‘‘பா.ரஞ்சித் எனக்கு எதிரி இல்லை…’’ – பகாசூரன் இயக்குனர் மோகன்.ஜி.

‘பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.ஜி. இவர், ஜி.எம்.பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அடுத்து தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பகாசூரன்’.
இயக்குனர் செல்வராகவன் நாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர்.
படம் வரும் 17-ந் தேதி வெளியாவதை முன்னிட்டு சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் படத்தின் இயக்குனரும் விழாவில் கதையின் நாயகன் செல்வராகவன் பேசுகையில், “இங்கு திறமை இல்லாத யாரும் சாதாரணமாக ஜெயித்து விடமுடியாது. மோகன்.ஜி. கடுமையான உழைப்பாளி, திறமைசாலி. சினிமா மீது அவ்வளவு மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருக்கக்கூடிய நல்ல இயக்குனர். நேரம் காலம் பாராமல் படக்குழுவினர் உழைத்திருக்கின்றனர். நான் இயக்குனராக இருக்கும்போது ஓடிக்கொண்டே இருப்பேன். யாரையும் கவனிக்க, திரும்பிப்பார்க்க நேரம் இருக்காது. ஆனால் இந்தப்படத்தில் நடிகராக இருக்கும்போது பெரிய டெக்னீஷியன்ஸ், கலைஞர்கள் சாதாரணமாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள். என் மேல் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை கொடுத்த மோகன் ஜிக்கு நன்றி” என்றார்.
தயாரிப்பாளரும் இயக்குனருமான மோகன்.ஜி. பேசுகையில், “படத்தின் டிரைலர் டீசரை பார்த்துவிட்டு நிறைய பாராட்டுகள் கிடைத்தது. இதற்கு என்னோடு சேர்ந்து பணியாற்றிய அனைவருமே காரணம் என்றாலும் ஒளிப்பதிவாளர் பரூக், இசையமைப்பாளர் ஷாம் சி எஸ் முக்கியமானவர்கள். அவர்களுக்கு நன்றி.
செல்வராகவன் சார் அமைதியானவர் ரொம்ப பேசமாட்டார் என்று இங்கு பேசியவர்கள் சொன்னார்கள். ஆனால் நானும் செல்வா சாரும் நிறைய பேசியிருக்கோம். படப்பிடிப்பின் இடையே அவருடன் அமர்ந்து அவருடைய அனுபவங்களை கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறேன். அவரது ‘காதல்கொண்டேன்’ படத்தை பார்த்து தான் எனக்கு இயக்குனராகும் ஆசையே வந்தது. அதேபோல் நட்டி சாருடைய ‘ஜப்வி மெட்’ படம் பார்த்துட்டு அவரை சந்திக்க ஆசைப்பட்டிருக்கேன். ‘பகாசூரன்’ யார் என்பது படம் வந்தபிறகு உங்களுக்கு தெரியும். இது அனைவருக்குமான படம். நான் ஒரு பிரிவினரை எதிர்த்து படம் பண்ணுவதாக சொல்கிறார்கள். அதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை. பா.ரஞ்சித் பட்டியலினத்தவருக்கும் நான் ஓபிசி மக்களுக்குமான படங்களை எடுப்பதாக ஒரு பார்வை இருக்கிறது. சினிமாவில் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. நான் பார்த்த அனுபவித்த விஷயங்களைத்தான் படமாக எடுக்கிறேன். சமூகத்திற்கு சமநிலையை ஏற்படுத்தும் தேவையான படங்களை தொடர்ந்து நான் தந்து கொண்டே இருப்பேன்’’ என்றார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசுகையில், ‘‘சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தபோது 65 வயதுள்ள ஒரு அம்மா ‘என் அப்பன் அல்லவா’ பாடலை பாராட்டி பேசினார். ஆனால் அந்தப் பாடலை பாடியதும் நான் தான் என்று அவருக்கு தெரியவில்லை. கிறிஸ்தவனான நான் இந்தப் பாடலை பாடியது சிலருக்குள் கேள்வியை எழுப்பியது. இசைக்கும் இசையமைப்பாளனுக்கும் மொழி, சாதி, பேதம் கிடையாது. இந்த பாடல் உணர்ச்சிகரமாக இருந்து கடவுளுடன் பேச வைத்தால் ஒரு கலைஞனாக நான் பெருமைப்படுகிறேன். இது சாதி கதையல்ல. விழிப்புணர்வு இல்லாத தாய்மார்கள், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம்” என்றார்.
நடிகர் நட்டி பேசுகையில், “மோகன்.ஜி மேலோட்டமாக ஒரு விஷயத்தை எடுத்து படம் பண்ணும் ஆள் இல்லை. எங்கே பிரச்சினை நடக்கிறதோ அங்கேயே நேரில் சென்று சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து படம் பண்ணும் இயக்குனர். கதை சொல்லும்போதே அத்தனை ஆதாரங்களையும் கொடுக்கக்கூடிய இயக்குனர். செல்வராகவன் ஆகச்சிறந்த இயக்குனர் என்பதில் சந்தேகமில்லை. இந்தப்படத்துக்குப் பிறகு ஆகச்சிறந்த நடிகர் என்பதையும் நிரூபிப்பார். படத்தில் அவர் அழுதால் நாமும் அழுவோம். அவர் வருத்தப்பட்டால் நாமும் வருத்தப்படுவோம். அந்த அளவுக்கு நடித்திருக்கிறார். இந்தப்படம் சமூகத்துக்கு தேவையான படம்” என்றார்.
