ஜல்லிக்கட்டை முன்னிலைப் படுத்தும் ‘பேட்டைக்காளி’ இணையத் தொடர்

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், ஆஹா தமிழ் ஒடிடி தளத்தின் படைப்பாக உருவாகியுள்ள ‘பேட்டைக்காளி’ இணைய தொடரை எல்.ஏ.ராஜ்குமார் இயக்கியிருக்கிறார். இதில், கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி ஷீலா, ‘மேற்கு தொடர்ச்சி மலை’ அந்தோணி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இத்தொடருக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு.
இந்த இணையத் தொடரின் டிரைலர் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியுடன் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
படம் பற்றி இயக்குனர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், “முன்பெல்லாம் மனிதர்கள் காடுகளில் அலைந்து திரிந்தனர். காளைகள் அவர்கள் வாழ்வில் வந்த பிறகுதான் அவர்கள் விவசாயத்தை கற்றுக் கொண்டனர். எனவே, காளைகள் வந்த பிறகுதான் மனிதர்களின் வாழ்வில் கலாச்சாரம் மெல்ல வளரத் தொடங்கியது. ஆதிகாலத்தில் மனிதர்கள் காளைகளை அடக்கியது இப்போதும் நம் கலாச்சார விளையாட்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் நாட்டிலேயே நம் மாநிலத்தில் தான் நடக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தில் காளைகளின் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜல்லிக்கட்டு உலகில் இதுவரை சொல்லப்படாத கதைகளை ஆராயவும் இந்த இணையத் தொடரை உருவாக்கியுள்ளோம்” என்றார்.

