சர்தார் திரை விமர்சனம்

ராணுவ உளவாளியாக இருக்கும் சந்திரபோஸ் என்ற சர்தார் தேசத்துரோகி முத்திரை குத்தப்பட்டு என்ன ஆனார் என்றே தெரியாத நிலையில், அவரது மகன் போலீஸ் ஆய்வாளர் விஜய பிரகாஷ் அதற்காக அவமானம் சுமக்கிறார்.
இன்னொரு பக்கம் தண்ணீரை வியாபாரமாக்கும் சர்வதேச கும்பலை எதிர்த்து போராடுகிறார், லைலா. பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரால் உடல் நலிவுற்ற மகனுக்காகவும் இந்த போராட்டம். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண லைலா மிக முக்கியமான கோப்புகளை எடுக்க முயற்சிக்கிறார். இது தெரிய வர தண்ணீர் மாபியாக்கள் லைலாவை கொன்று அதை தற்கொலை என்று நம்ப வைக்கிறார்கள்.
லைலா தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு பிடிக்கும் இன்ஸ்பெக்டர் கார்த்தி, இதற்கு பின்னால் இருக்கும் சம்பவங்களை ஆராயத் தொடங்குகிறார். இதன்மூலம் இந்தியா முழுக்க ஒருவழி குடிநீரை அமைத்து அதை மக்கள் விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு திட்டமிட்டுள்ள தண்ணீர் மாபியாக்களின் சதி தெரிய வர…
இந்நிலையில் எதிரிகள் தாங்கள் அடைத்து வைத்த அப்பா கார்த்தியை கொல்ல முடிவு செய்ய…அதை முறியடிக்கும் அப்பா , மகனுடன் இணைந்து எதிரிகளின் தண்ணீர் மோசடிக்கு வேட்டு வைப்பது திகுதிகு திரைக்கதை.
படத்திற்கு மிகப்பெரிய பலமே நடிகர் கார்த்தி தான். அப்பா, மகன் என டபுள் ஆக்ஷனில் இவர் ஆடுவது அதிரிபுதிரி ஆட்டம். உளவாளி கேரக்டருக்காக ஏகப்பட்ட கெட்டப்புகள், நாடக கலைஞராக பல்வேறு வேஷம் போடுவது என அப்பா கேரக்டர்கார்த்தி ஒருபுறம் என ரவுண்டு கட்டி அடிக்க, பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டராக மகன் கார்த்தி இன்னும் அட்டகாசம். கிளைமாக்சில் இரு கார்த்தியும் வரும் இடத்தில் நடிப்பும் ஆக்ஷனும் வேற வேற லெவல்.
அப்பா கார்த்திக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடிப்பில் அட்டகாசம். மாமா மகன் தன்னை தவிர்க்கும் காரணத்தை தெரிந்து கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் காதலை சுமந்து கொண்டிருக்கம் அந்த கிராமத்து மாமா மகளை கண்முன் கொண்டு வருகிறது. மகன் கார்த்தியின் ஜோடியாக வரும் ராசிகண்ணா போராட்ட குணம் கொண்ட வழக்கறிஞராக கவர்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு லைலா வருகிறார். நீதிக்காக போராடுகிறார். செத்துப் போகிறார். அவரது மகனாக வரும் சுட்டிப் பையன், சித்தப்பா முனீஸ்காந்த் மனதை டச் செய்யும் கேரக்டர்கள்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஒ.கே. ரகம். பின்னணி இசையில் பின்னியெடுக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்சின் கேமரா அதிரடி காட்சிகளில் ஜாலம் காட்டுகிறது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அப்பா கார்த்தி தொடர்பான பிளாஷ்பேக் காட்சிகள் ஜீவனுள்ளவை. பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் விபரீதத்தையும் தண்ணீர் மாபியாக்களின் பழி வாங்கலையும் ராணுவ உளவாளி குடும்ப பின்னணியில் விறுவிறு திரைக்கதையாக்கிய விதத்திலேயே இது வழக்கமான படம் அல்ல என்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.
சர்தார்ஜிக்கு சல்யூட் வைத்து கொண்டாடலாம்.
