Latest:
திரை விமர்சனம்

நான் மிருகமாய் மாற… திரை விமர்சனம்

தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கும் ஒரு சராசரி இளைஞனின் வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழும் ஒரு சம்பவம் எப்படி அவனை வேட்டையாடும் மிருகமாய் மாற்றுகிறது என்பதே இந்த படத்தின் கதை.

சவுண்ட் இன்ஜினியர் சசிகுமாரின் தம்பி ஒரு தொழிலதிபரை காப்பாற்றப்போய், அதனால் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். கொன்றவர்களை அடையாளம் கண்டாலும் அவர்களைக் காட்டிக் கொடுக்காமல் தப்பிக்க விடும் சசிகுமார், தானே அவர்களுக்கு முடிவுரை எழுதுகிறார்.

வெகுண்டெழுந்த ரவுடிகளின் தம்பி விக்ராந்த் தனது தம்பிகளின் சாவுக்கு சசிகுமாரின் குடும்பத்தை நிர்மூலம் செய்து விடுவதாக போனில் அச்சுறுத்துகிறார். அதற்கேற்ப தனது அடியாட்கள் மூலம் சசிகுமாரின் தங்கையை கடத்தி தாக்கியதில் அவள் மரண விளிம்பில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள்.

இப்போது விக்ராந்த் சசிகுமாரிடம், ‘‘உன் தம்பி யாரை காப்பாற்றினானோ அதே தொழிலதிபரை நீ போய் கொலை செய்து விட்டால் உன் வீட்டில் அடுத்தடுத்த தாக்குதல்கள் நிகழாது என்க…… சசிகுமார் தொழிலதிபரை கொல்ல முயற்சி எடுக்கிறாரா? அல்லது குடும்பத்தினரை வில்லனின் ஆவேசத்துக்கு பலி கொடுக்கிறாரா? என்பது அதிரி புதிரி ரணகள ஆட்ட கிளைமாக்ஸ்.

அப்பா-அம்மா, மனைவி குழந்தை என மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் ஒரு சராசரி நகர இளைஞனை கண்முன் நிறுத்துகிறார், சசிகுமார். தம்பியின் எதிர்பாராத மரணத்திற்காக கலங்கி அழுவதும், அதற்கு பழி தீர்க்க பொங்கி எழுவதும் என இரு வித முகங்களையும் காட்டி அதிர வைக்கிறார். ரவுடிகளால் வெட்டுப்பட்ட தங்கையை மருத்துவமனையில் சேர்த்து விட்டு ‘அவள் யாருடனோ ஓடிப்போய் விட்டாள்’ என்று பெற்றவர்களிடமே கதறும் இடத்தில் நம் கண்களை குளமாக்கி விடுகிறார்.

இடைவேளைக்குப்பின் வந்தாலும் கொடூர வில்லத்தனத்தில் விக்ராந்த் காட்டியிருப்பது டன் கணக்கில் பயம். சசிகுமாரின் மனைவியாக ஹரிப்பிரியா கணவரின் திடீர் திடீர் மாற்றங்களை கண்டு திகில் அடையும் இடங்களில் நடிப்பு முத்திரை. அந்த குட்டிப் பாப்பாவுக்கும் அப்பா சசிகுமாருக்குமான அன்யோன்யம் அட்டகாச அமர்க்களம்.

ஒரு கூட்டுக்குடும்பம் ஒரு திடீர் மரணத்தில் எதிர்பாராதவிதமாக எப்படி நிலை குலைகிறது என்பதை காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குனர் சத்யசிவா தன் இருப்பை பதிவு செய்து விடுகிறார். ஜிப்ரானின் பின்னணி இசை கூடுதல் பலம். வீட்டுக்குள் இருக்கும் மொத்தக் குடும்பத்துக்கும் தெரியாமல் 6 பேரை அங்கேயே சசிகுமார் போட்டுத் தள்ளும் இடம் மட்டும் இது சினிமா என்பதை நினைவூட்டுகிறது.