Latest:
சினி நிகழ்வுகள்

துறைமுகம் பின்னணியில் நடக்கும் அதிரடிக்கதை ‘அகிலன்’

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ‘பூலோகம்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, மீண்டும் ஜெயம் ரவி-டைரக்டர் கல்யாணகிருஷ்ணன் கூட்டணி இணைந்திருக்கும் படம் ‘அகிலன்.’ வரும் 10-ந்தேதி படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் பேசுகையில், ‘‘இந்தப் படத்தை உருவாக்குவது சற்று கடினமாகத்தான் இருந்தது ஏனென்றால் படப்பிடிப்பு முழுக்க துறைமுகத்தில் நடைபெற்றது, சில கப்பல்கள் வருவதற்கும் சில கப்பல்கள் செல்வதற்கும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது, ஆனாலும் படக்குழு இதை சமாளித்து, அருமையாக படத்தை எடுத்துள்ளனர். படத்தில் ஸ்டண்ட் குழு சிறப்பாக செயல்பட்டுள்ளது, ஒரு காட்சியில் சென்று கொண்டிருக்கும் படகில் ஏற வேண்டியிருந்தது, டூப் போட்டு எடுத்துக் கொள்வோம் என்று சொன்னேன் ஆனால் ஜெயம் ரவி தானே அதை செய்தார், இது போன்று பல இடங்களில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார், பிரியா காக்கி சட்டையில் கலக்கியுள்ளார், தான்யா ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சாம் சி.எஸ். இசையை பற்றி நான் சொல்லத் தேவையில்லை, பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார், மேலும் படத்தின் மொத்த குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்’’ என்றார்.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில், ‘‘ஒரு படத்திற்கு கதைக்களம் மிக முக்கியம் கதை நடக்கும் இடம் படத்தின் தன்மையை மாற்றும், இந்தப் படத்தில் ஹார்பரில் நாம் பார்க்காத ஒரு வாழ்க்கையை, ஒரு புதிய உலகத்தை காட்டியுள்ளார்கள். கல்யாண் மிகப்பெரிய ஆராய்ச்சி செய்துள்ளார். பாடல்கள் பற்றி விவரிக்கும் போது கூட இந்த ராகத்தில் போடலாம் என்பார். எனக்கு ராகம், இசை எல்லாம் தெரியாது இப்போது தான் கற்றுக் கொள்கிறேன். ஆனால் இசையை எனக்கு பிடித்த வேலையாக விரும்பி செய்கிறேன். படம் நன்றாக வந்துள்ளது’’ என்றார்.

