மீண்டும் படம் இயக்கும் ‘தினந்தோறும்’ வெற்றிப்பட இயக்குனர் நாகராஜ் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது எத்தனை சத்தியமானது என்பதற்கு இயக்குனர் ‘தினந்தோறும்’ நாகராஜின் வாழ்க்கையும் உதாரணம். 1998 ஆம் ஆண்டு இவர் இயக்கிய படம் ‘தினந்தோறும்’. முரளி – சுவலட்சுமி நடித்த இந்த படம் வெளிவந்தபோது பத்திரிகை உலகம் கொண்டாடித் தீர்த்தது. இந்தபடம் வெளிவந்த ஒரு வாரத்திற்குள் அன்றை ய முன்னணி தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள் நாகராஜுடன் இணைந்து பணியாற்ற விரும்பி தூதனுப்பியதும் நடந்தது.
படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘வானம் நீதானா அந்த நிலவும் நீதானா’ என்ற பாடல் பெரிய ஹிட்டானது. தெலுங்கில் ’மனசிச்சி சூடு’ பெயரில் படம் ரீமேக்கானது. படத்தின் வெற்றியை தொடர்ந்து நாகராஜின் பெயருடன் படத்தின் பெயரும் ஒட்டிக்கொண்டு ‘தினந்தோறும்’ நாகராஜ் ஆனார்.
ஆனால் காலவெள்ளத்தில் நாகராஜ் திசை மாற, தொடர்ந்து படங்கள் இயக்க முடியாமல் போனது.
பிறகு கெளதம் மேனன் இயக்கிய ‘மின்னலே, காக்க காக்க’ படங்களுக்கு வசனம் எழுதிய நாகராஜ், மீண்டும் 2013 ஆண்டு ‘மத்தாப்பு’ என்ற படத்தை இயக்கினார். அதனைத்தொடர்ந்து தமிழ் சினிமா பட விவாதங்கள் பலவற்றில் பங்கேற்ற நாகராஜ், ‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்பதுபோல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்குகிறார்.
Q சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சசிகுமார்.R இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார்.
ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்த படத்துக்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
C. சத்யா இசையமைக்க, காடன், இடிமுழக்கம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடனம் – சாண்டி
ஸ்டண்ட் – தினேஷ் சுப்பராயன்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்.
