய படம் இது. ஒன்றின் மீது நாம் அசைப்பட்டு, அது கிடைத்தவுடன் அதை பயன்படுத்திவிட்டு வேறு ஒன்றின் மீது நம் ஆர்வம் போகும் அல்லவா, அது தான் கதை. இந்த படத்தை பார்த்த பிறகு இயக்குநர்கள் ‘எப்படி இப்படி ஒரு திரைக்கதை எழுத முடிந்தது?’ என்று யோசிப்பார்கள். ரசிகர்களும் படம் முடிந்த பிறகு சில நிமிடங்களாவது யோசிப்பார்கள், அப்படி ஒரு படமாக, மக்களை வியக்க வைக்கும் படமாக இது இருக்கும். வரலட்சுமி சரத்குமாரை தவிர வேறு யாராலும் இந்த கேரக்டரில் நடித்திருக்க முடியாது. படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், “வரலட்சுமி நடிக்க வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வெளிநாட்டில் படித்தவருக்கு எதற்கு நடிப்பு என்று நான் யோசித்தேன். ஆனால், அவர் தான் ஒரு படம் மட்டும் நடிக்கிறேன், என்று பிடிவாதமாக இருந்தார். பிறகு அனுபம்கேர் திரை பள்ளியில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார். இன்று அவரை நல்ல நடிகையாக பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்னை அழைத்து வீரசிம்மா ரெட்டி படத்தின் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சியை காட்டினார். அதில் வரலட்சுமி நடிப்பை பார்த்துவிட்டு நான் கண் கலங்கிவிட்டேன். வெளியாகாத ஒரு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை ஒரு படக்குழு காட்டுகிறது என்றால், அவர்கள் எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருப்பார்கள் என்று எனக்கு புரிந்தது.

வரலட்சுமி இந்த இடத்திற்கு வந்ததற்கு அவர் மட்டுமே காரணம். அவரது உழைப்பு, விடா முயற்சி தான் காரணம். நான் அவருக்கு சினிமாவில் எதையும் செய்யவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் வந்திருக்கிறேன். அவர் பல படங்களில் நடித்திருக்கிறார், அந்த நிகழ்ச்சிகளுக்கு என்னையும் அழைப்பார்கள். ஆனால், வரலட்சுமி போன் செய்து ‘டாடி வராதீங்க’ என்று சொல்லி விடுவார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு அவர் என்னை அழைத்ததுடன் மட்டும் இல்லாமல் தினமும் போன் செய்து நினைவுப்படுத்தினார். இன்றும் காலை முதல் ‘கிளம்பிட்டீங்களா, எங்கு இருக்கீங்க ’என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அப்படியான இந்த படம் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது’’ என்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், “இந்த என் நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் படமாகவும், ஒரு நடிகையாக எனக்கு முழு திருப்தி கொடுத்த படமாகவும் இருக்கும். இந்த படத்தின் கதையை கேட்ட போதும், நடிக்கும் போதும், டப்பிங் பேசிய போதும் நான் உற்சாகமாக இருந்தேன், காரணம் படத்தின் கதை. இதில் நான், சந்தோஷ், சார்லி சார், ஈஸ்வரி மேடம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறோம், எங்க நான்கு பேருக்கு இடையில் கதை நடக்கும், எங்களுடைய நடிப்பு தான் இந்த படத்தின் கதை என்றும் சொல்லலாம். இயக்குநர் தயாள் சாருக்கு தமிழில் இது முதல் படம் என்றாலும், கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். கதைக்கு என்ன வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருப்பார். 14 நாட்களில் இந்த படத்தை முடித்தாலும், அதற்காக அவர் மிக கடுமையாக உழைத்திருக்கிறார். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.