சினிமா செய்திகள்

சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘ஐமா’

புதுமையான உணர்வை கொடுக்கும் தகுதியான படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடம் அங்கீகாரமும் வரவேற்பும் கிடைக்கும் காலம் இது. தமிழ் ரசிகர்களின் ரசனையை மட்டும் நம்பி உருவாகி இருக்கும் படம் தான் ‘ஐமா’. ஏனென்றால் இது வழக்கமான த்ரில்லர் படம் அல்ல.புதுமையை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள திரைப்படம் தான் ஐமா
அது என்ன ஐமா?
ஐமா எனும் சொல்லில் (ஐ ) எனும் எழுத்து தெய்வத்தையும் (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது ஆகவே ஐமா எனும் சொல் இறைவனின் வலிமை என்கிறார் இப்படத்தின் இயக்குனர்

எந்த உயிர்களுக்கும் தீங்கு நினைக்காத இருமனிதர்களுக்கு ஏற்படும் தடைகளையும் துரோகங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளும் சுவாரசியத்தை சொல்லும் விளையாட்டின் ஆட்டம் தான் ‘ஐமா’

துரோகங்கள் துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் தடைகள் தடுமாற்றங்கள் இவற்றை எதிர்கொள்ளும் அனுபவத்தில் ஆரம்பிக்கும் ஆற்றலின் விளக்கமே ஐமா திரைப்படம்
எளிதாக புரியும்படி சொன்னால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினைகள் கட்டாயம் உண்டு

இப்படத்தை எழுதி இயக்கியவர் ராகுல்.ஆர். கிருஷ்ணா. இவர் தமிழ், மலையாளத்தில் சில குறும்படங்களில் பணிபுரிந்துள்ளார். ‘ஆருயிரே’ எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார் இவர் தமிழ்ப் படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட ஒரு புது இயக்குனர்.

தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ,’ஐமா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் நாயகனாக யூனஸ்,
நாயகியாக எல்வின் ஜூலியட், முக்கிய கேரக்டர்களில் அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன்,சிஷிரா, சாஜி ஆகியோருடன் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமியும் திருப்புமுனை கேரக்டரில் வருகிறார்.

படத்திற்கு இசையமைத்துள்ளவர் கே.ஆர். ராகுல். இவர் பல விளம்பரப் படங்களில் பணியாற்றியுள்ளார் சில குறும்படங்களிலும் சில மலையாள திரைப்படங்களிலும் இசையமைத்துள்ளார்

பாடல்களை புது கவிஞர் அருண்மணியன் எழுதியுள்ளார்.

ஒளிப்பதிவு விஷ்ணு கண்ணன். படத்தொகுப்பு அருண் ராகவ்.
இந்த திரில்லர் திரைப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள். சண்டைப் பயிற்சி அஷ்ரப் குருக்கள், கலை இயக்குனர் ஜீமோன்.
படம் பற்றி இயக்குநர் ராகுல் ஆர். கிருஷ்ணா கூறுகையில், ‘‘பல தடைகளை தாண்டி என் கதையை திரைப்படமாக கொண்டு வந்துள்ளேன்.படத்தை பார்ப்பவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறி காட்சியை பார்க்காமல் தவறினால் கூட படத்தின் கதையே புரியாமல் போகும் வாய்ப்பு உண்டு. சஸ்பென்ஸ் சுவாரஸ்யம் நிறைந்த ஒரு திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. 9 கதாபாத்திரங்களைச் மட்டும் சுற்றித்தான் இந்த கதையே நடக்கிறது .படப்பிடிப்பு கேரளாவில் குட்டிக்காணம், குமுளி, பாலக்காடு போன்ற பகுதியில் நடைபெற்றுள்ளது’’ என்றார்.