திரை விமர்சனம்

பரோல் படவிமர்சனம்

லிங்கா, ஆர் எஸ் கார்த்தி, ஜானகி சுரேஷ் நடிப்பில் துவாரக் ராஜா இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் பரோல்.
ஆராயிக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் கரிகாலன் மீது ஆராயிக்கு உயிர். இதனால் இரண்டாவது மகன் கோவலனுக்கு தன்னுடைய அண்ணன் மீது கோபமும் பொறாமையும்..
இந்நிலையில் அம்மாவை தவறாக பார்த்தவரை கல்லால் அடித்து கொலை செய்து விடுகிறான் கரிகாலன். இதனால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட, அங்கு இவரை சிலர் தவறாக பயன்படுத்த… அவர்களையும் கொலை செய்து விடுகிறார்.
அம்மா ஆராயி மகன் கரிகாலனை வெளியே கொண்டு வர போராட, தம்பி கோவலனோ அண்ணன் வெளியே வரக்கூடாது என திட்டம் போடுகிறான். இப்படியான நிலையில் அம்மா திடீரென உயிரிழக்க, மூத்தவன் கொள்ளி போட வேண்டும் என்ற சம்பிரதாயப்படி ஜெயிலில் இருக்கும் அண்ணனை பரோலில் எடுக்க முனைகிறான் தம்பி. முடிந்ததா? அண்ணன் வந்து அம்மாவின் காரியங்களை செய்தானா என்பது கிளைமாக்ஸ்.

அண்ணனாக லிங்கா, தம்பியாக ஆர்எஸ் கார்த்திக் என இருவரும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்துக்கு பெரிய பலம் சேர்த்து உள்ளனர். இவர்களின் அம்மாவாக ஜானகி சுரேஷ் பொருத்தமான தேர்வு. வழக்கறிஞராக வரும் வினோதினி தனது இயல்பான நடிப்பால் அந்த கேரக்டருக்கு பெருமை சேர்க்கிறார்.

இயக்குனர் துவாரக் ராஜா வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்து முடிவு வரை படத்தை விறுவிறுப்பாக கொண்டு போகிறார்.. படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை கூடுதல் பக்கபலம்.

வடசென்னை பின்னணியில் ஒரு அதிரடி ஆட்டம் மறுபடியும்…வெற்றிகரமாய்.