‘‘என்னுடைய பலமே இயக்குனர்கள் தான்…’’ ‘சொப்பன சுந்தரி’ பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி

ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் , ஹியூ பாக்ஸ் ஸ்டுடியோஸ் பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பாலாஜி சுப்பு மற்றும் விவேக் ரவிச்சந்திரன் இருவரும் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சொப்பன சுந்தரி.’
‘லாக்கப்’ வெற்றிப்படத்தை தொடர்ந்து சார்லஸ் இயக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தின் முன்னோட்டத்தை இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா வெளியிட்டார்.
டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் மோகன் ராஜா பேசுகையில், ‘‘என்னுடைய உதவியாளராக பணியாற்றிய இப்படத்தின் இயக்குநர் சார்லஸ் பிரபு கடும் உழைப்பாளி. ‘வேலைக்காரன்’ படத்தின் வெற்றியில் அவரின் பங்களிப்பு அதிகம். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இயக்குநராக உயர்ந்திருப்பது எனக்கு பெருமை. அவர் லாக் டவுன் காலகட்டத்தில் ‘லாக்கப்’ எனும் படத்தை இயக்கினார். ‘லாக்கப்’ ஒரு உணர்வுபூர்வமான படைப்பு. ‘லாக்கப்’ திரைப்படத்தை விட, இந்த ‘சொப்பன சுந்தரி’ திரைப்படத்தை கமர்சியலாக இயக்கியிருப்பதாக தெரிவித்தார். இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகளையும், முன்னோட்டத்தையும் பார்த்தேன். இது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது.
அண்மைக்காலமாக ‘தரமற்ற படத்தை பார்வையிட்டாலே தவறு’ என்று ரசிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்வையிட்டு, நீங்கள் தான் நல்ல படமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டும். அதனால் அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். நீங்கள் வருகை தருவதால் தான் எங்களுடைய வாழ்வாதாரம் நடைபெறுகிறது. விமர்சனம் நன்றாக இருந்தால் தான் திரையரங்கத்திற்கு வருவோம் என்ற மனநிலையை ரசிகர்களும், பார்வையாளர்களும் மாற்றிக் கொள்ள வேண்டும்’‘ என்றார்.
இயக்குநர் சார்லஸ் பேசுகையில், ‘‘படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயர் வைத்திருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதனை படம் பார்க்கும் போது தெரியும். இந்த திரைப்படத்தின் கதையை நம்முடைய வீட்டின் பக்கத்து வீடுகளில் நடைபெறும் கதையாக உருவாக்கி இருக்கிறோம்.
படத்தில் ‘சொப்பன சுந்தரி’யாக ஐஸ்வர்யா ராஜேஷை தேர்வு செய்த பின்னணியிலும் ஒரு காரணம் இருக்கிறது. அவர் இந்த படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். தன்னுடைய தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொண்டார். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமல்ல.. லட்சுமி பிரியா மற்றும் தீபா சங்கர் ஆகியோரும் தங்களின் தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொண்டார்கள்.
இந்த திரைப்படம் திருக்குறள் ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்த பிறகு, பார்வையாளர்கள் அனைவரும் அந்த திருக்குறளின் முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்வார்கள். ” என்றார்.
நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ‘‘கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குநர்கள் தான். ‘கனா’ படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் அருண் ராஜா, ‘க /பெ ரணசிங்கம்’ படத்தை வழங்கிய இயக்குநர் விருமாண்டி, ‘சொப்பன சுந்தரி’ படத்தை வழங்கிய இயக்குநர் சார்லஸ் போன்ற இவர்கள் தான் காரணம்.
இயக்குநர் சார்லஸ், முதலில் இந்தப் படத்தை என்னை நாயகியாக வைத்து இயக்க மாட்டேன் என்று கூறி விட்டார். அதன் பிறகு அவரை நான் அழைத்தவுடன் வருகை தந்தார். அவருடைய கோபத்தின் ஆயுள் அவ்வளவு தான். பிறகு இருவரும் கதையைப் பற்றி விவாதித்தோம். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக அவர் வலம் வருவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய திட்டமிடல் நேர்த்தியாக இருக்கும்.
ஒரு நடிகர் நட்சத்திர நடிகராக… சூப்பர் ஸ்டாராக உயர்வதற்கு இயக்குநர்கள் தான் அடித்தளம் அமைக்கிறார்கள். அதிலும் நடிகைகளை, கதையின் நாயகியாக நடிக்க வைத்தால்.. அவர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள். எப்படி கொண்டாட வேண்டும் என்பதை இயக்குநர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.
சொப்பன சுந்தரி’ படத்தை நான் பார்த்து விட்டேன். நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏனெனில் வாழ்க்கையில் மிகவும் கடினமான வேலை, மற்றவர்களை சிரிக்க வைப்பது. ஒருவரை நம் நடிப்பால் கண்ணீர் விட வைப்பது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல. இது சரியாக செய்து விட்டால் அவர்களை விட சிறந்த நடிகை வேறு யாரும் இருக்க முடியாது. அதனை இந்தப் படத்தில் நான் முயற்சித்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் நான் நடித்திருக்கும் அனைத்து காட்சிகளிலும், இயக்குநர் சொல்லித் தந்ததை அப்படியே பிரதிபலித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்’’ என்றார்.
