சினிமா செய்திகள்திரை விமர்சனம்

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ விமர்சனம்

வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின் பிரதான நாயகனாக கதையின் நாயகனாக கதாநாயகனாக நடித்து வெளி வந்திருக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’.உலகெங்கும் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.சுராஜ் இயக்கி உள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் வடிவேலு,ஷிவானி, குமாரி சச்சு, ஆனந்தராஜ், மனோபாலா, யூடியூப் பிரசாந்த், ஷிவாங்கி,
, லொள்ளு சபா சேஷு, முனீஸ்காந்த், ,ரெடின் கிங்ஸ்லி,
பூச்சி முருகன் ,
தங்கதுரை, கே.பி.ஒய் பாலா, ராஜா ராணி கார்த்தி, ராவ் ரமேஷ் , ராமர்
மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதுவரை திரைப்படங்களில் ஆட்களைக் கடத்தியுள்ளனர். போதை மருந்துகளைக் கடத்தி உள்ளனர். வாகனங்களைக் கடத்தி உள்ளனர். இதில் நாயைக் கடத்துகின்றனர். பணப்பசையுள்ள இடத்தில் செல்லமாக வளர்க்கப்படும் உயர் ரக நாய்களைக் கடத்தி பணம் பறிக்கும் காமெடி தாதாவாக வடிவேலு வருகிறார் .அந்தப் பாத்திரத்தின் பெயர் தான் நாய் சேகர்.நாய்களைக் கடத்துவது, பணம் கேட்டு போனில் மிரட்டுவது என்பது அவரது வேலை.
அவருக்கு உதவியாளர்களாக ரெட்டின் கிங்ஸ்லி , யூடியூப் பிரசாந்த் , ஷிவாங்கி இருக்கிறார்கள்.

இப்படி நாய்களைக் கடத்திப் பணம் பறிக்கும் போது ஒரு முறை தவறுதலாக வேறொருவருடைய நாய் என்று நினைத்து ஆனந்தராஜ் நாயைக் கடத்தி விடுகிறார்கள். ஆனந்தராஜ் ஒரு பெரிய தாதா. அவரைக் கண்டால் ஊரே நடுங்குகிறது.ஆனந்தராஜ் நாய் ஏஞ்சலினாவைக் கடத்தியது வடிவேலு தான் என்று தெரிந்து, அவரைத் தேடிக் கொல்லத் துடிக்கிறார்.
ஆனந்தராஜ் வடிவேலுவைப் பிடிக்கத் தனது படையை அனுப்புகிறார்.

பயந்து போன வடிவேலு தங்கள் குடும்ப வளர்ப்பான செல்ல நாயைத் தேடிச் செல்கிறார்.அந்த நாய் வந்தால் செண்டிமெண்டாகத் தனது கஷ்டமெல்லாம் தீரும்,செல்வம் வந்து சேரும் என்று நம்புகிறார். எனவே தேடிப் பயணப்படுகிறார்.அவர் தனது குடும்பச் சொத்தான நாயைக் கண்டுபிடித்தாரா? ஆனந்தராஜ் ஆட்களிடம் சிக்கினாரா? என்பது தான் மீதிக்கதை.

படம் தொடங்கும் போதே வடிவேலு தோன்றிய பழைய படங்களிலிருந்து பல்வேறு கெட்டப்புகளைப் திரையில் காட்டி ரசிகர்களைக் குஷிப்படுத்துகிறார்கள்.இவ்வளவு தோற்றங்களில் வடிவேலு நடித்துள்ளாரா என்று ஆச்சரியமாக இருக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலுவைத் திரையில் பார்ப்பது பெரிய ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

நாய் சேகர் பாத்திரத்தில் அவர் செய்யும் அலப்பறைகள் அதிரடி சிரிப்பு வெடிகள்.
அவருடன் இருக்கும் அல்லக்கைகள் செய்யும் தத்துப்பித்துத்தனங்கள் பிஜிலி வெடிகள்.

கால மாற்றத்தில் பேய்கள் சிரிக்க வைக்கின்றன. முன்னாள் வில்லன்களும் சிரிக்க வைக்கிறார்கள்.
முன்னாள் வில்லனான
ஆனந்தராஜ் தோன்றும் காட்சிகள் அவரது வில்லத்தனத்தை மறந்து சிரிக்க வைக்கின்றன.

நாய் சேகர் படத்தின் இரண்டாவது பாதியில் தனது பாரம்பரிய நாயைத் தேடிச் செல்லும் பயணம் பிரம்மாண்டமான காட்சிகளாக விரிகிறது.
அந்த நாய் பெரிய அரண்மனையில் பாதுகாப்பாகவும் பெரிய காவலுடனும் இருப்பது விழிகளை
விரிய வைக்கும் பிரம்மாண்டம் .

ஒவ்வொரு காட்சியும் கண் கொள்ளாத பிரமாண்டமாகவும் சிரிக்க வைக்கும் படியும் அமைப்பதற்காக இயக்குநர் சுராஜ் உழைத்துள்ளார்.நாய்கள் கடத்தி வைத்திருக்கும் இடம், நாய்கள் பராமரிக்கும் இடமெல்லாம் மிகப்பெரியதாக செட் போட்டுப் படமாக்கி உள்ளார்கள்.

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வழக்கம் போல தனது பணியைச் செய்துள்ளார்.
அவரது பின்னணி இசையும் பாடல் இசையும் பிரம்மாண்டத்திற்குப் பலம் சேர்க்கின்றன.
மொத்தத்தில் லைக்காவின் பிரம்மாண்டத்தில் முழு நீள பிரம்மாண்டமான காமெடி திரைப்படமாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் அமைந்து இருக்கிறது.
திரையரங்கு வருபவர்களுக்கு சிரிப்பு விருந்து உத்திரவாதமாக இப்படம் அமைந்துள்ளது.
வடிவேலு ரிட்டர்ன்ஸ் என்று உரைப்பதுடன் அவர் திரை வாழ்க்கைக்கு “எண்டே கிடையாது “என்று கூறுகிறது இந்தப் படம்.