‘‘ரஜினி கண்ணில் இருந்த அதே பவரை என் பட ஹீரோவிடம் பார்த்தேன்…’’ தக்ஸ் படவிழாவில் டைரக்டர் பிருந்தா மகிழ்ச்சி

இந்திய திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா, ’ஹே சினாமிகா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தில் காதல் கதையை இயக்கிய பிருந்தா, தற்போது முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையை கையில் எடுத்துள்ளார்.
‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக ரித்து ஹரூன் அறிமுகமாகிறார். நாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்க, பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ் முக்கிய வேடங்களில் வருகிறார்கள். முனிஷ்காந்த், இரட்டையர் அருண் – ஆகாஷ், அப்பானி சரத், பி.எல்.தேனப்பன் ஏனைய நட்சத்திரங்கள்.
எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு மற்றும் மும்தாஸ்.எம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசை சாம்.சி.எஸ்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று நான்கு மொழிகளில் வரும் 24-ந் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
இயக்குநர் பிருந்தா பேசுகையில்,, “ஒரு நல்ல படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்த ஷிபு சாருக்கு நன்றி. இந்த படத்தை தொடங்கும் போது ஹீரோவாக யாரைப் போடலாம் என்று யோசித்த போது, அவர் தனது மகன் ரித்து சரியாக இருப்பாரா? என்று கேட்டார். தயாரிப்பாளரின் மகனா…என்று யோசித்தேன், பிறகு ரித்துவின் சில வீடியோக்களை காண்பித்தார்கள், அதை பார்த்த பிறகு அவரை நேரில் சந்தித்தேன், அப்போது அவர் கண்ணில் ஒரு பவர் இருந்தது. ரஜினி சார் கண்ணில் பார்த்த அதே பவரை நான் ரித்துவின் கண்களில் பார்த்தேன், அப்போது அவர் தான் ஹீரோ என்று முடிவு செய்து விட்டேன். அவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். நடிப்பு மட்டும் அல்ல நடனத்திலும் அசத்தியிருக்கிறார். நிச்சயம் ரித்து பெரிய நடிகராக வருவார், அதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடத்தில் இருக்கிற’‘ என்றார்.
நாயகன் ரித்து ஹரூன் பேசுகையில், “அம்மா இயக்கிய படத்தில் நடித்தது போல் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் நடித்தது இருந்தது. படத்தில் வசனம் குறைவாக தான் இருக்கும், ஆனால் சாம்.சிஎஸின் இசை அதிகம் பேசும். நடிகராக வேண்டும் என்பதற்காக பல முயற்சித்து வருகிறார்கள். ஆனால், எனக்கு இந்த இடம் எளிதாக கிடைத்துவிட்டது, அதற்கு காரணம் என் அப்பா ஷிபு தான், அவருக்கு நன்றி” என்றார்.
இசையமைப்பாளர் சாம்.சிஎஸ் பேசுகையில், “நான் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சமைப்போம். மாதத்தில் ஒரு நாள், அனைத்து நண்பர்களும் சேர்ந்து கையில் இருக்கும் பணத்தை போட்டு தான் பிரியாணி சமைப்போம். ஆனால், சமைத்து முடித்த பிறகு அது பிரியாணியாக அல்லாமல் தக்காளி சாதமாக இருக்கும். அப்படி தான் பல படங்கள் எனக்கு அமைகிறது. கதை சொல்லும் போது நன்றாக சொல்வார்கள், ஆனால் அதை படமாக எடுக்கும் போது அவர்கள் சொன்னபடி இருக்காது. ஆனால், பிருந்தா மாஸ்டர் என்னிடம் என்ன கதை சொன்னாரோ அதை அப்படியே காட்சியாக எடுத்திருக்கிறார். படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் ரியா ஷிபு படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
