Latest:
திரை விமர்சனம்

கொடை திரை விமர்சனம்

கொடைக்கானலில் நடக்கும் கதை என்பதால் கொடைக்கானலை சுருக்கி ‘கொடை’ என்ற தலைப்பை படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.

கொடைக்கானலில் விடுதி நடத்தி வரும் நாயகன் கார்த்திக் சிங்கா, ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார். தனது ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் குழந்தைகளை கல்வியில் தேர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்படுகிறார். இதற்கிடையே தீயணைப்பு துறையில் பணியாற்றும் அனயாவை ஒருதலையாக காதலிக்கவும் செய்கிறார்.
நாயகனின் சமூகப்பணியினால் ஈர்க்கப்பட்ட அனயாவின் அப்பா ஆனந்த் பாபு, கார்த்திக் சிங்காவின் ஆதரவற்ற இல்லத்திற்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக கொடுக்கிறார். ஆனால் அந்த பணத்தை வில்லன் அஜய் ரத்னத்தின் ஆட்கள் தங்களுக்கு உரிய சாகசத்தில் பறித்துக் கொண்டு விடுகிறார்கள். இழந்த பணத்தை மீட்க முடிவு செய்யும் கார்த்திக் சிங்கா, மோசடி செய்தவர்களின் ரூட்டிலேயே சென்று அவர்கள் இதுவரை மோசடி செய்த அனைத்து பணத்தையும் அவர்களிடம் இருந்து கைப்பற்ற திட்டம் போடுகிறார். அந்த திட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா? அவர் காதல் என்னவானது? முடிவு, விறுவிறு கிளைமாக்ஸ்.
வாசன் கார்த்திக் என்ற பெயரோடு சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர், தற்போது தனது பெயரை கார்த்திக் சிங்கா என்று மாற்றிக்கொண்டு இந்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார். நடனம், சண்டைக்காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார். காதலியை பார்த்ததும எற்படும் இதயப் படபடப்பை நடிப்பால் நமக்கும் கடத்தி விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் அனயா, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.
நாயகனின் நண்பராக வரும் ரோபோ சங்கர், காமெடிக்கு.
வில்லனாக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார், அஜய் ரத்தினம்.
எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், மாரிமுத்து, சிங்கமுத்து, சுவாமிநாதன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், ஆனந்த்பாபு, கே.ஆர்.விஜயா, வைஷாலி தணிகா, கராத்தே ராஜா என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.
சுபாஷ் கவியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
நாயகனின் ஒருதலைக்காதலில் தொடங்கி மோசடி கும்பலிடம் இருந்து சாமர்த்தியமாக பணத்தை கைப்பற்றுவது வரை படத்தை கமர்ஷியல் தடத்தில் ஓடவிட்டு விறுவிறுப்புக்கு உத்தரவாதம் தந்திருக்கிறார், இயக்குனர் ராஜா செல்வம்.