சினி நிகழ்வுகள்திரை விமர்சனம்

‘கலகத் தலைவன் ‘விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின், ஆரவ், நிதி அகர்வால், கலையரசன்,அங்கனாராய், அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன் ‘ .
இயக்கம் மகிழ் திருமேனி.தயாரிப்பு ரெட் ஜெயன்ட் மூவிஸ்.

மகிழ்திருமேனி திரை மொழியை நன்கு அறிந்தவர். காட்சிகளை அழுத்தமாகவும் எடுக்கத் தெரிந்தவர் .ஆக்சன் திரில்லர் படங்கள் இயக்குவதில் கை தேர்ந்தவர்.

உதயநிதி ஸ்டாலின் வெறும் பொழுதுபோக்கு நாயகன் என்ற தளத்திலிருந்து மேம்பட்டு வரவேண்டிய கட்டத்தில் இருக்கிறார். நெஞ்சுக்கு நீதி படம் அதற்கான ஓர் ஆரம்பம்.

இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலின் ,மகிழ்திருமேனி என அவர்கள் இருவரும் இணைந்துள்ள இப்படம் கூடுதல் கவனம் பெறுகிறது.

படத்தின் கதை என்ன?
இப்படம் பேசுவது என்ன?

ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஒரு புதிய வாகனத்தை சந்தைப்படுத்துகிறது. ஆனால் அதில் இருந்து வரும் புகை மாசு அரசு அனுமதித்ததை விட அதிகமாக இருக்கிறது. ஆனால் அது ரகசியமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அது வெளியே வருகிறது.இதனால் அந்த நிறுவனத்திற்கு தொழிலில் சிக்கல் நேர்கிறது.

தங்கள் தொழிலுக்கு எதிரான ரகசியங்களை வெளியே கசிய விட்டவர்கள் யார் எனப் பதறுகிறது கார்ப்பரேட்.
கசிய விட்ட கறுப்பாடுகளைப் பிடிப்பதற்காக வீரியமான கூலிப்படையை
ஏவுகிறது.சந்தேகப்படுபவர்களை எல்லாம் சித்திரவதை செய்கிறது.
அதற்காக திரை மறைவில் இயங்குபவர்தான் ஆரவ்.

ரகசியங்களைக் கசிய விட்டவர்கள் யார்? அதை ஆரவ் கண்டுபிடித்தாரா?இல்லையா என்கிற பரபரப்பான கதை தான் படம்.

எப்போதும் எளிமையான கதையை எடுத்துக் கொண்டு தனது திறமையான திரைக்கதையாலும் அழுத்தமான காட்சிகளாலும் பரபரப்பான படமாக அமைத்து வழங்குபவர் தான் இயக்குநர் மகிழ்திருமேனி.

அப்படித்தான் இந்தப் படத்திலும் கார்ப்பரேட், அதனால் பாதிக்கப்படும் சாதாரண மனிதன் என்கிற கதையை எடுத்துக்கொண்டு தனது புத்திசாலித்தனமான திரைக் கதையால் சுவாரசியமான காட்சிகளால் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.

இந்த சமூகத்தில் நோய்க்கிருமி போல் பரவி இருக்கும் கார்ப்பரேட் நிறுவனம் அதற்குத் துணை போகும் அதிகார வர்க்கம், அவர்களுக்குக் கைக்கூலியாகச் செயல்படும் திரை மறைவு மாஃபியாக்கள், இதனால் அவதிக்குள்ளாகும் மக்கள் என பலரும் பேசத் தொடங்கும் விஷயத்தை இதில் பேசியிருக்கிறார்.
ஆனால் பிரச்சாரம் போல் தெரியாமல் விறுவிறுப்பாகக் கூறி வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர்.

வழக்கமாக இது மாதிரி முதலாளிகளை வில்லன்களாகவும் அவர்களை எதிர்க்கும் ஆவேசமுள்ள இளைஞனை கதாநாயகனாகவும் காட்டுவது வழக்கம் .ஆனால் இதில் வில்லனைக் கொண்டு வந்து கதாநாயகனைத் துரத்தும் வகையில் கதையைச் சுவாரஸ்யப் படுத்திருக்கிறார்கள்.அந்த நீயா நானா பரபரப்பு கடைசி வரை பராமரிக்கப்பட்டுள்ளது சிறப்பு.

நல்லதொரு பரபரப்பான திரைக்கதையில் அலட்டிக் கொள்ளாமல் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார் உதயநிதி.

மிகைப் படுத்தாத காட்சிகளில் எதிரியை சமாளிப்பது, நம்பும் படியான சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளது என பல இடங்களில் பளிச்சிடுகிறார்.

அவரை பொழுதுபோக்கு கதாநாயகன் என்கிற நிலையில் இருந்து வேறு இடத்திற்கு இட்டுச் செல்கிறது இந்தப் படம்.

புத்திசாலித்தனமான நகர்வுகள் மூலம் செயல்படும் வில்லனுக்கு சரியான போட்டியாக உதய் வருகிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு இணையான வில்லனாக நடித்துள்ளார் ஆரவ்.
இறுக்கமாக உடம்பை வைத்துக்கொண்டு கொடூரத்தை கண்களில் காட்டி நடிப்பில் விஸ்வரூபம் எடுத்து வெளியே வந்துள்ளார் ஆரவ்.இதற்குத்தானே ஆசைப்பட்டார் ஆரவ் ?.

காதல் காட்சிகள் உள்பட தான் தோன்றும் காட்சிகளில் அழகான நடிப்பின் மூலம் திரை ரசிகர்களைக் கவர்ந்து மனதில் நிறைந்து கொள்கிறார் நிதி அகர்வால்.
கலையரசன் தனக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார்.

படத்தில் வெறுமனே கதாநாயகனை மையப்படுத்தாமல் உயர்த்திப் பிடிக்காமல் நடித்திருக்கும் அனைவருக்கும் நடிப்பு வாய்ப்புகளை வழங்கியுள்ளார் இயக்குநர்.

ஒளிப்பதிவு தில்ராஜ். படத்தொகுப்பு ஸ்ரீகாந்த். இருவரும் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.

திருச்சியில் ரயில் நிலைய காட்சிகள், உச்சகட்ட காட்சிகள் சிறப்பான ஒளிப்பதிவுக்கான சிறு சாம்பிள்கள்.

ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையில் வேறொரு அவதாரம் எடுத்து வெளிப்பட்டுள்ளார் .
பாடல்களுக்கான இசை அரோல் கரோலி.அவரும் குறை இல்லாமல் செய்துள்ளார்.

கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான படமல்ல .கார்ப்பரேட்களின் அத்துமீறல்களுக்கு எதிரான படம். கார்ப்பரேட்டுகளுக்கு கூடுதல் சலுகைகள் கொடுப்பது தவறு எனக் கூறும் கதை. அவர்களுக்கு கடிவாளம் போடக்கூடிய படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று இயக்குநர் கூறியுள்ளார்.

‘கலகத்தலைவன்’ உதயநிதி ஸ்டாலினை ஒரு கமர்சியல் கதாநாயகன் தளத்தில் இருந்து உயர்த்தி மேலே கொண்டு சென்றுள்ள படம்.