‘‘சிவகார்த்திகேயன் போல கவினும் பெரிய நடிகராக உயர்வார் ’’ -டாடா பட வெற்றி விழாவில் தயாரிப்பாளர் அம்பேத்குமார் வாழ்த்து

அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், ‘பிக்பாஸ் புகழ்’ கவின் நாயகனாக நடிக்க, நாயகியாக அபர்ணா தாஸ் நடித்த ‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நாயகன் கவின் பேசகையில் ‘‘இந்த படம் என் 12 வருட கனவு என்று கூறியிருந்தேன். இப்போது அந்த கனவை நிஜமாக்கியிருக்கிறீர்கள். படம் பார்த்து எங்கெங்கோ இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசுகிறார்கள், ஒரு சாதாரண பையன், தன்னுடைய வேலையை நம்பி, நேர்மையாகவும், கடுமையாகவும் உழைத்தால் அவன் நினைத்த இடத்திற்கு நிச்சயம் செல்ல முடியும், என்பதை உண்மையாக்கிய அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் அம்பேத்குமார் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்தார். அவருடைய நம்பிக்கைக்கு ஏற்றபடி நாங்கள் வெற்றிப் படத்தை கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி.
இந்த படத்தில் எனது கதாபாத்திர பெயர் வேறு ஒன்றாக இருந்தது. நான் தான் இயக்குநரிடம் மணிகண்டன் என்று மாற்றிக் கொள்ளலாமா? என்று கேட்டேன். அதற்கு காரணம், என் பள்ளி நண்பனின் பெயர் அது. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர். அவன் இன்று உயிருடன் இல்லை. அவனுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று தான் அவருடைய பெயரை கதாபாத்திரத்திற்கு வைத்தேன். நான் முதல் முதலில் டிவியில் வந்த போது கைதட்டியவன் அவன் தான். நான் எது செய்தாலும் என்னை கொண்டாடுவான். இந்த படத்தின் வெற்றியையும் என் நண்பனுக்கு சமர்ப்பிக்கிறேன். இயக்குநர் பாபு கணேஷ், ஒளிப்பதிவாளர் எழிலரசன், இசையமைப்பாளர் ஜென் மார்டின், நாயகி அபர்ணா தாஸ் என அனைவரையும் இந்த படத்தின் வெற்றி அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும்” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசுகையில், “நான் திரைப்படத்துறைக்கு வந்தது எதிர்பாராமல் நடந்தது. சில வருடங்கள் படம் இயக்காமல் இருந்த இயக்குநர் எழில் சாருக்கு எதாவது உதவி செய்ய முடியுமா? என்று ஒரு நண்பர் கேட்டார். அதற்காக ‘மனம் கொத்திப்பறவை’ படத்தை தயாரித்தேன். தொடர்ந்து சில படங்களை தயாரித்தோம்.
‘லிப்ட்’ படம் பார்த்த பிறகு கவினை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கவின் தான் டைரக்டர் கணேஷ் பாபுவை என்னிடம் அனுப்பி வைத்தார். கதையை கேட்டவுடன் பிடித்து விட்டது.
மனம் கொத்திப்பறவை படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என்று நான் தான் சொன்னேன். கவினும் சிவகார்த்திகேயன் போல் பெரிய நடிகராக உயர்வார். இந்த கதையை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் நிராகரித்து விட்டது. ஆனால், இப்போது அவர்களே கணேஷ் பாபுவை வைத்து படம் பண்ண ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதுவே டாடா படத்தின் வெற்றிக்கு சான்று” என்றார்.
இயக்குநர் கணேஷ் கே.பாபு பேசுகையில், “12 வருடங்களாக இதற்குத்தான் காத்திருந்தேன். கவின் இல்லையென்றால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. இசையமைப்பாளர் ஜென் மார்டினுக்கு பெரிய இயக்குநர்கள் வாய்ப்பளித்தால் அவர் நிச்சயம் மிகப்பெரிய இடத்துக்கு செல்வார்’’ என்றார்.
நாயகி அபர்ணா தாஸ் பேசுகையில், “தமிழ் சினிமாவில் நான் நாயகியாக அறிமுகமாகும் ஒரு படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.
