சினிமா செய்திகள்திரை விமர்சனம்

செஞ்சி பட விமர்சனம்

கணேஷ் சந்திரசேகர், ரஷ்ய நடிகை கெசன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம். எழுதி, இயக்கி, தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர்.
ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி உள்ள இந்த படத்தை ஆக்சன் ரியாக்சன் வெளியிடுகிறது. 18-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

இது புதையல் வேட்டை சார்ந்த கதை.

பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள். வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் உள்ளே நுழைகிறாள். அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை ரரசித்துப் பார்க்கிறாள். ஆனாலும் அங்கே ஏதோ ஒரு அமானுஷ்யம் அவளுக்குத் தட்டுப்படுகிறது. தைரியமாக இருந்தாலும் மனதிற்குள் ஒரு பயம் வருகிறது.
அங்கே ஒரு ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதில் ஏதோ ரகசியம் இருப்பதாகப் படவே தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனை நாடுகிறாள். அவர் அதை உற்று நோக்கிய போது அதற்குள் ஏதோ ஒரு ரகசியம் புதைந்திருப்பதாகத் தோன்றுகிறது. அது பற்றி மேலும் அறிய விரும்பும்போது அதில் ஒரு புதையலுக்கான ரகசிய குறியீடுகள் உள்ளதாக அவருக்குத் தெரிகிறது.
இதனால் சோபியாவுடன் இணைந்து புதையலை தேட ஆரம்பிக்கிறார்.ர கசிய குறிப்புகளை வைத்துக்கொண்டு கிடைத்த குறியீடுகளின் படி தேடுதல் வேட்டை தொடர்கிறது. அந்தப் புதையலை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் செஞ்சி படத்தின் கதை.
ஒரு புதையல் வேட்டை போல் இந்தக் கதை தொடங்குகிறது. படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்குள் ஒரு பரபரப்பு நம்மைத் தொற்றிக் கொள்கிறது. ஏதோ ஒரு ரகசியம், மனித அறிவுக்குக் கட்டுப்படாத ஒன்று இருப்பதாக நம்மை அழைத்துச் செல்கிறது.

புதையல் வேட்டை ஒரு பக்கம் நகரும் போது,இன்னொரு பக்கம் ஐந்து சிறுவர்கள் ஊருக்குள் அடிக்கும் லூட்டியைக் காட்டுகிறார்கள். இவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தால், இரண்டாவது பாதியில் தொடர்பு ஏற்படுத்துகிறார் இயக்குநர்.
புதையல் தேடுவதற்கான படிநிலைகளில் ஒரே நட்சத்திரத்தில் அதுவும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஐந்து பேர்தான் அந்தப் புதையலை எடுப்பதற்குத் தகுதியானவர்கள் என்று ஒரு நிபந்தனை வருகிறது.
அளவில்லாமல் சுட்டித்தனம் செய்யும் அந்தச் சிறுவர்கள் பெற்றோர்களால் தண்டிக்கப்படவே வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் காடு மேடு என சுற்றி கடைசியில் புதையல் இருக்கும் இடத்தை அடைகிறார்கள்.
அவர்களுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று இரண்டாவது பாதியில் புதிரை அவிழ்க்கிறார் இயக்குநர்.

படத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இயக்குநர் கணேஷ் சந்திரசேகர் நடித்துள்ளார். வசன உச்சரிப்பில் அவர் இன்னமும் தேற வேண்டும். ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனம் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.

வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலேயப் பெண்மணியாக ரஷ்ய நடிகை கெசன்யா நடித்துள்ளார். தோற்றத்திலும் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் தேர்ந்த நடிகைக்கான அடையாளம் தெரிகிறது.

படத்தில் சுட்டித்தனம் செய்யும் அந்த ஐந்து சிறுவர்களும் (மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன்
மாஸ்டர் தர்சன் குமார், மாஸ்டர் விதேஷ் ஆனந்த், மாஸ்டர் சஞ்சய்,
பேபி தீக்ஷன்யா) மனதில் பதிகிறார்கள்.
படத்தில் மூன்று பாடல்கள். இதில் தங்கப் புதையலைக் கண்டுபிடித்த பிறகு பாடும் ‘இது தங்கம்’ என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. பாடல் காட்சிகளின் இசையை விட பின்னணி இசையில் இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷ் பிரகாசிக்கிறார்.

படத்தில் வரும் லொகேஷன்கள் அருமை. கூடவே பிரமிப்பும்.. அதிலும் கல்லார் காட்டுப்பகுதியில் கேமராவும் ஒரு ஹீரோவாகி விடுகிறது.
காட்சிகள் செஞ்சி தொடங்கி பல்வேறு நிலப்பகுதிகளிலும் படமாகி உள்ளது. அந்தக் காற்று செதுக்கிய சிற்பங்களாக இருக்கும் அந்தப் பாறைகள் நடுவே சென்று சந்து பொந்து இடுக்கு வழியில் எல்லாம் புகுந்து புறப்பட்டு உள்ளது கேமரா. ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஜிண்டேவின் கேமராக் கண்கள் காட்சியை கண்களுக்கு நெருக்கமாக்கி விடுகின்றன.

தமிழ் சினிமாவுக்கே உரித்தான வழக்கமான காதல் காட்சிகள், டூயட், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் என்ற எந்த மசாலா அம்சமும் இல்லாமல் இப்படம் உருவாகி உள்ளது பெரிய ஆறுதல்.

நமது வரலாறு புதைந்து கிடக்கும் இடங்களைத் தேடித்தேடி படமாக்கி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட காட்சிகளைப் பார்க்கும் போது நமது தொன்மங்கள் மீது நமக்கு ஆர்வம் வந்து விடுகிறது. மீண்டும் வரலாற்றைப் புதுப்பித்துக் கொள்கிற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

சிறுவர்கள் அடிக்கும் லூட்டிகள் சம்பந்தப்பட்ட நீளமான காட்சிகளுக்கு சற்று கத்திரி போட்டிருக்கலாம். அதே சமயம் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் முதிர்ச்சி தெரியவில்லை. மேலும் சில காட்சிகளை நேர்த்தியாக்கி இருந்தால் படம் மேலும் மேம்பட்டிருக்கும்.

நமது பழங்கால வரலாற்று உணர்வை வரவழைக்கும் முயற்சியாக உருவாக்கிய விதத்தில் செஞ்சி படம் வெற்றி பெற்றுள்ளது. குறைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அந்த நிலக்காட்சிகளுக்காகவே படத்தை ரசிக்கலாம்.

மொத்தத்தில் ‘‘செஞ்சி’ வரலாற்று உணர்வை நினைவூட்டும் ஒரு வணிகப்படம்.