‘லவ்டுடே ‘விமர்சனம்

பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ் ,ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம்.இப்படத்தை எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
படத்தின் ஆரம்பத்திலேயே மொபைல் போன் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைக் காட்டி இந்தப் படத்தில் மொபைல் போன் பெரும் பங்கு வகிக்கப் போகிறது என்பதை உணர்த்திவிடுகிறார் இயக்குநர்.
லவ்டுடே படத்தின் கதை எதைப்பற்றியது? இந்தப் படத்தில் தெளிவான ஒன்லைன் உள்ளது .
விழுந்து விழுந்து காதலிக்கும் காதலர்கள் நடுவே வழக்கம் போல பெண்ணின் தந்தை குறுக்கே வருகிறார். அவர் பெரிய ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்யவில்லை.
காதலனின் குணம் என்ன அவன் நல்லவனா கெட்டவனா என்பதைப் பற்றியெல்லாம் விரிவாக பெரிதாக பேசவில்லை.
திருமணம் செய்து கொள்வதற்கு, ஒரே ஒரு நிபந்தனை போடுகிறார்.
இருவரும் ஒரு வாரம் தங்கள் மொபைல் போனை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகும் பிடித்திருந்தால் திருமணம் என்கிறார். அவ்வளவுதான் கதையில் சுவாரஸ்யம் பற்றிக் கொள்கிறது.
எல்லாரது வாழ்க்கையிலும் அந்தரங்கப் பந்தல் உண்டு.
எல்லாரது வாழ்க்கையிலும் திரைமறைவுப் பக்கங்களும் உண்டு என்பதை உணர்ந்துதான் அந்தக் காலத்தில் நதிமூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்றார்கள்.
அப்படி இந்த பிரதானபாத்திரங்களின் நதி மூலம் பார்க்கப் போக, தோண்ட தோண்ட புதையலாய் கிளம்பும் சம்பவங்கள்தான் கதைக்களத்தில் சுவாரசியமான காட்சிகளாக மாறி இருக்கின்றன.
கொஞ்சம் கொஞ்சமாக இருவரது கதாபாத்திரங்களும் சேதாரம் ஆகிறது. இருவரிடையே சந்தேகமும் வெறுப்பும் தலை விரித்தாடுகிறது.இறுதியில் ஊகங்கள் கற்பிதங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு உண்மையான நம்பிக்கை கொள்வதுதான் நிஜமான காதல் என்று முடிகிறது படம்.
இயல்பான காட்சிகள் பாத்திரங்களின் சின்ன சின்ன அசைவுகள் மூலம் சுவாரஸ்யத் தோரணம் கட்டியுள்ளார் இயக்குநர். அதுவே படத்திற்குக் கலகலப்பு தருகிறது.
இக்கால இளைஞர்களின் செயல்பாடுகளைக் காட்ட அவர்களது அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து புறப்பட்டுள்ளார் பிரதீப்.
இக்கால இளைஞர்களின் செயல்களை சில்மிஷங்களை அழகாகக் காட்டியவர். வாழ்க்கையில் பெரிய தத்துவங்களை போகிறபோக்கில் சொல்கிறார்.
காதலர்கள் முறிவு பிரிவு கடந்து மீண்டும் சேர்வதற்கான ஒரே காரணம் பரஸ்பர நம்பிக்கைதான் என்று முடிகிறது கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும்
பிரதீப் ரங்கநாதன் தனுஷை நினைவூட்டி அவரைப் போன்றே குணச்சித்திரம் காட்டி நடித்துள்ளார்.
நாயகி இவானா தோற்றம் அழகு நடிப்பு எனஎல்லாவற்றிலும் குறை வைக்காமல் மனதில் பதிகிறார்.
நாயகியின் அப்பாவாக வரும் சத்யராஜ் அதிகம் பேசாமல் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அசத்தல் நடிப்பை வழங்கி உள்ளார்.
நாயகனின் அம்மா ராதிகாவும் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பை வழங்கியுள்ளார்.யோகி பாபு நல்லவராக நடித்து அனுதாபத்தினைப் பெறுகிறார்.
மொபைல் போன் செய்யும் விபரீதங்களைப் படத்தில் அடுக்கடுக்காக விவரிக்கிறார்கள்.
இளமை கலகலப்பு சுவாரஸ்யம் நிறைந்த இளைஞர்களுக்கான கொண்டாட்டமாக இந்தப் படம் உருவாகி உள்ளது.
லவ் டுடே நிச்சயம் வரவேற்கப்படும்.
