சினி நிகழ்வுகள்

ஸ்ரேயா நடிப்பில் உருவான பான் இந்தியா படம் ‘கப்ஜா’

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் உபேந்திரா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ‘கப்ஜா’. பிரபல கன்னட இயக்குநர் ஆர்.சந்துரு தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தில் உபேந்திரா நாயகனாக நடிக்க, மற்றொரு கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா நாயகியாக மீண்டும் களம் இறங்கியிருக்கிறார்.
வரும் மார்ச் மாதம் 17-ந்தேதி படம் வெளியாக உள்ள நிலையில், தமிழ் பதிப்பின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் ஆர்.சந்துரு, நடிகை ஸ்ரேயா, இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
விழாவில் இயக்குநர் ஆர்.சந்துரு பேசுகையில், “தமிழகத்தில் டிரைலரையும், திரிஷாவின் நடராஜா பாடலையும் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஸ்ரேயாவின் பாடலை முதல் முறையாக சென்னையில் தான் வெளியிடுகிறோம். அதற்கு காரணம், இந்தியாவிலேயே தமிழகத்தின் கலாச்சாரம் தான் சிறப்பானது. அதனால் தான் இந்த பாடலை இங்கு வெளியிட்டுள்ளோம். தமிழக மக்கள் நிச்சயம் எங்கள் படத்திற்கு ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நான் கே.ஜி.எப் படத்தை பார்த்து விட்டு, நாமும் பெரிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ‘கப்ஜா’ கதையை எழுதினேன். நடிகர் உபேந்திராவிடம் இந்த கதையை சொன்னபோது, இவ்வளவு பெரிய படத்தை எப்படி எடுப்பது, என்று கேட்டார். ‘நீங்கள் மட்டும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் போதும், எடுத்து விடுவேன்’ என்றேன். அதன்படி அவர் எனக்கு ஒத்துழைத்தார், அதனால் தான் நானே இந்த படத்தை தயாரித்தேன். மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகப்பெரிய குழுவினரோடு படத்தை உருவாக்கியுள்ளோம். நான் பல படங்களை இயக்கியிருந்தாலும் இந்த படத்தை என் முதல் படமாக எண்ணி இயக்கியிருக்கிறேன். இந்த படத்துக்காக 3 வடங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். நிச்சயம் தமிழ் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்து படத்தை வெற்றியடையச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
படத்தின் நாயகி ஸ்ரேயா பேசுகையில், “தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது, மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். கப்ஜா மிகப்பெரிய படமாக உருவாகியிருக்கிறது. நடராஜா பாடல் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த பாடலை என் மகள் ராதா பார்த்து, பாடலில் வருவது போல் மேளம் அடித்துக் கொண்டிருப்பார். இந்த பாடல் காட்சியை படமாக்கியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
கப்ஜா படத்திற்காக போடப்பட்ட செட் பிரமாண்டமாக இருந்ததோடு, மிகவும் தூசி நிறைந்ததாகவும் இருந்தது. அதில் நடிக்கும் போது எனக்கு சைனஸ் பிரச்சினை ஏற்பட்டது. அதையெல்லாம் தாங்கி தான் படத்தில் நடித்திருக்கிறேன், காரணம் மிக சிறப்பான கதை என்பதால் தான் நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம்.
இன்று படங்கள் அனைத்தும் இந்திய பான் இந்தியா அளவில் வெற்றி பெறுகிறது. இதன் மூலம் சினிமாவுக்கு மொழி முக்கியம் இல்லை என்பது தெரிகிறது. அனைத்து படங்களையும் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கிறார்கள். கப்ஜா படமும் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.