வசந்த முல்லை பட விமர்சனம்

ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் பாபி சிம்ஹா, இரவு பகலான பணிச்சுமையால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். இதனால், மனைவி காஷ்மீரா கணவனை அழைத்துக் கொண்டு சுற்றுலா போகிறார். சுற்றுலா முடித்து வரும் வழியில் பழைய ஹோட்டலான ‘வசந்த முல்லை’யில் தங்குகிறார்கள். அங்கே வில்லேந்திய ஓர் உருவம் அவர்களைத் தாக்கிக் கொல்ல முயல்கிறது. அதனிடமிருந்து தப்பிக்க ருத்ரன் எடுக்கும் அதிரடி தடாலடியும், வில்லேந்திய உருவத்துக்குள் ஒளிந்திருப்பது யார் என்கிற பின்னணியுமே கதை.
பாபி சிம்ஹா (இப்போது சிம்ஹா) நாயகனாக நடித்திருக்கிறார். பணிச்சுமையால் பாதிக்கப்படும் காட்சிகளிலும், தங்கும் விடுதியில் நடக்கும் குழப்பமான சம்பவங்களிலும் நடிப்பில் தனித்துவம் தெரிகிறது. ஒரே இரவில் நடக்கும் இந்த கதையில் கதை நாயகனாகவே மாறி கேரக்டருக்கு சிறப்பு சேர்த்து விடுகிறார்.
கதாநாயகி கஷ்மீரா பர்தேசி காதல் காட்சிகளில் அழகூட்டுகிறார். கணவன் மீதான அக்கறையில் பொறுப்பான குடும்பத் தலைவியை உணர முடிகிறது.
சிறப்பு தோற்றத்தில் இரண்டே காட்சியில் வந்தாலும் ஆர்யா தன் இருப்பை ஆழமாக பதிவு செய்து போகிறார்.
விடுதி ஊழியராக கொச்சு பிரேமன், மருத்துவராக சரத்பாபு நடிப்பில் கவனிக்க வைக்கிறார்கள்.
மென்பொருள் துறையின் பணிச்சுமையை மருத்துவக் கண்ணோட்டத்துடன் அணுகி, திரில்லர் பின்னணியில் சொல்ல முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், இயக்கிய ரமணன் புருஷோத்தமன். இடைவேளைக்குப்பின் டைம் லூப் போல வரும் காட்சிகள் மட்டும் வேகத்தடை.
ராஜேஷ் முருகேசின் பின்னணி இசையும், இரவு நேர திகிலை படபடப்பு சகிதம் தரும் கோபிஅமர்நாத்தின் கேமராவும் இந்த வசந்த முல்லையின் வாசனையை அதிகமாக்கி விடுகிறது.
