சினிமா செய்திகள்

பெண்கள் பிரச்சினைக்கு புதிய தீர்வு சொல்லும் ‘அரியவன்’

எம்.ஜி.பி.மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ரணாலி நடிப்பில், கமர்ஷியல் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அரியவன்.’ முக்கிய கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, காவ்யா,சூப்பர் குட் சுப்பிரமணி, ரவி வெங்கட்ராமன் இருக்கிறார்கள்.
மார்ச் 3-ந்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கதாசிரியர் மாரிச்செல்வன் பேசுகையில், “ஒரு கதையில் எந்த கருத்தும் சொல்லக்கூடாது, அட்வைஸ் பண்ணக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதியது தான் இந்தக்கதை, ஆனால் இந்தக் கதை தன்னைத்தானே எழுதிக் கொண்டது என்பது தான் உண்மை. உலகம் தோன்றிய காலத்திலிருந்தே பெண்கள் மீதான வன்முறை இருந்து கொண்டே தான் இருக்கிறது அதை மாற்ற நம் மனங்கள் மாற வேண்டும். இந்தப்படம் அதைப்பற்றிப் பேசும்’’ என்றார்.
நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி பேசுகையில், “பாக்யராஜ் சார் இந்தப்படத்தை வாழ்த்த வந்ததே இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஆக்ஷன் ஹீரோவுக்கு உலக அளவில் பெரிய மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் தமிழில் அமிதாப்பச்சனை உயரத்தில் நினைவூட்டும் ஈஷான் நிறைவேற்றுவார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்’’ என்றார்.
நடிகை காவ்யா பேசியபோது, “நாம் நிறைய படங்கள் நடித்தாலும் சில படங்கள் தான் மனதுக்கு நெருக்கமாக, முக்கியமான படமாக தோன்றும். இந்தப் படம் அப்படிப்பட்ட படம். எனக்கு வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி’’ என்றார்.
இசையமைப்பாளர் கிரி நந்த் பேசியபோது, “இந்த படத்தில் ஒரு பெப்பியான பாடல் செய்துள்ளேன். அனைவரும் விருப்பப்பட்டு உழைத்துள்ளோம். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி’’ என்றார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசுகையில், ‘‘இந்தப் படத்தில் எனது இசையில் ஒரு பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடல் உருவானதே ஒரு ஆச்சரியம் தான். நான் இருவரைப் பாட வைத்து ஒரு ரஃப் வெர்ஷனாக ஒரு பாடலை உருவாக்கி வைத்தேன். அது நண்பரிடத்தில் இருந்தது. ஒருநாள் எனக்கு போன் செய்த அந்த நண்பர் இப்பாடலை ஒரு படத்தில் பயன்படுத்தக் கேட்கிறார்கள் என்றார். யாரெனக் கேட்டேன். இயக்குநர் மித்ரன் R ஜவஹர் இயக்கும் படம் என்றவுடன் உடனே ஓகே சொல்லி விட்டேன். அவர் மிகப்பெரிய இயக்குநர். மிக நன்றாகப் பாடலை உருவாக்குவார் என்ற நம்பிக்கை தான். இப்போது அந்த பாடலை திரையில் பார்க்கும் போது என் நம்பிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியை உணர்ந்தேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

நாயகி ப்ரணாலி பேசியபோது, “தமிழில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் சேர்ந்து வேலை பார்க்கும் படத்தில் நான் நாயகியாக நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. இந்தப்படத்தில் எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள் படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் சக்ரவர்த்தி பேசியபோது, “என் நண்பர் வெளிநாட்டில் இருக்கிறார் அவர் படமெடுக்கலாம் எனச் சொன்ன போது, முன்னணி நாயகனுக்குப் பதிலாக புது நாயகர்களை வைத்துப் பண்ணலாம் என்றார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அப்படித் தேடிப்பிடித்தவர் தான் ஈஷான். அவர் மிகப்பெரிய ஹீரோவாக வருவார். எம்.ஜி.பி. மாஸ் மீடியா இனி நிறைய படங்கள் செய்யும். நல்ல படைப்புகளை ரசிகர்களுக்குத் தருவோம். இப்படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி’’ என்றார்.
நாயகன் ஈஷான் பேசியபோது, “இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இப்படிப்பட்ட பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததே ஆசீர்வாதம் தான். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த எம்.ஜி.பி.மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. பொதுவாக இயக்குநர் மித்ரன் R ஜவஹர் படங்கள் குடும்பத்தோடு பார்க்கும்படி இருக்கும். இந்தப்படம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை, அவர்களே எப்படித் தவிர்க்கலாம் என்பதைச் சொல்கிறது. அதை அனைவரும் ரசிக்கும் வகையில் படம் சொல்லியுள்ளது. இந்தப் படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். எல்லோரும் இந்தப்படத்திற்கு ஆதரவு தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.