ஆற்றல் பட விமர்சனம்

பணம், நகை வைத்திருப்பவர்களின் தகவல்களை ரகசியமாக சேகரிக்கும் மர்ம கும்பல், அவர்களை கொலை செய்து கொள்ளையடிக்கிறது. சென்னையின் பல இடங்களில் தங்களது கைவரிசையை காட்டி வரும் இந்த மர்ம கும்பலால் பாதிக்கப்படும் நாயகன் விதார்த், அந்த கும்பலின் பின்னணியை எப்படி கண்டுபிடித்து, அவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கிறார் என்பது ஆற்றல் மிக்க கிளைமாக்ஸ்.
நாயகன் விதார்த், கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அப்பா மீதான பாசத்தில் பளிச்சிடுகிறார். காதலி மீதான ஆரம்ப கட்ட தயக்கம் அழகான கவிதை. அதிரடியிலும் அதிக ஆவேசம் தெரிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் ஷ்ரிதா ராவ், காதல் காட்சிகளில் சுலபத்தில் பாசாகி விடுகிறார். வில்லன்களிடம் சிக்கி உயிர் பயத்தில் போராடும் இடத்தில் அனுதாபம் சம்பாதித்துக் கொள்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணாவின் அறிமுகமே மிரட்டுகிறது. பாக்சிங் தான் பண்ணுகிறாரோ என்று பார்த்தால், அத்தனை குத்துக்களும் மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த எதிரிக்குத் தான் என்பது வில்லத்தனத்தின் உச்சம். விதார்த்தின் தந்தையாக நடித்திருக்கும் சார்லி, விதார்த்தின் நண்பராக நடித்திருக்கும் விக்னேஷ்காந்த், தோழிக்காக விதார்த்தை கலாய்க்கும் வித்யூ ராமன், அம்மா ரமா என அத்தனைபேரும் கேரக்டர் சிறப்பில் பளிச்சிடுகிறார்கள். ஒரு காட்சியில் டிராபிக் போலீசாக வையாபுரியும் வந்து போகிறார்.
காட்சிகளின் இயல்புக்கு கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு சேர்க்கிறது.
பாடல்கள் ஏறக்குறைய இருந்தாலும் பின்னணி இசையில் வலுவாக தன்பெயரை பதித்து விடுகிறார், இசையமைத்த
அஸ்வின் ஹேமந்த்.
கதை எழுதி இயக்கியிருக்கும் கே.எல்.கண்ணன், நகரங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை மையப்படுத்தி ஒரு கமர்ஷியல் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். பணம், நகை வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்கள் எப்படி சேகரிக்கப்படுகிறது என்ற தகவலை சொல்லிய விதம் நல்லதோர் எச்சரிக்கை மணி. அதற்காக கொடூர வில்லன்களுக்கெல்லாமா பிளாஷ்பேக் வைப்பார்கள்? விதார்த்தின் தந்தை தொடர்பான அந்த கிளைமாக்ஸ் எதிர்பாராதது.
படத்தில் நாயகன் கட்டளைப்படி டிரைவர் இல்லாமலே ஓடும் அந்த புதுமைக் கார் பற்றி இன்னும் என்னனென்னவோ விஷயம் வைத்திருப்பார்கள் என்று பார்த்தால்… அட, போங்கப்பா.