நடன இயக்குநர் ஈஸ்வர் பாபு பேசுகையில், ‘‘முதலில் என் இயக்குநர் கல்யாண் சாருக்கும், வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் ரவி சாருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், நான் ஜனா சாரிடம் பணிபுரியும்போதிலிருந்தே கல்யாண் சாரின் அபார திறமையை பற்றி எனக்கு நன்கு தெரியும். அவருக்கு வாய்ப்பளித்ததற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. சாம் சி.எஸ். சிறப்பான இசையை அளித்துள்ளார், நான் பணிபுரிந்துள்ள பாடல் மிகவும் அழகாக வந்துள்ளது, படத்தின் திருப்புமுனையாக இந்தப் பாடல் இருக்கும். இதற்கு நான் ஜெயம் ரவி சாருக்கும் சாம் சி எஸ் சாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், ரவி சார் யார் தவறு செய்தாலும் சிரமம் பார்க்காமல் பொறுமையாக வெயிலிலும் கூட நின்று, இந்த பாடலை முடித்துள்ளார், எடிட்டர் கணேஷ் சாருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் விவேக் மற்றும் உதவி இயக்குநர் குழு அனைவருக்கும் நன்றி, மேலும் ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் நன்றி’’ என்றார்.
நடிகை பிரியா பவானி சங்கர் பேசுகையில், ‘‘படத்தில் நடித்த அத்தனை பேரும் பிடித்து மிக அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளார்கள். பிஸிகலாக எல்லோருமே ரொம்ப கஷ்டப்பட்ட படம். தான்யா உடன் நான் நடிக்கவில்லை ஆனால் அவருக்கு வாழ்த்துகள். ஜெயம் ரவி நிறைய உழைத்திருக்கிறார். படம் அட்டகாசமாக வந்துள்ளது.’’
இயக்குநர் கல்யாண்கிருஷ்ணன் பேசுகையில், ‘‘இந்த படம் துறைமுகத்தில் நடப்பவைகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது, அதனால் அனைவருக்கும் இது புதிதாக இருக்கும் என்று கூறினார்கள், ஆனால் அப்படி இல்லை, என்னை சுற்றியுள்ள நிறைய நண்பர்கள் துறைமுகத்தை சுற்றித்தான் இருக்கிறார்கள், அவர்கள் எளிய மக்கள் தான், எனவே படம் பார்க்கும் அனைவரும் தங்களுடன் எளிதாக தொடர்புபடுத்தி கொள்ளும் ஒரு எளிமையான வாழ்வை சொல்லும் வண்ணம் தான் இப்படம் இருக்கும். இப்படத்தை ஜெயம் ரவி தன்னுடைய நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார். எல்லா படங்களுக்கும் கேப்டன் இயக்குநர் என்றுதான் கூறுவார்கள் ஆனால் இந்தப் படத்தின் கேப்டன் எங்கள் தயாரிப்பாளர் சுந்தர் தான். என் அனுபவத்தில் நிறைய தயாரிப்பாளர்களை பார்த்துள்ளேன் ஆனால் சுந்தர் அளித்த ஆதரவு நம்ப முடியாத ஒன்று , நான் இதனை கூறுவதற்கான காரணங்கள் நீங்கள் படத்தை பார்த்த பிறகுதான் தெரியும்.
என்னுடைய திரைப்பயணம் என்பது ஜெயம்ரவியை சுற்றியே அமைந்துள்ளது, பேராண்மை முதல் இன்று வரை நாங்கள் ஒன்றாய் பணிபுரிந்துள்ளோம். பேராண்மையில் திரைக்கதை, பின் இயக்கத்தில் பூலோகம், இப்போது அகிலன், இந்த மூன்று படங்களும் பெரிய கருத்துகளை கொண்ட படம். இந்த மூன்று படங்களிலும் எனக்கு ஜெயம் ரவியுடன் கிடைத்த அனுபவம் மிகவும் பெரியது’’ என்றார்.
நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், ‘‘என் 20 வருட திரை வாழ்க்கையில் உங்களது ஒத்துழைப்பு, பாராட்டு நிறைய கிடைத்துள்ளது. மேக்கிங்கை பொறுத்தவரை அகிலன் ரொம்ப கஷ்டமான படம், இதெல்லாம் கிடைக்குமா… இதெல்லாம் எடுக்க முடியுமா… என நினைத்தபோது, தயாரிப்பாளரால் தான் இதை எடுக்க முடிந்தது. இந்த படத்தை சாத்தியமாக்கிய என் படக்குழு அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் சுந்தர் சார் என் சகோதரர் மாதிரி தான். நிறைய படங்கள் சேர்ந்து பயணிக்கப் போகிறோம். இயக்குநர் கல்யாண், மிகப்பெரிய திறமைசாலி, கடின உழைப்பாளி, நல்ல சிந்தனையாளர் மக்களுக்கு நல்ல விஷயம் சொல்ல ஆசைப்படும் நபர். அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கட்டும். இந்தப் படம் நல்லா வந்ததற்கு காரணம் அவருடைய டீம் தான். தான்யா ரவிச்சந்திரன் இந்தப்படத்தில் சர்ப்ரைஸ் ஆக இருப்பார். சாம் சி.எஸ். அட்டகாசமான இசையை தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி’’ என்றார்