சினி நிகழ்வுகள்

‘மகிழ்ச்சி’யை தொடர்ந்து ‘மாவீரா’ வ.கௌதமன் இயக்கி நடிக்கும் புதிய படம்

கனவே கலையாதே, மகிழ்ச்சி’ வெற்றித் திரைப்படங்களுக்கு பிறகு வ.கௌதமன் தனது புதிய படைப்பிற்கு ‘மாவீரா’ என பெயரிட்டதோடு படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். புகழ்பெற்ற ‘தலைமுறைகள்’ நாவலை ‘மகிழ்ச்சி’ என திரைப்படமாகவும், ‘சந்தனக்காடு’ வீரப்பனின் வரலாற்றை நெடுந்தொடராகவும் உண்மைச்சம்பவங்களை மட்டுமே மையப்படுத்தி படைப்புகள் செய்த வ.கௌதமன் ‘மாவீரா’வில் முதன் முதலாக மண்ணையும், பெண்ணையும் மானத்தையும் காத்து வாழ்ந்த ஒரு முந்திரிக்காட்டு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை படைப்பாக்கம் செய்கிறார்.
‘எதிரியை கொல்லணும் என்று நினைப்பதை விட அவன் மனதை வெல்லணும்’ என்கிற இலக்கோடு இப்படைப்பிருக்கும் என நம்பிக்கை தரும் இயக்குனர், அதே நேரத்தில் கேட்பார் எவருமில்லை என்கிற தீய எண்ணத்தோடு எவர் வரினும் ‘அத்து மீறினால் யுத்தம்’ என்கிற பிரகடனத்தையும் ‘மாவீரா’ பேசும் என்கிறார்.
பரபரப்பான சம்பவங்களோடு ஆக்ஷன் கலந்து அதிரடியாக உருவாகும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஒளிப்பதிவு வெற்றிவேல் மகேந்திரன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது. சண்டைப் பயிற்சி ‘ஸ்டண்ட்’ சில்வா. நடனம் தினேஷ். மக்கள் தொடர்பு நிகில் முருகன்.
வி.கே புரொடக்ஷன் குழுமம் முதன் முறையாக தயாரிக்கும் இப்படைப்பில் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகையர்கள் பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது.